Previous Lesson -- Next Lesson
6. கெத்சமனே தோட்டத்திற்கு செல்லுதல் (மாற்கு 14:26-38)
மாற்கு 14:26-38
26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 27 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 28 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 29 அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். 30 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 31 அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். 32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 33 பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 34 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, 35 சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டு மென்று வேண்டிக்கொண்டு: 36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். 37 பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
வித்தியாசமான மக்கள் இருக்கிறார்கள். சிலர் தங்களை பராக்கிரமுள்ள நாயகர்களாக நினைக்கிறார்கள். சிலர் குழப்பதாலும், பயத்தாலும் நிறைந்துள்ளார்கள். அவர்கள் மற்றவர்களின் கண்களை ஏறெடுத்துப்பார்க்க வெட்கப்படுகிறார்கள். அவர்களுடைய முதுகு குனிந்து காணப்படுகிறது.
முதல் குழுவினர் தங்களுடைய பெருமை மற்றும் அகங்காரத்திற்காக ஆண்டவரால் தண்டிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அவரால் ஆறுதலையும், உற்சாகத்தையும் பெற்று, பயத்தை மேற்கொள்கிறார்கள்.
இறைவன் தங்கள் பாவங்களில் நிலைத்திராத பாவிகளை நேசிக்கிறார். அவர்களை தாழ்மையுள்ள கிறிஸ்துவுக்குள் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்திற்கு நேராக நடத்துகிறார்.
சீஷர்கள் மத்தியில் முதன்மையானவனும், செல்வாக்குமிக்கவனுமான பேதுரு இருந்தான். ஒரு மீனவனாக அவன் தைரியத்துடன் ஆபத்துகளுக்கு எதிர்நின்று, அவைகளை மேற்கொண்டவனாக இருந்தான். அதே சமயத்தில் அவன் நம்பிக்கையில் மிகப்பெரிய அடியும் விழுந்தது. அவன் கிறிஸ்துவின் மீது வந்த அதிகாரத்தின் தந்திரம் அல்லது இருளில் வல்லமையை உணரவில்லை. அந்த வல்லமையின் எல்லைகளைக் குறித்து அறியாதவனாக இருந்தான். அவனுடைய பெருமை உடைக்கப்படவில்லை.
எல்லா சீஷர்கள் மீதும் வரப்போகிற இடறுதலைக் குறித்து கிறிஸ்து கூறிய போது, அவன் எதிர்த்து நின்றான்.
இறைவனே இந்த இடறுதலை அனுமதித்தார். அவருடைய அன்பின் திட்டத்திற்கு உட்பட்டு இது நடந்தது. மேய்ப்பன் வெட்டப்படும் போது, ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று அவர் முன்பே தீர்மானித்திருந்தார்.
அந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தை பேதுரு புரிந்துகொள்ளவில்லை. அவன் இறைவனுடைய திட்டத்திற்கு எதிர்த்துப் போராட தயாரானான். கிறிஸ்துவைப் பாதுகாத்து, அவரை மரணத்திலிருந்து காப்பாற்றும் சாத்தானுடைய தந்திரத்திற்கு இடம் கொடுத்தான். இயேசு சத்தியமானவர் என்றும் பரிசுத்த யுத்தத்தின் அதிபதி என்றும் அவன் அறிந்திருந்தான். பேதுரு இயேசுவைக் குறித்து மிகத் தெளிவாக அறிந்திருந்தான் என்பதை இது நமக்குக் காண்பிக்கிறது. அவன் இறைவனுடைய சித்தத்தையும், சாத்தானுடைய வல்லமையையும் அறிந்திருந்தான். ஆனாலும் அவனுடைய தோல்வி தவிர்க்க முடியாததாக மாறிப்போனது.
தனது மந்தை கீழ்ப்படியாமற்போனபடியினால் வீழ்ச்சி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட இறைவனின் கோபாக்கினையை ஏற்றுக்கொள்ள சிலுவை மட்டுமே ஒரே வழி என்பதை கிறிஸ்து அறிந்திருந்தார். மேய்ப்பன் மந்தையின் ஆடுகளுக்காக பாடுபட்டார். அவைகளுக்குப் பதிலாக மரிக்கவும் ஆயத்தமாக இருந்தார்.
தனது மரணத்திற்கு முன்பே, இயேசு தான் உயிர்த்தெழப் போவதை நிச்சயமாக அறிந்திருந்தார். சிதறடிக்கப்பட்ட மந்தையை திரும்பவும் சேர்த்து, அவைகளை வழிநடத்தி, அவைகளை பெருகப்பண்ணுவதையும் அறிந்திருந்தார். அந்நேரத்தில் விசுவாசிகளுக்கான உற்சாகமான வார்த்தைகளை இயேசு கூறினார்: “நான் உங்கள் முன்னே போவேன்”.
நமது வாழ்வின் பிரச்சினைகளில் அவர் நம் முன்னே போகிறார். நாம் தனியாக இல்லை. நாம் தோற்கடிக்கப்பட மாட்டோம். நல்ல மேய்ப்பன் நம் அருகில் நிற்கிறார். அவர் நம்மை பலப்படுத்துகிறார். நமக்காக காத்திருக்கிறார். நாம் எங்கிருந்தாலும் நம்மைக் காக்கிறார்
ஆனால் பேதுரு தனது வாழ்வை தானே வழிநடத்த விரும்பினான். அவன் கிறிஸ்துவின் தெளிவான எச்சரிப்பைக் கேட்கவில்லை. அவன் தன் மீது நம்பிக்கை வைத்தான்.
அவன் கிறிஸ்துவை மறுதலிப்பதில்லை என்று கூறினான். இயேசுவைப் பாதுகாக்கும் அவனுடைய உறுதியான தீர்மானத்தில் இருந்தான் என்பது உண்மைதான். அவன் கிறிஸ்துவிற்காக அல்லது கிறிஸ்துவுடன் மரிக்கவும் ஆயத்தமாய் இருந்தான் என்பதை சாட்சியிட்டான். ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்தும் உணர்ச்சி சார்ந்தவைகளாக இருந்தன. கிறிஸ்துவைப் பின்பற்றுபவதற்கு உணர்ச்சிகள் போதுமானவைகள் அல்ல. நரகத்திற்கு போகும் வழியில் நல்ல நோக்கத்தினால் செய்யப்படும் தவறான செயல்கள் உள்ளன.
பேதுருவின் வீழ்ச்சியையும், அவனுடைய மறுதலித்தலையும் இயேசு முன்பே கண்டார். அப்போஸ்தலர்களில் முதன்மையானவனை எச்சரித்தார். இறைவனின் உண்மைக்கு ஓர் அடையாளத்தை கொடுத்தார். சேவல் கூவும் என்று அவனுக்கு விளக்கிக் கூறும்போது, மனந்திரும்பும்போது அவனுக்கு உதவி செய்வார் என்பதை வெளிப்படுத்தினார்.
மக்களுடைய பாவங்களை அவர்களுக்கு நினைப்பூட்டும்படியாக சில சபைகளில் கூவுகின்ற சேவலின் உருவத்தை செய்து வைத்திருக்கிறார்கள். சாத்தானுக்கு விரோதமான போராட்டத்தில் அவர்களுடைய இயலாமையையும், வல்லமையுள்ள இரட்சகரிடம் மனந்திரும்பி வரும் அவசியத்தையும், அவருடைய அன்பிற்கு ஒப்புக்கொடுப்பதையும் இது நினைவுபடுத்துகிறது.
இயேசுவைப் பின்பற்றுவதின் அர்த்தத்தைக் குறித்து பவுல் நமக்கு விளக்கிக் கூறுகிறார். “உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் இறைவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்”.
விசுவாசக் கீழ்ப்படிதலில் வெற்றி பெறுவோரின் இரகசியம் இதுதான். அவர்கள் தங்களை சார்ந்து வாழவில்லை. தங்கள் உணர்ச்சிகளை நம்பவில்லை. தங்கள் சொந்த திறமையை நம்பவில்லை. அவர்கள் உடைந்த உள்ளத்துடன் கிறிஸ்துவிடம் வருகிறார்கள். தங்கள் பலவீனத்தின் மத்தியில் அவர் சித்தம் நிறைவேறும்படி ஒப்புக்கொடுக்கிறார்கள். அவரிடமிருந்து பெலத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் அவருடைய இரக்கமுள்ள திட்டங்களை அறிந்துகொள்கிறார்கள்.
விண்ணப்பம்: இரக்கம் நிறைந்த ஆண்டவரே, என் மீது நான் கொண்டுள்ள அதீத நம்பிக்கைக்காக என்னை மன்னியும். எனது திட்டங்கள், எண்ணங்களை அகற்றிப் போடும். அவசரப்பட்டு பேசாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். உமது வல்லமையினால் நான் சுயத்தை வெறுக்க உதவும். உமது சித்தத்துடன் இசைந்து செயல்படவும், உமது அன்பின் வழிநடத்துதலின்படி நடக்கவும், உம்மை விட்டு விலகாதிருக்கவும் உதவி செய்யும். உம்மை நன்றியுடன் பின்பற்றும் அனைவரோடும் இணைந்து நானும் உம்மைப் பின்பற்ற கிருபை செய்யும். ஆமென்.
கேள்வி:
- இயேசு பேதுருவை எச்சரித்த போது அவன் செய்த தவறு என்ன?