Previous Lesson -- Next Lesson
1. கல்லறையில் கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பமடைந்த பெண்கள் (மாற்கு 16:1-4)
மாற்கு 16:1-4
1 ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3 கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். 4 அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
யூதர்கள் ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யாமல் ஓய்ந்திருக்க வேண்டும் என்று கருதினார்கள். இறைவனுடனான உடன்படிக்கையின் அடையாளமாக கருதப்பட்ட ஓய்வுநாளில் வேலை செய்வது தூஷணமாகக் கருதப்பட்டது. அதை மீறினால் மரணதண்டனை கிடைக்கும். இயேசு பழைய உடன்படிக்கையின் இந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உலக மீட்பின் ஊழியத்தில் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார். இறைவனும் படைப்பின் போது ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
சீஷர்கள் பயத்துடனும், அவநம்பிக்கையுடனும் இருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பின்பற்றியதால் தேசத்தினால் புறக்கணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்று பயந்தார்கள். இயேசுகிறிஸ்து தேசத்தலைவர்களால் ஏமாற்றுக்காரர் என்றும், இறைதூஷணம் செய்பவர் என்றும் கருதப்பட்டார். சீஷர்கள் சாலைகள் அல்லது சந்தைப்பகுதிகளில் காணப்படவில்லை. அவர்கள் யூதர்களை எண்ணிப் பயந்து பூட்டிய அறையில் இருந்தார்கள்.
ஓய்வுநாளைக் குறித்த கட்டளைகளை எண்ணி பெண்களும் இயேசுவின் சரீரத்திற்கு செய்ய வேண்டிய முறைமைகளை சரியாக செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றார்கள். அவர்கள் நறுமணப் பொருட்கள், விலையேறப்பெற்ற வாசனை எண்ணெய் ஆகியவற்றை வாங்கி கொண்டு போனார்கள். அவர்கள் பரிசுத்தமானவரைக் கனப்படுத்த தங்களுடைய பணத்தை செலவழித்தார்கள். அவர்களுடைய சிந்தனைகள் அனைத்தும் தெய்வீக எஜமானின் மரணத்தைக் குறித்து இருந்தது.
வெள்ளிக்கிழமை சிலுவைக்கருகில் நின்ற அதே பெண்கள் தான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விரைந்து சென்றார்கள். அவர்கள் மகதலேனா மரியாளும் ஒருவர். இயேசு அவளிடமிருந்து ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். மேலும் யோவான், யாக்கோபின் தாயும் மற்றப் பெண்களும் இருந்தார்கள்.
கிறிஸ்துவைக் காணும் பரிசுத்தமான பேரார்வத்துடன் அந்தப் பெண்கள் காவல் காக்கப்பட்ட நகரத்தின் கதவு வழியே வெளியே சென்றார்கள். கல்லறையை சூரியன் உதயமாகும் அதிகாலையில் அடைந்தார்கள். கிறிஸ்துவை உண்மையாய் தேடுபவர்களின் அடையாளம் இது தான்: “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்”.
இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பினால், கல்லறையை மூடியிருந்த கல்லைக் குறித்து யோசித்துக்கொண்டே வந்தார்கள். ரோம காவாலளிகள் அதைக் காத்துக்கொண்டிருந்தார்கள். இணைந்து செயல்பட்டாலும் பெண்களால் அந்தக் கல்லைப் புரட்ட முடியாது. நாமும் சில சமயங்களில் சரிசெய்யப்பட முடியாத பிரச்சினை என்று எண்ணுகிறோம். அந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று கருதுகிறோம்.
அந்தப் பெண்கள் இயேசுவின் கல்லறையிலினருகே வந்த போது, அந்தப் பெரிய கல் புரட்டிப் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். இரக்கமுள்ள இறைவன் அவர்களது துக்கத்தைக் கண்டு தூதனை அனுப்பி அவர்கள் இயேசுவைக் காண வழியைத் திறந்திருந்தார். இறைவன் தமது மக்களின் துன்பத்தைக் கண்டு அவர்களின் பலவீன விசுவாசத்தைப் பார்க்கிறார். அவர்களது விண்ணப்பங்களுக்கு அவர்கள் பெரிய காரியத்தை காணும் முன்பே பதிலளித்து விடுகிறார்.
ஆனாலும் அந்த நாளில் நடந்த மிகப்பெரிய சம்பவத்தை பெண்கள் உணரவில்லை. அவர்கள் பெரிய அற்புதம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நம்பிக்கையற்ற நிலையில் மரித்த இயேசுவைக் காண சென்றார்கள். அவர்கள் இறைவனின் ஜீவனைக் குறித்து அறியவில்லை. ஆனாலும் அவர்கள் இயேசுவைக் காணவும், அவருக்கு சேவை செய்யவும் விரும்பினார்கள். அவர்கள் சரியான பாதையில் சென்றார்கள். வாக்குப்பண்ணப்பட்ட இலக்கை அடைந்தார்கள்.
ஒவ்வொரு காலத்திலும், மதத்திலும் இறைவனை உண்மையாய் தேடக்கூடிய மக்களை நாம் காண்கிறோம். அவர்கள் அறியப்படாத இறைவனைக் குறித்து யோசிக்கிறார்கள். அவருக்காக செயல்படுகிறார்கள். அவர்களுடைய செத்த சடங்காச்சாரங்கள் இல்லாத சூழ்நிலையிலும் அவர் பிரசன்னமாயிருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களுடைய கவலைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் உலகப்பிரகாரமானவை. இறைவனிடம் திரும்பும் அனைவருக்கும் முழுமையான இரட்சிப்பை அவருடைய கிருபை வெற்றியுடன் அருளுகின்றது.
விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் பெண்களின் கவலையைக் கண்டு பதிலளித்தீர். அவர்களுடைய கிறிஸ்துவைக் குறித்த தேடலை ஆசீர்வதித்தீர். எங்கள் மாம்சீக கவலைகளுக்காக எங்களை மன்னியும். மத சடங்குகளில் நாங்கள் மூழ்காதபடி செய்யும். நாங்கள் மரண நிழலில் இருக்கும் போது எங்கள் மீது இரக்கமாயிரும். எங்கள் ஆவிக்குரிய வாழ்வை ஒளியூட்டச் செய்யும். உமது வெற்றிப் பவனியில் எங்களை வழிநடத்தும். மரணத்தின் பெருங்கல் எங்கள் நண்பர்களின் இருதயங்களை விட்டு புரண்டோடச் செய்யும். ஆமென்.
கேள்வி:
- கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டிப்போடப்பட்டதின் முக்கியத்துவம் என்ன?