Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 072 (Two Lords)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

10. இரண்டு எஜமான்கள் உண்டா? (மாற்கு 12:35-37)


மாற்கு 12:35-37
35 இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? 36 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. 37 தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

இயேசு ஒரு மெய்யான மனிதராக தாவீது ராஜாவின் சந்ததியில் வந்தார். பழைய உடன்படிக்கையின் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா இந்த ராஜாவின் வம்சத்தில் தோன்றுவார் என்பதை அறிந்திருந்தார்கள். அவன் அநேக தவறுகளை செய்திருந்தான். ஆனாலும் உண்மையாக மனந்திரும்பினான். மனந்திரும்பும் அனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக மாறினான். இறைவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினான். அவருடைய மன்னிப்பில் எல்லாப் பாவங்களும் மூடப்படுகின்றன என்று விசுவாசித்தான். ஆண்டவர் அவனுக்கு துதியின் ஆவியைக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகள் எல்லோரையும்விட இவன் இறைவனை அதிகமாக மகிமைப்படுத்தி வாழ்ந்தான். இன்றும் நாம் அவனுடைய சங்கீதங்களில் பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் கூடிய துதிப்பாடல்களைக் காண்கிறோம். அவனுடைய வார்த்தைகளை மறுபடியும் சொல்லி, அவனுடைய சங்கீதங்களை மகிழ்ச்சியுடன் பாடுகிறோம்.

இறைவன் தாவீதிற்கு தீர்க்கதரிசன வரத்தைக் கொடுத்தார். அவன் எப்போதும் இறைவனுடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாயிருந்தான். ஆண்டவர் அவனுடைய சந்ததியில் தோன்றுவார் என்பதை அவனுக்கு வெளிப்படுத்தினார். அவர் மனிதன் மட்டுமல்ல. அவர் இறைவனுமாக இருக்கிறார் என்பதை ஆண்டவர் அவனுக்கு வெளிப்படுத்தினார். இந்த முற்கால தீர்க்கதரிசனம் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. இறைவனுடைய ஆவியை ஏற்றுக்கொண்டவர்கள் ஒளியூட்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய இரகசியத்தை அறிந்துகொள்கிறார்கள்.

எல்லாக் காலங்களுக்கும் முன்பு இறைவனால் பிறந்தவர் கிறிஸ்து என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் கன்னி மரியாளிடத்தில் மனுவுருவானார். அதாவது தாவீதின் சந்ததியில் தோன்றினார். அவருடைய மீட்பின் மரணம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றில், அவருடைய இறைதன்மை மிக முக்கியமான ஒன்றாகும்.

பிதாவிடம் பரமேறிச்சென்றதன் மூலம் தாவீதின் தீர்க்கதரிசனத்தில் உள்ள இறைவனுடைய வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றினார். “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்” (சங் 110:1).

இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவராய் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள். இயேசு தெளிவாகக் கூறினார். “இது முதற்கொண்டு மனுஷகுமாரன் வல்லமை பொருந்தியவராய் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

நீங்கள் சொல்லக்கூடும். அப்படியென்றால் இரண்டு ஆண்டவர்கள் இருக்கிறார்கள்.

இல்லை என்பது தான் இதற்குப் பதில். ஆண்டவர் ஒருவரே. ஆனால் அவர் இரு நபர்களில் தோன்றுகிறார். திரியேகத்தை மறுத்து ஒரே ஆண்டவர் என்று கூறுவோரும் இரண்டு அல்லது மூன்று கடவுள்கள் என்று கூறுவோரும் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். இறைவன் ஒருவராக மூன்று நபர்களில் முழுமையான ஐக்கியத்துடன் இருக்கிறார். இயேசு இதை அறிக்கையிட்டார். சத்தியவான் எவனும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறான்.

இன்று உலகில் நாம் இரு குழுக்களைக் காண்கிறோம். இயேசுவை இறைமகன், இரட்சகர், மீட்பர், ஆண்டவர் என்று காண்கிறவர்களுடைய விசுவாசத்திற்கு அவரே அஸ்திபாரம். அவர்களுடைய நம்பிக்கையின் முடிவு அவரே. இரண்டாவது குழுவினர் இயேசுவின் தெய்வீகத்தை மறுக்கிறார்கள். அவரை ஒரு மனிதனாகவும், பெரிய அடையாளங்களையும், அற்புதமான வரங்களையும் காண்பிக்கும் தீர்க்கதரிசியாகவும் பார்க்கிறார்கள். இவர்கள் இறைவனுடன் ஒப்புரவாகுதலினால் உண்டாகும் ஆசீர்வாதங்களை அறியாதவர்களாகவும், அதில் மகிழ்ச்சியடையாதவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் தன்னுடைய குமாரனை அனுப்பிய வரலாற்று உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீ கிறிஸ்துவின் சிநேகிதனா? புத்திரசுவீகாரத்தினால் அவருக்குச் சகோதரனா? அல்லது அவருடைய தெய்வீகத்தை நீ புறக்கணிக்கிறாயா? பரிசுத்த ஆவியானவர் இந்த இரு குழுக்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டைக் காண்பிக்கிறார். விசுவாசியாதவர்களை தாழ்மையுள்ள இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவரின் பாதத்தில் இறைவனுடைய தூதர்கள் தாழ்த்திப் போடுவார்கள். உனது எதிர்காலம் எப்படி இருக்கும்? நீ என்றென்றும் அவருடன் அரசாளுவாயா? நீ இந்த உண்மையை உணர்கிறாயா? கிறிஸ்து தமது பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். பரிசுத்த ஆவியானவருடன் உள்ள ஐக்கியத்தினால் அவருடன் அரசாளுகிறான். மக்கள், குழுவினர், கொள்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நம்முடைய ஆண்டவர் உயிருடன் இருக்கிறான். இந்த உலக வரலாற்றின் இறுதி இலக்கு அவருடைய மகிமையின் வருகை ஆகும். நீ அவரை வரவேற்க ஆயத்தமா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். நீர் எனது ஆண்டவர், எனது இறைவன். நீர் ஜீவனுள்ளவர். பிதாவுடன் என்றென்றும் அராசாள்பவர். உமது நாமத்தை விசுவாசிப்பவர்களோடு இணைத்து, என்னையும் நீர் மீட்டிருக்கிறீர். நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டிருக்கிறீர். பிசாசின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்திருக்கிறீர். வெள்ளியினாலும் பொன்னினாலும் அல்ல, உமது விலையேறப் பெற்ற இரத்தத்தினாலும், உமது பாடுகளினாலும் மீட்டுள்ளீர். நான் உமக்குச் சொந்தமாக நித்திய ராஜ்யத்தில் வாழச் செய்வீர். உமது அன்பிற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நீதி, பரிசுத்தம், மகிழ்ச்சியுடன் உமக்குப் பணிசெய்ய உதவும் நீர் உயிர்த்தெழுந்ததையும், ஜீவனோடு என்றென்றும் அரசாளுவதையும் விசுவாசிக்கிறேன். ஆமென்.

கேள்வி:

  1. இரண்டு ஆண்டவர்கள் இருக்கிறார்களா?

மனனவசனம்:
“கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை
உமக்குப்பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய
வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.”

(சங்கீதம் 110:1)

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)