Previous Lesson -- Next Lesson
12. இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் (மாற்கு 10:28-31)
மாற்கு 10:28-31
28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். 29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், 30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 31 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
அநேக மக்கள் கனம், அதிகாரம், சொத்துகளை அடைய நாடுகிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பிற்கு உலக ஐசுவரியம் பரிசாகக் கிடைப்பதாக நினைக்கிறார்கள். அழிந்துபோகும் ஐசுவரியத்திற்காக தன்னை ஒப்புக்கொடுக்கிறவன் எவ்வளவு பெரிய ஏழையாக இருக்கிறான்? ஒரு பெரிய வியாதி, சடுதியான மரணம் அல்லது இறுதி நியாயத்தீர்ப்பு அவனுக்கு உலகத்தின் அழியும் தன்மையைக் குறித்து கற்றுக்கொடுக்கிறது. இறைவன் மட்டுமே நிலையானவர். அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள், அவருடைய அன்பில் நிலைத்திருப்பவர்கள் இறைவனுடன் நிலையானவர்களாக இருக்கிறார்கள்.
கவலைகளினால் அதிக சுமையை சுமக்கும் மக்களுக்கு கிறிஸ்து பரலோக விதிகளை கற்றுக்கொடுக்கிறார். பணத்தை தேடுகிறவர்களைப் பார்த்து கூறுகிறார். “இறைவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”. இந்த ஞானமுள்ள வார்த்தையை கடைப்பிடியுங்கள். இதன்படி செயல்படுங்கள். நீங்கள் சுயநலத்தில் இருந்து விசுவாச நிலைக்கு மாறுங்கள். இறைவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்து, அவருடைய ஆவிக்குரிய குடும்பத்துடன் இணையுங்கள். அவருடைய ராஜ்யம் என்பது கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது.
திரியேக பரிசுத்த மற்றும் அவருடைய ஆவிக்குரிய பிள்ளைகள் தவிர வேறு எதுவும் விலையேறப்பெற்ற காரியம் வாழ்வில் இல்லை என்பது உனக்குத் தெரியுமா? மற்ற அனைத்தும் அழிந்துபோகும். இரத்த உறவு மற்றும் திருமண உறவு இந்த உலகத்தோடு முடிந்துவிடும். மற்ற எல்லா உறவுகள் மற்றும் நட்புகளைவிட இறைவனின் குடும்பம் மிகவும் முக்கியமானது. மீட்பர் இயேசுவின் மீது கொண்டுள்ள விசுவாசத்திற்காக உனது அப்பாவும், அம்மாவும் ஒருவேளை உன்னை வெறுக்கலாம். உனது சகோதரர்கள் உன்னைத் துன்புறுத்தலாம். உனது பிள்ளைகள் உன்னைச் சபிக்கலாம். இது மிகவும் வலி நிறைந்த, வேதனை தருகின்ற காரியமாக இருக்கும். ஆனாலும் உனக்கு இறைவன் இருக்கிறார். எது மிகவும் முக்கியமானது: நித்தியமானதா? அல்லது அழியக்கூடியதா? உனது குடும்பத்தைவிட உன் ஆண்டவரை நீ அதிகம் நேசிக்கிறாயா?
உனது அப்பா உனக்குரிய பங்கை மறுக்கலாம். உனது சகோதரர்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம். உயிருள்ளவரும் வாழ்வு தருகின்றவருமான கிறிஸ்துவில் உனக்கு நிம்மதி உண்டு. குடும்ப உறவுகளின் கடினத்தன்மையை அவர் அனுபவித்திருக்கிறார். அவருடைய ஊழியத்தை தடை செய்து, மறுபடியும் வீட்டிற்கு கொண்டுவர முயற்சித்தார்கள். ஆனால் அவர் அவர்களை விட்டு விலகினார். தனது பிதாவின் சித்தத்தின்படி செய்யும் அனைவரையும் சகோதரர், சகோதரி, தாய் என்று அழைத்தார்.
கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவன் புதிய சகோதரர்கள், சகோதரிகளைக் கண்டுகொள்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் உண்மையுள்ள மனைவியைக் கண்டுகொள்கிறான். தனது கடின உழைப்பின் மூலம் நல்ல நிலையை, மதிக்கதக்க பணியை அடைகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை அவன் சொந்தமாக்கிக் கொள்கிறான். பரிசுத்தமானவருக்கு பிள்ளையாக மாறுகிறான். இந்த உலக இழப்புகளை கிறிஸ்துவின் மீதான விசுவாசம் ஈடு செய்கிறது. உலக இழப்புகளைவிட அவர் தரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் ஆயிரம் மடங்கு பெரியவை.
கிறிஸ்துவிடம் ஆவலாக ஓடி வருபவன், உலக நன்மைக்காக அவரை நம்புகிறவன் அவரை விட்டு விழுந்துவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். கிறிஸ்து நமக்கு பணம், பதவி அல்லது சொத்துகளை வழங்க வரவில்லை. நம்முடைய பாவங்களை மன்னிக்க வந்தார். அவருடைய இரட்சிப்பில் நம்மை பங்காளிகளாக மாற்றுகிறார். அநேக பாவ சோதனைகள் மீது நமக்கு வெற்றியைத் தருகிறார். உலக நன்மைகளைப் பெறுவதற்கு அவரை நம்புகிறவர்கள் பரிதபிக்கப்படத்தக்கவர்கள். தியாகம் செய்வது, பணிவிடை செய்வது, மற்றும் கொடுப்பது தான் இறைவனுடைய பிள்ளைகளுடன் வாழ்வது ஆகும். எடுப்பதும், அதிகாரம் செலுத்துவதும், பெருமை கொள்வதும் அல்ல. எச்சரிக்கையாக இருங்கள். உங்களை சோதித்துப்பாருங்கள். கிறிஸ்துவைப் பின்பற்றவதற்கான காரணத்தை சோதித்துப் பாருங்கள். நீங்கள் உலக நன்மைகளைத் தேடுகிறீர்களா? அல்லது உங்கள் வாழ்வு இறைவனின் அன்பிற்கு ஒரு ஜீவபலியாக இருக்கின்றதா?
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, பாவிகளாகிய எங்களை மீட்க உமது பிதாவை விட்டிறங்கி வந்தீர். உமது அன்பு, இரக்கத்திற்காக நன்றி கூறுகிறோம். எங்களை இரட்சிக்க உமது ஜீவனைத் தந்துள்ளீர். நாங்கள் இறைவனின் பிள்ளைகளாக மாறும்படி நீர் எங்களுக்காக மரித்தீர். உமது அன்பின் வல்லமையினால் எங்களை மாற்றினீர். நாங்கள் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ள எங்களுக்கு பொறுமையைத் தாரும். உமது பரிசுத்த ஆவியுடன் இணைந்து வாழவும், ஒருபோதும் பின்னிட்டுப் பாராமல் இருக்கவும், உமது வருகையை நோக்கி முன்னேறிச் செல்லவும் உதவி செய்யும். ஆமென்.
கேள்வி:
- ஒரு விசுவாசிக்கு உண்மையில் எது லாபமான காரியம்?
மனன வசனம்:
என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும்,
வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது,
தகப்பனையாவது, தாயையாவது,
fமனைவியையாவது, பிள்ளைகளையாவது,
நிலங்களையாவது விட்டவன் எவனும்,
இப்பொழுது இம்மையிலே,
துன்பங்களோடேகூட நூறத்தனையாக,
வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும்,
wதாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும்,
மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும்,
பிந்தினோர் அநேகர்
முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
(மாற்கு 10:28-31)