Previous Lesson -- Next Lesson
2. துரோகி வெளிப்படுத்தப்படுகிறான் (யோவான் 13:18-32)
யோவான் 13:18-19
18 உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். 19 அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யூதாஸ் அன்பும் தாழ்மையும் உள்ளவனாக, சேவை செய்கிறவனாக வாழாமல் துயரமுள்ளவனாக வாழ்ந்தான். அவன் தீவிரவாதத்தையும், வஞ்சகத்தையும், ஆக்கிரமிப்பையும் தெரிந்துகொண்டான். இயேசுவை வஞ்சகத்தினால் ஆண்டுகொள்ள அவன் விரும்பினான். இயேசு ஆட்சியைப் பிடிக்கும்படி அவரை நிர்ப்பந்திக்க அவன் நினைத்திருக்கலாம். ஆனால் அவன் தன் இருதயத்தில் இயேசுவுக்கு எதிரியாகவும் இயேசுவை மிதித்து, அவருடைய மரணத்தைத் திட்டமிடவும் விரும்பினான். அன்பிற்கும் பெருமைக்கும் இடையிலான விசுவாசத்தை அவன் உணரத் தவறினான். இயேசுவோ தன்னைத் தாழ்த்தினான். யூதாஸ் அகங்காரத்தையும், அகந்தையையும், தீமையையும் திட்டமிட்டான், இயேசுவோ தாழ்மையாகவும் மென்மையாகவும் இருப்பதைத் தெரிந்துகொண்டார்.
இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்படும் தருணத்திற்காக தம்முடைய சீடர்களை அவர் ஆயத்தப்படுத்தினார். அவர் புறவினத்து மக்களுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டாலும் அவர்கள் சந்தேகிக்கக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்தார். அவர் தன்னுடைய ஆள்த்துவத்தில் கர்த்தராயிருந்து, தனது பெலவீனமான நேரத்தை முன்கூட்டியே அறிந்து, தன்னை “நானே” என்று அழைத்தார். மோசேக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போது இந்தப் பெயரினாலேயே வெளிப்படுத்தினார். தம்முடைய சீடர்கள் அவிசுவாசத்திலும் சோதனையிலும் விழுந்துவிடாதபடி தமது தெய்வீகத்தன்மையைக் குறித்த இவ்வித கூற்றுகளினாலே அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.
யோவான் 13:20
20 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு தம்முடைய கைது மற்றும் மரணத்தைக் குறித்த சீடர்களின் பயத்திலிருந்து அவர்களை விடுவித்தார். அவருடைய கட்டளையும் அவருடைய பாதுகாப்பும் அவர்களைக் காத்துக்கொள்ளும். இயேசு தம்முடையவர்களை அனுப்பிவிட்டு அவரும் அவர்களுடன் செல்கிறார். அவருடைய வேலைக்காரர்கள் தங்களுடைய சொந்தப் பெயரில் செல்லாமல் உயர்த்தப்பட்ட தங்கள் கர்த்தருடைய பெயரில் செல்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் பரிசுத்த திரித்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாகிறார்கள். இந்தத் திருப்பணி கடினமான ஒன்றுதான்: அது சுய வெறுப்பிற்கான அழைப்பு; எதிரிகளை நேசிக்கவும், ஏழ்மையின் நடுவிலும் மற்றவர்களின் எதிர்ப்பின் நடுவிலும் இறைவனுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கான அழைப்பு. இவையனைத்தின் நடுவிலும் இறைவன் தங்களில் வாழ்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் அவர்கள் செல்லுகிறார்கள். அவருடைய பணியை முடிப்பதற்காக அவர் விரும்பும் இடத்திற்கெல்லாம் அவர்கள் சென்று பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உம்முடைய வேலைக்காரனாகா விட்டால் உம்மில் நிலைத்திருக்க முடியாது என்பதை நான் உணர எனக்கு உதவும். உம்மை என்னுடைய வாழ்க்கையின் மாதிரியாகக் கொண்டு, திருச்சபையிலும் குடும்பத்திலும் நான் வேலைக்காரனாக நடந்துகொள்ள விரும்புகிறேன். சாத்தானுக்கு என் இருதயத்தில் இடம்தராமல் இருப்பேனாக. நான் சேவை செய்வதைப் பற்றிப் பேசாமல் அதை உம்முடைய ஞானத்தினாலும் வல்லமையினாலும் நடைமுறையில் காண்பிக்க எனக்கு உதவி செய்யும்.
கேள்வி:
- கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?