Previous Lesson -- Next Lesson
18. இயேசுவின் மரணமும், அற்புத அடையாளங்களும் (மாற்கு 15:37-39)
மாற்கு 15:37-39
37 இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
இயேசு இறைவனுடைய நீதிக் கணக்கை நிறைவேற்றிய போது தமது பிதாவின் முகத்தை பார்க்க முடியவில்லை. அவருடைய பிதா அவரை விட்டு விலகியிருந்தார். அவர் நியாயம்தீர்க்கும் நியாயாதிபதியாக இருந்தார். குமாரன் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடினார். முடிவு வரை இறைவனின் பிதா தன்மையில் நம்பிக்கை வைத்தார். அவருடைய வெற்றியை சத்தமிட்டு பிரகடனம் செய்தார்: “முடிந்தது” இந்த வெற்றியின் சத்தம் பரலோகம், பூமி மற்றும் நரகத்திலும் எதிரொலித்தது. அது தூதர்கள் மற்றும் பரிசுத்தவான்களின் துதியின் பாடல்களைப் போலக் காணப்பட்டது. அதே சமயத்தில் நரகத்தில் பற்கடிப்பும் உண்டானது.
இறைவனுடன் மனிதர்கள் ஒப்புரவாக்கப்படுவதை தீயவன் தடைசெய்ய முடியாது. அவன் இறை ஆட்டுக்குட்டியானவரை கறைப்படுத்த முடியாது. இயேசு இறைவனின் நித்திய உண்மையில் நம்பிக்கை வைத்து உறுதியாக இருந்தார்
இயேசு தனது ஆத்துமா, ஆவியை தமது பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அவர் நியாயதிபதியாகத் தோன்றினாலும் அவருடைய மாறாத அன்பின் மீது நம்பிக்கை வைத்தார். அவருடைய பிதாவின் கைகளில் முழுமையாக ஒப்புக்கொடுத்தது இயேசுவின் வெற்றிக்கான முத்திரையாக இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய மனித சரீரம் மரித்தாலும், அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் மரிக்கவில்லை.
சிலுவையிலறையப்பட்ட இயேசு மெய்யாகவே மரித்தார். எனவே எவ்விதம் சிலர் சொல்ல முடியும், “அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, சிலுவையில் அறையவும் இல்லை” வரலாற்று உண்மை அதைக் கண்டிக்கிறது. உண்மையைக் காண்பிக்கிறது.
இயேசுவின் மரணம் வரலாற்றின் அச்சாணியாக இருக்கிறது. அந்த நேரம் முதல் உலகம் மாறியது. இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் பாவிகளை நீதிமான்களாக்குகிறார். இறைவனுடைய ஆலயத்தில் தொங்கிய திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. இறைவன் தமது படைப்புகளை விட்டு பிரிக்கப்பட்டவராக இல்லை என்பதை இது காண்பிக்கிறது. பிரதான ஆசாரியன் இதற்கு முன்பு பயத்துடனும், நடுக்கத்துடனும் உடன்படிக்கைப்பெட்டி இருக்கும் இடத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை செல்வான். அது இறைவனுடைய சிம்மாசனமாகக் கருதப்பட்டது. பரிசுத்தமான இறைவன் பாவமுள்ள தேசத்தை அவருடன் ஒப்புரவாக்குவதை அது குறிக்கிறது. இப்போது இயேசுவின் பலிமரணத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வழி திறந்திருக்கிறது. பழைய உடன்படிக்கையின் தடைகள் அகற்றபட்டன. நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தது. இறைவனிடம் செல்லும்வழி திறந்தது. உனது பிதாவிடம் வா, கதவு விசாலமாய் திறந்திருக்கிறது. உனக்காக இறைவன் காத்திருக்கிறார்.
தங்கள் கல்லறைகளில் கிறிஸ்துவின் வெற்றியை உணர்ந்த சில மரித்தவர்களின் சடலங்கள் அந்நேரம் உயிர்பெற்று எழுந்தன. இறைவனுடைய குமாரனின் பாவப்பரிகார மரணம் நீதியையும் நித்திய வாழ்வையும் அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் வழங்குகிறது.
இயேசுவின் சிலுவை மரணத்தின் போது அங்கிருந்த நூற்றுக்கு அதிபதி, ஏற்கெனவே அநேக குற்றவாளிகள், அடிமைகள், எதிரிகள் மற்றும் பொய் தீர்க்கதரிசிகள் சிலுவையில் அறையப்படுவதைக் கண்டவன் இயேசுவின் மரணத்தைப் போல ஒருபோதும் கண்டதில்லை. அதில் பரிசுத்தமான அன்பும், தாழ்மையுள்ள மகிமையும் காணப்பட்டது. நீதியுள்ளவர் தனது தலையைச் சாய்த்த போது நூற்றுக்கு அதிபதி அறிக்கையிட்டார். “இவர் மற்றவர்களைப் போல் இல்லை. இறைவல்லமை இவருக்குள் இருக்கிறது. இவர் அரசனின் குமாரனோ அல்லது இராயனோ அல்ல, இவர் இறைவனுடைய குமாரன்”. இயேசுவைக் குறித்த இரகசியம் முதலாவது இந்த புறவினத்தானால் உணரப்பட்டது. ஆனால் பழைய உடன்படிக்கை அநேக மக்களுக்கு அது மறைவாக இருந்தது.
பிரியமான வாசகரே, உங்களைக் குறித்து என்ன? உங்கள் இருதயத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
விண்ணப்பம்: பரிசுத்த இறைவனே, குமாரனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உம்மையே அசுத்தமான பாவிகளாகிய எங்களுக்காக தந்துள்ளீர். எங்கள் இடத்தில் நீர் பாடுபட்டு மரித்தீர். எங்கள் முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்கிறோம். எங்கள் சுயநலத்தை மாற்றும். இருதயக் கடினத்தை நீக்கும். எங்கள் வாழ்வை உமக்கு நன்றி காணிக்கையாக படைக்கிறோம். நீர் எங்களுக்கு பணி செய்தது போல நாங்கள் மனிதர்களுக்கு பணி செய்ய உதவும். உமது மரணத்தின் மூலம் பிதாவினிடம் நாங்கள் செல்லும் வழி திறந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். உம்மை விசுவாசிப்பவர்கள் என்றென்றும் உம்மை ஆராதிப்பார்கள். ஆமென்.
கேள்வி:
- இயேசுவின் மரணத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் என்ன பொருள் தருகின்றன?