Previous Lesson -- Next Lesson
3. கிறிஸ்துவின் பிரியாவிடைச் சமாதானம் (யோவான் 14:26-31)
யோவான் 14:26
26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் எனக்குப் புரிந்துவிட்டது என்று யார் சொல்லக்கூடும்? அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனப்பாடம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடியவன் யார்? காட்டிக்கொடுப்பவனுடைய தீய செயலைப் பற்றியும் அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றியும் சீஷர்கள் கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தனர். யோவானைத் தவிர இயேசு தம்முடைய பிரியாவிடைப் பேச்சில் பேசிய காரியங்களை யாரும் நினைவில்கொள்ளவில்லை.
அவர்களுடைய மறதியைக் குறித்து அவர் அவர்களைத் தேற்றி, பரிசுத்த ஆவியானவர் வந்து அனைத்தையும் அவர்களுக்கு நினைப்பூட்டுவார் என்று வாக்களித்தார். இயேசுவின் சிந்தையோடும் நோக்கத்தோடும் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்வார். அவர் பெலவீனமானவர்களைப் பாதுகாப்பார். இயேசு அறிஞர்களையும் தர்க்க சாஸ்திரத்தில் தேறியவர்களையும் தம்முடைய சீஷர்களாகத் தெரிவுசெய்யவில்லை. மாறாக உலகத்தின் ஞானிகளை வெட்கப்படுத்தத்தக்கதாக அவர் சாதாரண மீனவர்களையும், வரிவசூலிப்பவர்களையும், பாவிகளையும் தெரிந்துகொண்டார். இரக்கத்தினால் பிதாவானவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, இயலாதவர்களைத் தம்முடைய பிள்ளைகளாக்கி, தாழ்மையின் வரங்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் சுயத்தை வெறுத்து நீதியுள்ள வாழ்க்கை நடத்தும்படி செய்கிறார்.
இயேசு ஒரு கவிதை நூலை வெளியிடவில்லை. தம்மைப் பற்றிய கருத்துக்களை மறந்துபோகும் நபர்களிடத்தில் அவர் ஒப்புவிக்கவும் இல்லை. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரே தமது சீடர்களுக்கு நினைப்பூட்டி அவற்றை ஞாபகப்படுத்தி வழிநடத்துவார் என்று அவர் உறுதியுடன் இருந்தார். அவர் திரும்ப வரும்வரை நற்செய்தி நூல்களே பரிசுத்த ஆவியானவருடைய சிறப்பான செயலாக இருக்கிறது. அவர் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை மனிதர்களுடைய மொழியில் சொல்லி, சீடர்களுடைய ஞாபகத்தில் அவற்றை இருத்தினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அவற்றை நினைப்பூட்டிப் போதித்தார். அப்போஸ்தலர்களுடைய சாட்சிகளினாலே குமாரன் மகிமைப்படும்படி, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் போதனைகளை அவர்களில் நிலைநிறுத்தினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். அவர்கள் தாழ்மையோட தாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தையும் அறிவையும் நமக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக அவர்கள் எந்த வார்த்தைகளையும் இயேசு சொன்னதாகச் சேர்த்து எழுதவில்லை. அவர்களுடைய பிரசங்கங்கள் அந்தக் காலத்துடன் அழிந்துபோன வெறும் மனிதப் பேச்சுக்கள் அல்ல. அவர்கள் எழுதிய வரலாற்று நிகழ்வுகளை பரிசுத்த ஆவியானவர் இன்றுவரை புத்துயிருட்டிப் பாதுகாத்து வருகிறார். நாம் நற்செய்திகளை வாசிக்கும்போது இன்று நடந்த நிகழ்ச்சிகளை வாசிப்பதைப்போல இருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் கேட்கும்போது அது அவருடைய சத்தம் நம்முடைய காதுகளில் விழுவதைப்போல் உள்ளது. சீஷர்கள் ஆரம்ப நற்செய்தியைத் திரித்து எழுதிவிட்டார்கள் என்று கூறுபவர்கள் சத்திய ஆவியைப் புறக்கணிக்கிறார்கள். அவர் அன்பின் ஆவியாகவும் சத்தியத்தின் ஆவியாகவும் இருப்பதால் அவரிடத்தில் எந்த வஞ்சனையும் இல்லை.
யோவான் 14:27
27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
தம்முடைய பிரியாவிடைப் பேச்சின் இறுதியாக, இந்த உலகத்தால் கொடுக்க முடியாத சமாதானத்தை தம்முடைய சீடர்களுக்குத் தருவதாக அவர் வாக்களிக்கிறார். அவர் அவர்களைவிட்டுப் போனாலும் அவருடைய சமாதானம் திருச்சபைகள் மீது தங்கியிருக்கும்படி தம்முடைய சொத்தாக அதை விட்டுச் சென்றார். உணர்ச்சிபூர்வமான பத்திரிகைகளைப் போல அவர் போலிச் சமாதானத்தைப் பற்றி அவர் பேசவில்லை. மக்கள் இறைவனை விட்டு விலகி வாழ்வதாலும் அவருடைய கோபம் மனிதர்களுடைய பாவங்கள் மீது வருவதாலும் சோதனைகள் நிச்சயமாக வரும். இயேசு வேறு வகையான சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார். இறைவனோடு நாம் ஒப்புரவாகும்போது பாவங்கள் மன்னிக்கப்படுவதால் பெற்றுக்கொள்ளும் சமாதானத்தை அவர் குறிப்பிடுகிறார். அந்த சமாதானம் மனசாட்சியிலும் திருச்சபையிலும் நிலைத்திருக்கும். இறைவனிடத்திலிருந்து வருபவரும் இறைவனிடம் திரும்புகிறவருமாகிய முடிவற்ற வல்லமையின் ஆவியானவரே கிறிஸ்துவின் சமாதானமாயிருக்கிறார்.
பொய்யும், வெறுப்பும், தீவிரவாதமும், கொலையும், பொறாமையும், பேராசையும், அசுத்தமும் பூமியில் நிரம்பி காணப்படுகிறது. இந்த சாத்தானுடைய அலைகள் நம்மை ஆழ்த்திவிடக்கூடாது என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் இறைவனில் வாழ்கிறான். இறைவனும் அவரில் வாழ்கிறார். இது உங்களைப் பொறுத்தவரை உண்மைதானா? பெருங்காற்று வீசி, பெருமழை சொரிந்தபோது இயேசு அமைதலாக படகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். தண்ணீர் படகை நிரப்பியபோது அனைவரும் பெருங்கலக்கம் அடைந்தார்கள். இயேசு எழுந்து காற்றை அதட்டினார். அது அமைதலாயிற்று. “அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்பட்டீர்கள்?” என்று தமது சீஷர்களைப் பார்த்து இயேசு கேட்டார்.
யோவான் 14:28-31
28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். 30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில் 31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
இயேசு அவர்களைவிட்டுப் போய்விடுவார் என்பதை மீண்டும் சொன்னபோது சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அவருடைய பிரிவுக்கான நேரம் நெருங்கி வந்தது. அவர் போவேன் என்று கூறினாலும் திரும்ப வருவேன் என்பதையும் உறுதிசெய்தார். “நான் என் பிதாவிடம் போகிறபடியால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். என்னுடைய சொந்த இடத்திற்குப் போவதால் நீங்கள் மகிழ்ந்திருங்கள். என்னுடைய சிலுவைப் பாடுகளைப் போல கடினமானதை நான் உங்கள் மீது சுமத்த மாட்டேன். நான் மரணபயத்திலிருந்து உங்களை விடுவிப்பேன். நீங்கள் பிதாவோடு இணைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய செய்தியாயிருக்கிறது. நீங்கள் என்னை நேசித்தால் நான் பரலோகத்திற்குப் போகிறேன் என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்கள். என் பிதாவை நான் என்னிலும் மேலாகக் கருதுகிறேன். நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். உங்கள் மீதான என்னுடைய அன்பும் ஒருபோதும் குறைந்துபோவதில்லை. நான் அவருடைய ஆவியில் உங்களிடத்திற்கு வருவேன்.”
பிதாவின் மேன்மையை சீடர்கள் உணர்ந்து அவரிடம் நெருங்கும்படியாக அவரைக் குறித்த மேன்மையான படத்தை அவர்களுக்கு இயேசு கொடுத்தார். அதோடு அவர்கள் மரணத் தருவாயை நெருங்கிவிட்ட தங்கள் ஆண்டவரையும் பிரிய வேண்டியுள்ளது. அவற்றிற்காக இயேசு அவர்களை ஆயத்தப்படுத்தினார். தாம் மரணத்தைச் சந்திக்கப்போவதால் இறைவன் தனக்கு எதிராக இருப்பதாக சீடர்கள் கருதக்கூடாது என்று இயேசு விரும்பினார். பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான சமாதானம் நிலையானதாக இருப்பதால் பிதா குமாரனை அவருடைய மரணத்திற்குப் பிறகும் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வார்.
இதற்குமேல் பேசவேண்டிய தேவையில்லை. பிதா சொன்னபடி தன்னுடைய சிலுவையின் மூலம் உலகத்தை இரட்சிக்கும் பணியை முடிப்பதற்கு இயேசு எழுந்துவிட்டார். இந்த மீட்பு அனைத்து மனுக்குலத்திற்குமானது. ஒவ்வொரு மனிதனும் இறைவனுடைய முடிவற்ற அன்பை அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட அந்த மேலறையைவிட்டு இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். கிதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து அவர்கள் காரிருளுக்குள் கடந்து சென்றார்கள். காட்டிக்கொடுப்பவன் வந்து சேரவேண்டிய ஒலிவ மலையிலுள்ள கெத்சமனே தோட்டத்திற்கு அவர்கள் நடந்து சென்றார்கள்.
விண்ணப்பம்: கர்த்தாவே உம்முடைய சமாதானத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்கள் இருதயத்தைச் சுத்திகரித்து எங்களுக்கு ஓய்வு வழங்கியிருக்கிறீர். வெறுப்பு, போராட்டம், தீமை ஆகியவற்றின் பேரிரைச்சலின் நடுவில் எங்களுக்கு ஏற்படும் பயங்களையும் கவலைகளையும் சோர்வுகளையும் நீர் எங்களுக்கு மன்னித்தருளும். எங்களைச் சமாதானத்தில் வைத்து காத்துக்கொள்ளும் ஆவியானவருக்காக நன்றி. எங்களுக்கு ஏற்படும் பாவச்சோதனை நேரங்களில் நாங்கள் பாவத்திலோ, அவிசுவாசத்திலோ அல்லது சாபத்திலோ விழுந்துவிடாதபடி உம்முடைய வல்லமையுள்ள வார்த்தைகளை எங்களுக்கு நினைவுபடுத்தும். அப்போது நாங்கள் நம்பிக்கையுடன் விண்ணப்பித்துக்கொண்டு உமக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம். எங்கள் வழிகள் பிதாவினிடத்தில் நடத்திச் செல்லும்படி நீர் அருளியதால் உமக்கு நன்றி. எங்களுக்காக பரலோகத்தில் ஒரு இடத்தை நீர் ஆயத்தம் செய்வதால் ஆட்டுக்குட்டியாகிய உமக்கு முன்பாக நாங்கள் பணிந்துகொள்கிறோம்.
கேள்வி:
- இறைவனுடைய சமாதானம் என்பது என்ன?
கேள்வித்தாள் – 5
அன்பின் வாசகரே, இந்த 14 கேள்விகளில் 12-க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- மரியாளுடைய அபிஷேகத்தை இயேசு ஏன் ஏற்றுக்கொண்டார்?
- இயேசு எருசலேமிற்குள் வெற்றிபவனியாக நுழைந்தது எதைக் குறிக்கிறது?
- கிறிஸ்துவின் மரணமே சத்தியத்தின் மகிமையாக ஏன் கருதப்படுகிறது?
- ஒளியின் பிள்ளைகள் என்பதன் பொருள் என்ன?
- கிறிஸ்துவில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை என்ன?
- இயேசு தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவியதன் பொருள் என்ன?
- கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?
- யூதாஸ் இயேசுவை விட்டுப் போனபோது எவ்விதமாக கிறிஸ்து தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார்?
- அன்பே கிறிஸ்தவர்களை வேறுபடுத்திக்காட்டும் ஒரே அடையாளமாக இருப்பது ஏன்?
- கிறிஸ்துவுக்கும் பிதாவாகிய இறைவனுக்கும் இடையிலான உறவு என்ன?
- நம்முடைய விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்க அதற்கான முதன்மையான நிபந்தனை என்ன?
- பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களாக இயேசு குறிப்பிடுபவை யாவை?
- கிறிஸ்துவின் மீதான அன்பு நம்மில் எவ்வாறு வளருகிறது? பரிசுத்த திரித்துவ இறைவன் நம்மீது எவ்வாறு இறங்குகிறார்?
- இறைவனுடைய சமாதானம் என்பது என்ன?
உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:
Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net