Previous Lesson -- Next Lesson
1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)
ரோமர் 1:22-23
22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
அழியக் கூடிய மனிதன் இறைவன் இல்லாமல் வாழ இயலாது. அவன் தன்னுடைய இருதயத்தில் ஆண்டவரை மறுதலிக்கும் போது, மற்ற தெய்வங்களுக்கு நேராகத் திரும்புகிறான். இறைவன் உண்டு என்ற நம்பிக்கை அவனுக்குள் வைக்கப்பட்டுள்ளது. எல்லா நாத்திகர்களும், அவர்கள் படித்தவர்கள் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும் தங்களுடைய சொந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். பெருந்திரளான மக்கள் தங்களுடைய தலைவர்களை ஆராதிக்கிறார்கள். ஒவ்வொருவனும் வசதியுடன் சொகுசாக வாழுவதற்கு பணத்தையும், ஐசுவரியத்தையும் நாடுகிறான். படித்தவர்கள் தங்களுடைய புத்தகங்களில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்களுடைய வெறுமையான தத்துவங்கள் அவர்களை பெருமைக்கு நேராக நடத்துகின்றன. அவர்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் என்ன விலை கொடுத்தாவது வெற்றியடைய துடிக்கிறார்கள். மாணவர்கள் கலாச்சார முன்னேற்றத்தை சார்ந்திருக்கிறார்கள். செயல்படுவோர் புரட்சியின் ஆவிக்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். ஒவ்வொருவரையும் பயம் ஆட்கொண்டுள்ளது. ஏனெனில் இறைவனின் சமாதானம் அவர்கள் இருதயத்தில் காணப்படவில்லை.
சில டாக்சி ஒட்டுநர்கள் தங்களது வாகனங்களின் கண்ணாடியில் தீமைக் கண் தங்களை தாக்காதபடி அட்டையை வைத்திருக்கிறார்கள். இது இறைவன் அவர்களை பாதுகாக்கிறார் என்ற உண்மையை மறுதலிக்கிற செயல் ஆகும். சிலர் தாங்கள் பாதுகாக்கப்படுவதற்கு தாயத்து போன்ற ஒன்றை அணிந்து கொள்கிறார்கள். அநேக மக்கள் குறிசொல்லுகிற மக்களை நாடிச் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் முறை வரும் வரை வரிசையில் நின்று காத்திருந்து இறந்தவர்கள், ஆவிகளுடன் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். முதலாவது கட்டளைக்கு எதிராக மனிதன் தினமும் மில்லியன் கணக்கான முறை பாவம் செய்கிறான். “நான் உன் இறைவனாகிய கர்த்தர், என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்”.
இறைவனின் மகிமையைக் குறித்த சத்தியத்தைக் காணாதபடி உலகம் குருடாயிருக்கிறது. தங்கள் வெறுமையான இருதயங்களில் மக்கள் நம்பிக்கை மற்றும் சமாதானத்தைத் தேடி போகிறார்கள். அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
எந்த ஒரு கவனஈர்ப்பும் செய்யாத நிலையிலும் மக்கள் விண்வெளி மனிதர் குறித்த செய்திகள், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் குறித்த செய்திகளைக் காண ஆர்வம் காண்பிக்கிறார்கள். இறைவனுடைய கட்டளைகளுக்கு செவிகொடுக்க, அவைகளில் நடக்க அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் யுத்தங்களில் ஒருவரையொருவர் அழிக்கிறார்கள். அவர்களுடைய சிருஷ்டிகரை மறுதலித்து தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
உன்னை நீயே ஆராய்ந்து பார். நீ சுயத்தை நேசிக்கிறாயா? அல்லது உன்னைப் படைத்தவரை விட வேறு யாரையாவது நீ அதிகமாய் நேசிக்கிறாயா? உனது வாகனத்தின் இயந்திரத்தை நீ சார்ந்திருக்கிறாயா? உனது தோற்றத்தை நீ நேசிக்கிறாயா? மக்கள் மத்தியில் நீ மத்தியஸ்தரை தேடுகிறாயா? உன்னுடைய எல்லா உலகப் பற்றுகளும் இறைவனை மட்டுப்படுத்துகின்றன. உனது ஆண்டவரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. உனது விக்கிரகங்கள், கடவுள்கள் மற்றும் உனது சுயம் ஒழியட்டும். உன்னிடத்தில் இறைவனின் மகிமை பிரகாசிப்பதாக.
விண்ணப்பம்: பிதாவே நீர் எங்களை உமது சாயலில் படைத்ததற்காகவும், உமது குமாரனில் உம்மை வெளிப்படுத்தியதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது அன்பை எல்லா மனிதர்களுக்கும் வெளிப்படுத்தும். முழு உலகிலும் இருந்து அவிசுவாசம் மறையட்டும். உமது பிதாவின் நாமம் பரிசுத்தப்படட்டும். நாங்கள் மற்ற கடவுள்கள் அல்லது விக்கிரகங்களை கொண்டிருந்தால் எங்களை மன்னியும். எங்கள் சிந்தனைகளில் இருந்து அவைகளை துடைத்து எறிந்துவிடும். உமது குமாரன் மட்டுமே எங்களில் என்றென்றும் ஆளுவாராக.
கேள்வி:
- இறைவன் இல்லாமல் வாழுகின்ற ஒரு மனிதன் ஏன் தனக்காக உலக கடவுள் ஒன்றை உண்டாக்கிக் கொள்கிறான்?