Previous Lesson -- Next Lesson
8. கிறிஸ்துவைப் பின்பற்றுவோரில் காணப்படும் இறைவல்லமையின் அடையாளங்கள் (மாற்கு 16:17-18)
மாற்கு 16:17-18
17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; 18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
வசந்தகாலம் முடிந்த பிறகு மொட்டுவிட்டு, மலரத்தொடங்கி, கனிகள் வரும்வரை வளர்ச்சிக்கான வல்லமை தேவைப்படுகிறது. ஆவிக்குரிய விதத்திலும் புதிய படைப்பில் இதைப் போலவே வளர்ச்சிக்கான வல்லமையை நாம் காண்கிறோம். கிறிஸ்து திராட்சைச் செடி. விசுவாசிகள் கிளைகள். அவர்கள் தாமாகவே கனி தர முடியாது. எல்லா வல்லமையும், வளர்ச்சியும் ஆண்டவரிடம் இருந்து வருகிறது. அவரே அனைத்திற்கும் ஆதாரம்.
தீமையின் வல்லமைகள் மீது பரலோகம் வெற்றி பெறுவதை நீங்கள் காண்பீர்கள். இயேசு சோதனைக்காரனை மேற்கொண்டார். இப்போது அவனுடைய தந்திரங்களை வெளிப்படுத்துகிறார். ஜீவனுள்ள கிறிஸ்துவின் நற்செய்தி எங்கு முழுமையாகவும், சரியாகவும் போதிக்கப்படுகிறதோ அங்கு தீய ஆவிகள் விலகி ஓடுகின்றன. தத்துவங்களில் உள்ள உண்மையற்ற தன்மைகளை நற்செய்தி தோலுரித்துக் காண்பிக்கிறது. அது பொய்யான பக்தியை கடிந்துகொள்கிறது. பரிசுத்தமானவரை ஒருவரும் திருப்தி செய்ய இயலாது என்பதை கிறிஸ்து நமக்கு காண்பிக்கிறார். கிறிஸ்துவின் ரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது. தீயவனுக்கு நம்மீது எந்த அதிகாரமும் கிடையாது. இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் தெளிக்கப்படுதலில் பங்குபெறுபவர் மீது எந்த அதிகாரமும் கிடையாது. விசுவாசிகள் இணைந்து மன்றாடும் போது நரகத்தின் பிடிகளில் இருப்போரை கிறிஸ்து பாதுகாக்கிறார். இயேசு அவர்களை விடுதலை செய்கிறார். அவர் எதிராளியைத் துரத்துகிறார். அவனுடைய படைகளை முறியடிக்கிறார். சிறைப்பட்டோரை விடுதலை செய்கிறார். இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
இறைவனற்ற மனிதன் துன்மார்க்கமாக பேசுகிறான். அவன் சபிக்கிறான். பொய் சாட்சியிடுகிறான். தன்னையே மகிமைப்படுத்துகிறான், பெரும்பான்மையோருடன் இணைந்து தனது பாவங்களை மறைக்கிறான்.
கிறிஸ்து மனிதனை விடுவிக்கிறார். அவனைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவருடைய ஆவிக்குரிய வல்லமைக்கு உறுதியான சாட்சியாக மாற்றுகிறார். இயேசுவை உறுதியாய் பற்றிக்கொள்கிறவன் புதிய நாவைப் பெறுகிறான். அவன் பொய் சொல்வதில்லை. அவன் தூஷணம் செய்வதில்லை. அசுத்தமான நகைச்சுவைகளில் மகிழ்ச்சி அடைவதில்லை. அவன் சபிப்பதில்லை. அவன் அன்பு மற்றும் சத்தியத்தின் வார்த்தைகளைப் பேசுகிறான். சில சகோதரர்கள், சகோதரிகள் பிறமொழிகளில் பேசும் வரத்தைப் பெறுகிறார்கள். இறைவன் மகிமைப்படுத்தப்படுகிறார். மொழிபெயர்ப்பவர் இல்லாமல் அவர்கள் தானாக அதைப் பேசுவது கிடையாது. அவர்கள் சுயமகிமையின் சோதனையில் வீழ்வது கிடையாது. இறைவனின் ஒவ்வொரு ஈவும் அவரை மகிமைப்படுத்தக் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் என்னுடைய நாவு எனக்குரியது அல்ல. அது இறைவனுக்குரியது. அவர் தமது வார்த்தைகளை எனது வாயில் வைக்கிறார். எனது உதடுகள் அவரைத் துதிக்கின்றன.
ஆண்டவர் தமது சாட்சியைப் பாதுகாக்கிறார். அவர் சாட்சியிடும்படி கட்டளையிடுகிறார். இயேசுவைக் கல்லெறிய முற்பட்டபோது அவர் எதிரிகள் நடுவே இருந்து கடந்து போய்விட்டார். அவருடைய வேளை இன்னும் வரவில்லை. நரகத்திற்கு அவன் மீது எந்த வல்லமையும் கிடையாது. ஆண்டவர் தமது பரிசுத்தவான்களை அற்புதமான செயல்களின் மூலம் பாதுகாப்பதை சபை வரலாற்றில் காண்கிறோம். இருப்பினும் சிலர் இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் அவரை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள். விஷ சிலந்திகள், தேள்கள் சிலரை சேதப்படுத்தாமல் ஆண்டவர் பாதுகாத்திருக்கிறார். சாவுக்கேதுவான கார் விபத்துகள், துப்பாக்கிசூட்டில் இருந்து அவர் சிலரைப் பாதுகாக்கிறார்.
சிலர் மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது இறைவனை துதித்திருக்கிறார்கள். தன்னைச் சுடுகின்ற போர்வீரர்களை நோக்கி ஒருவர் கூறுகிறார்: “மரணமே, விடைபெறுகிறேன். நான் வாழப்போகிறேன்”.
பாடுபடுகிறவர்கள் மீதான கிறிஸ்துவின் இரக்கத்தை நாம் காண்கிறோம். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவருடைய வார்த்தை ஒவ்வொரு வியாதியையும் துரத்துகிறது. திரளான வியாதியஸ்தர் இயேசுவிடம் வந்தார்கள். குருடர்கள், தொழுநோயாளிகளை அவர் சுகமாக்கினார். அவர் மரித்தோரை எழுப்புகிறார். கிறிஸ்தவத்தில் அவருடைய அன்பு ஆழமாக எதிரொலிக்கிறது. அநேகமாயிரக்கணக்கான இல்லங்கள், மருத்துவமனைகள், அனாதை விடுதிகள் மூலம் கிறிஸ்தவர்கள் சேவை செய்கிறார்கள். உயிர்த்தெழுந்தவரின் அன்பை அவர்கள் காண்பிக்கிறார்கள். ஆண்டவர் இன்றும் அநேக வியாதியஸ்தரை சுகமாக்குகிறார். உண்மையுள்ள விண்ணப்பங்கள் மற்றும் மெய் விசுவாசத்தை அவர் காண்கிறார். நீதிமான செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகுந்த பெலனுள்ளதாக இருக்கிறது.
கிறிஸ்துவின் வல்லமை புதிய யுகத்திற்கு நற்செய்தியை கொண்டு வருகிறது. விசுவாசம், மனந்திரும்புதல், பாவஅறிக்கை, கிறிஸ்துவில் நம்பிக்கை, அற்புதங்கள், அடையாளங்கள் இவைகள் அனைத்தும் கிறிஸ்துவை மட்டுமே கணப்படுத்துகின்றன.
சபையை மகிமைப்படுத்துவதற்காக இந்த அடையாளங்கள் நிகழவில்லை. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரே வல்லமை, ஐசுவரியம், ஞானம், கனம், மகிமை, ஆசீர்வாத்தை அடைய தகுதியுள்ளவராக இருக்கிறார் (வெளி 5:12).
விண்ணப்பம்: ஆண்டவரே, நீர் பூமியில் வாழ்ந்தபோது அனைத்து மனிதர்களையும் நேசித்ததைப் போல இன்றும் நேசிக்கிறீர். பிசாசுபிடித்தோர், வியாதியஸ்தர் மீது நீர் இரக்கம் காண்பிக்கிறீர். அவர்கள் உம் மீது வைத்த விசுவாசத்தினால் அவர்களை குணமாக்குகிறீர். உம்மை நம்புவோரை பாதுகாக்கிறீர். ஒவ்வொரு காலையிலும் உமது அற்புதங்கள் புதியவை. என்னைப் பெருகப்பண்ணி, அன்பு, விசுவாசத்தில் நிலைப்படுத்தும். எனது பலவீனத்தில் உமது வல்லமை வெளிப்பட உதவும். நான் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாக மாறச் செய்யும். ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட அருள்தாரும். உம்மை எல்லா நேரங்களிலும் மகிமைப்படுத்துகிறோம். ஆமென்.
கேள்வி:
- கிறிஸ்துவினுடைய அன்பின் செயல்கள் எப்படி விசுவாசிகள் மூலமாக இன்று வெளிப்படுகின்றன?