Previous Lesson -- Next Lesson
3. மகதலேனா மரியாளுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (மாற்கு 16:9-11)
மாற்கு 16:9-11
9 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10 அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11 அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
இயேசு உயிருடன் இருக்கிறார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மரணத்தை மேற்கொண்டு வெற்றி சிறந்தார். யாராவது நித்தியத்திலிருந்து வந்திருக்கிறார்களா என்று அவிசுவாசிகள் மற்றும் ஏளனம் செய்பவர்கள் கேட்டால் நாம் தைரியமாக சொல்ல வேண்டும். “ஆமாம். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மற்றவர்களையும் உயிர்த்தெழுச் செய்கிறார். அவர் இறைவனுடைய ஜீவனின் தன்மையை நிரூபித்தார். அவருடைய ஆவிக்குரிய சரீரம் புதிய படைப்பின் அடையாளமாக உள்ளது. அவர் வியாதிகள், குற்றங்கள், பலவீனங்கள் அனைத்தையும் மேற்கொண்டவர். அவர் உயிருடன் இருக்கிறார். அவர் என்றென்றும் நிலைத்திருப்பவர். அவருடைய ஜீவனிற்கு முடிவில்லை”.
பேதுரு தனது சீஷனாகிய மாற்கு மூலம் குறிப்பிடுகின்ற அறிக்கையின்படி, அவர் ஏழு பிசாசுகள் பிடியில் இருந்து விடுதலைப்பெற்ற மகதலேனா மரியாளுக்கு மீண்டும் காட்சியளித்தார். இரட்சகராகிய இயேசு அவளுக்கு முழு விடுதலை கொடுத்தார். அவளுக்கு இரக்கம் காண்பித்து தனது வல்லமையினால் அவளைக் குணப்படுத்தினார். இயேசு மரணத்தின் மீது மட்டுமல்ல, நரகத்தின் தீய ஆவிகளின் மீதும் வெற்ற பெற்றார். இயேசு வல்லமையுள்ளவர். அவர் நல்ல இரட்சகர்.
பரிசுத்த ஆவியானவர் இன்னும் சீஷர்களின் இருதயங்களில் தங்கியிருக்கவில்லை. இயேசுவை உண்மையாய் பின்பற்றிய பெண்ணிடமும் இல்லை. எனவே இயேசு அவளது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி மகதலேனா மரியாளுக்கு காட்சியளித்தார். அவள் வீழ்ந்துபோகாதபடி அல்லது தீய ஆவிகளினால் மீண்டும் தாக்கப்படாதபடி இயேசு அப்படிச் செய்தார்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் அவருடைய பரிசுத்தத்தை நமக்கு நிரூபிக்கிறது. மாம்சம் மற்றும் பாவத்தின் கட்டுகளில் இருந்து அவர் நம்மை விடுவிக்கிறார். அவர் தம்மைப் பின்பற்றுவோரை பெலப்படுத்துகிறார். அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். பாவத்திற்கு எதிராகப் போராடச் செய்கிறார்.
சிலுவையிலறையப்பட்டவர் மகதலேனா மரியாளுக்கு முன்பாக உயிருடன் நின்றபோது, அவள் பயந்து நடுங்கவில்லை. அவள் தனது பழைய வாழ்க்கையின் மூலம் ஆவிகளுடனான சந்திப்பின் அனுபவத்தைப் பெற்றிருந்தாள். இயேசு ஒருவேளை தூதனைப் போல காட்சியளித்திருக்கக் கூடும். பின்பு அவள் ஆண்டவரை சரியாக அறிந்துகொண்டார். அவருடைய பிரசன்னத்தில் எந்தவொரு வல்லமையும் நிற்காது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவரிடமிருந்து புறப்படும் ஒரு வார்த்தை சாத்தானைத் துரத்தும், பயங்களைப் போக்கும்.
மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவரை சந்தித்ததினால் மகிழ்ச்சியுடன் மகதலேனா மரியாள் ஓடிச் சென்றாள். சீஷர்களுக்கு நடந்ததை அறிவித்தாள். ஆண்டவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறினாள். அவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கினார்கள். அவள் பேசியதை ஒரு பொருட்டாக கருதவில்லை. அவள் கனவு கண்டிருப்பாள் என்று கூறினார்கள். அவர்க்ள இப்படி சொல்லியிருப்பார்கள். “மரியாளே, எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்: கனவுகள், ஆவிகள், பயங்கள். அவருடைய சிந்தனை நல்லது தான். ஆனால் அது உண்மையில்லை”.
மறுதலிப்பு, சிலுவையிலறையப்படுதல், மரணம், இயேசுவின் அடக்கம் ஆகியவற்றிற்கு பின்பு சீஷர்களின் இருதயங்கள் அதிர்ச்சியுற்ற நிலையில் இருந்தன. அவர்கள் எதையும் நம்ப ஆயத்தமாக இல்லை. தங்கள் கனவுகள், எதிர்பார்ப்புகளை புதைத்துவிட்டார்கள். அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டு இருந்தன. இன்றும் சிலர் கடினமான சூழ்நிலைகளின் வழியாக கடந்து செல்லும் போது இதைப்போன்ற அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஆண்டவரின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளை அறிய முடியாமல் போகிறார்கள். அவர்கள் விசுவாசித்தாலும் சரி அல்லது உள்ளான இருதயத்தில் குழப்பமடைந்து, நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாலும் சரி, ஆண்டவர் தொடர்ந்து பணிசெய்கிறார்.
விண்ணப்பம்: ஆண்டவரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். பிசாசுகளின் பிடியில் இருந்த பெண்ணிற்கு விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி நீர் உம்மை அவளுக்கு வெளிப்படுத்தினீர். நீர் ஜீவனுள்ளவர், பரிசுத்தமுள்ளவர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் அசுத்த ஆவிகளின் மீது அதிகாரம் கொண்டிருக்கிறீர். உமது இறைவார்த்தையின் வல்லமையில் நாங்கள் விசுவாசம் வைத்திருக்கிறோம். அது தீய ஆவிகளைத் துரத்தி, மக்களை உம் பக்கம் திருப்புகிறது. அவர்களை உமது பரிசுத்த ஆவிக்குள் உறுதிப்படுத்துகிறீர். நீர் மெய்யாகவே மரணம், சாத்தான் மற்றும் பாவத்தின் மீது வெற்றி பெற்றிருக்கிறீர். உமது நாமத்தினால் என்னையும், உம்மிடத்தில் மன்றாடும் அனைவரையும் காத்தக்கொள்ளும். ஆமென்.
கேள்வி:
- மகதலேனா மரியாளுக்கு இயேசுகிறிஸ்து ஏன் முதலில் காட்சியளித்தார்?