Previous Lesson -- Next Lesson
9. முழு பிரபஞ்சமும் அழிந்து போவதைக் குறித்த தீர்க்கதரிசனம் (மாற்கு 13:31-33)
மாற்கு 13:31-33
31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். 33 அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
கிறிஸ்து வரப்போகிறார். அவரை எதிர்பார்த்து, ஆயத்தமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள். இறைவனின் குமாரனுடைய வருகை கிருபையையும், நியாயத்தீர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. இவைகள் நமது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவை. கிருபையானது இறைவனுடன் நம்மை ஐக்கியப்பட வைக்கிறது. நியாயத்தீர்ப்பு மக்களின் கீழ்ப்படியாமையின் நிமித்தம் வானத்தையும், பூமியையும் அழிக்கிறது.
ஏசாயா 700 ஆண்டுகள் முன்பு சொன்னதை கிறிஸ்து விளக்கப்படுத்தினார். வானமும், பூமியும் ஒழிந்துபோம் (ஏசாயா34:4; 51:6; 2பேதுரு 3:10; வெளி6:12-17).
இந்த ஆதாரங்களைக் குறித்து வாசிப்பவர்கள், இதைப் புரிந்துகொள்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். பூமியானது அகன்று போகும். நாம் சுவாசிக்கிற காற்று இல்லாமல் போகும். எவ்வளவு பயங்கரமான காரியம்? நமது சிறிய உலகம் அழிவது மட்டுமல்ல. சூரியனும், கிரகங்களும் மனிதனுடைய பாவத்தின் நிமித்தம் அழிந்துபோகும். மனிதனின் ஒரே இறைவனை விட்டுப் பிரிந்த பாவத்தினால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும். சாத்தான் குழந்தை அல்ல. அவன் இந்த உலகத்தின் அதிபதி. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை தன்னை நோக்கி ஈர்க்கிறான். இயேசு கூறிய எரிகின்ற அக்கினி தான் இவர்கள் அடையும் தண்டனை ஆகும். “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்கு போங்கள்” (மத் 25:41).
வரப்போகின்ற உலகத்தின் முடிவைக் குறித்து மற்ற மதங்களும் குறிப்பிடுகின்றன என்பது உனக்குத் தெரியுமா? அசுத்த ஆவிகள் இந்த வரப்போகும் நிகழ்வை அறிந்துள்ளன. நம்முடைய விசுவாசம் நியாயத்தீர்ப்பு நாள் மீது அல்ல, இறைவனுடைய நித்திய அன்பின் மீது கட்டப்பட்டுள்ளது. இறைவனுடைய அன்பு தான் நமது நம்பிக்கை. அவருடைய இரக்கமுள்ள வார்த்தை தான் விதை. அவருடைய நாமத்தில் விசுவாசம் வைக்கிறவர்களை புதுப்பிக்கும் வல்லமை உடையது. நமது எதிர்காலம் இயேசுவின் வார்த்தைகளை சார்ந்துள்ளது. ஆண்டவர் தனது வார்த்தையை ஒருவரும் திரிக்கவோ அல்ல மாற்றவோ செய்யாதபடி பாதுகாக்கிறார். பரிசுத்த வேதாகமம் கறைபட்டுள்ளது என்று எப்படி சிலர் சொல்ல முடியும்? நம்முடைய ஆண்டவர் சத்தியமானவர். அவர் ஜீவனுள்ளவர். மாம்சமான வார்த்தை அவர். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தமது வார்த்தையை விசுவாசிகளின் கரங்களில் கொடுத்துள்ளார். அவர்களுக்கு பரிசுத்த வேதாகமத்தைவிட வேறு பெரிய பொக்கிஷம் இல்லை.
ஒருநாளில் நீ ஓடிப்போவாய் என்றால், உலகத்தின் எல்லாப் பொருள்களையும் இழப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. பரிசுத்த வேதாகமத்தை உன்னோடு எடுத்துக்கொள். இரவும், பகலும் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள். சில தங்க வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வது நல்லது. ஒருவேளை உனது வேதாகமம் திருட்டுப் போனாலும், உனது இருதயத்தில் வசனங்கள் நன்கு பதிந்திருக்கும்.
இயேசு தன்னைக் குறித்து கூறினார். “என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே என்னுடைய போஜனம்” ஆகும். எனவே உனது ஆண்டவருடைய வார்த்தையை இருதயத்தில் பதித்துக்கொள். அதைப் பார்த்து, புரிந்துகொண்டு, அதன்படி நட. அப்போது உலகத்தின் முடிவில் நீ கலங்கிடத் தேவையில்லை. நீ கிறிஸ்துவின் வார்த்தையின் வல்லமையினால் மாற்றப்பட்டிருக்கிறாய். அவருடைய தெய்வீக சுபாவத்தில் நீ பங்குபெற்றிருக்கிறாய். நீ அவருடன் இருப்பாய். அவருடைய தூதர்கள் எப்போதும் அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவருடைய கிருபையின் வார்த்தையினால் பிறந்தவனாக நீ அங்கு தோன்றுவாய்.
இயேசு தன்னுடன் நெருங்கியிருக்கிற நான்கு சீஷர்களுக்கு முடிவுகாலத்தைக் குறித்த தீர்க்கதரிசன பிரசங்கத்தை ஒலிவமலையில் அளித்தார். அவர் கண்களுக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு ஏதுவான எருசலேம் இருந்தது. இயேசு ஒரே நபரில் மனுஷகுமாரனாகவும், இறைவனின் குமாரனாகவும் இருக்கிறார். தன்னுடைய எல்லையற்ற மகிமையைத் துறந்து, எல்லைக்குட்பட்ட மனிதனாக வந்தார். குமாரன் தானாக எதையும் செய்ய மாட்டார். பிதாவானவர் செய்வதையே குமாரனும் செய்கிறார். பிதா குமாரனை நேசிக்கிறார். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்”(யோவான் 5:19-23).
இந்த அறிக்கைகளில் நாம் இயேசுவின் முழுமையான தாழ்மையைப் பார்க்கிறோம். அவருடைய முழுமையான அதிகாரத்தையும் காண்கிறோம். அவருடைய தாழ்மையின் நிலையை புரிந்துகொள்கிறவன் அவருடைய வார்த்தையையும் புரிந்துகொள்கிறான். உலகத்தின் முடிவு நாளை பிதா அவருக்குக் காண்பிக்கவில்லை. எந்த ஒரு தூதனோ, ஆவியோ, பிசாசோ அல்ல மறுபடியும் பிறந்த ஒரு நபரோ நமது பரலோகப் பிதா குறித்திருக்கிற உலகத்தின் முடிவு நாளையும், மரித்தோரின் நீதியான நியாயத்தீர்ப்பு நாளையும் அறியவில்லை. கிறிஸ்துவின் வருகையைக் குறித்து கணக்குப் பார்ப்பது முட்டாள்தனமான காரியம். ஆனாலும் நாம் அறிந்திருக்கிறதைவிட அது மிக அருகில் உள்ளது.
விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே, எங்கள் ஆண்டவரே, இரட்சகரே, எங்கள் பிரியமானவரே, நீர் வருத்தப்படுகிறீர். நீர் கோபப்படுகிறீர். உமது பொறுமைக்கு ஒரு முடிவு உண்டு. உலகங்களை நியாயம்தீர்க்கும்படி உமது குமாரனை அனுப்புவீர். வானமும், பூமியும் ஒழிந்து போவதை உமது வார்த்தை முன்னுரைக்கிறது. ஆண்டவருக்காக நாங்கள் இன்று வாழ உதவும். எங்களை நித்திய மரணம் ஆளாதபடி செய்யும். கிறிஸ்துவின் வெற்றியில் நமக்கு நம்பிக்கை உண்டு. உமது வார்த்தையின் வல்லமையினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஜீவனில் தொடர்ந்திருக்க உதவும். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மகிமையின் நம்பிக்கையாக கிறிஸ்து எங்களில் இருக்கிறார். ஆமென்.
கேள்வி:
- உலகங்களின் முடிவைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் இருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?