Previous Lesson -- Next Lesson
1. இயேசுவை இறைவனின் குமாரன், கிறிஸ்து என்று பேதுரு அறிக்கையிடுகிறான். பின்பு சாத்தானின் சோதனையில் அவன் வீழ்ச்சியடைகிறான் (மாற்கு 8:27-33)
மாற்கு 8:27-33
27 பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 29 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். 30 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். 31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். 32 இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
தான் யார் என்பதை சீஷர்கள் அறிந்துகொள்ளும்படி கிறிஸ்து அவர்களை விசுவாசத்தில் முதிர்ச்சிக்கு நேராக வழிநடத்தினார். தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்கும்படி அவர்களை படிப்படியாக வழிநடத்தினார். அவர்கள் தீர்மானத்துடன் அவரைப் பின்பற்றி நடக்கவும், உண்மையுடன் அவரைப் பின்பற்றும்படியும் அப்படிச் செய்தார்.
அநேகர் கிறிஸ்துவை தீர்க்கதரிசி என்று அழைத்தார்கள். மோசேயைப் பின்தொடர்ந்து வந்தவர் அல்லது இரண்டாம் மோசே என்று கருதினார்கள். சிலர் அவரை எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் வந்த யோவான்ஸ்நானகன் என்று நினைத்தார்கள். எலியா கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த வைராக்கியமுள்ள தீர்க்கதரிசி ஆவார். ஆனால் கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களின் இருதயத்தை ஊடுருவி, அவருடைய தன்மையைக் குறித்த உண்மையை நேரடியாக அறிக்கையிடும்படி செய்தார்.
இயேசுவின் மீதான உங்கள் விசுவாசம் எப்படிப்பட்டது? ஏன் நீங்கள் அவரை அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் அவரை கிறிஸ்து என்று சொல்வதன் காரணம் என்ன? இந்த குறிப்பிடத்தக்க பெயரில் உள்ள அர்த்தங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? “கிறிஸ்து” என்ற பதத்தின் அர்த்தம் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்பதாகும். இறைவன் சில பிரதான ஆசாரியர்கள், உண்மையுள்ள இராஜாக்கள், குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசிகளை இவ்விதம் அபிஷேகம்பண்ணியிருந்தார். ஆனாலும் அபிஷேகம்பண்ணப்பட்ட எல்லாரிலும் பூரணமானவர் கிறிஸ்து மட்டுமே. அவருக்குள் இறைவனின் முழுத்தன்மையும் சரீரப்பிரகாரமாக தங்கியிருந்தது. பரிசுத்தமானவரின் தன்மைகள், வல்லமைகள், வரங்கள் இந்த ஒப்பற்ற பெயரில் அடங்கியுள்ளன.
இறுதிக்காலத்தில் தங்களை விடுவிக்க இறைவனால் அனுப்பப்படும் அரசியல் இராஜாவாக கிறிஸ்து வருவார் என்று யூதர்கள் நினைத்தார்கள். அற்புதங்கள் மூலமாக ரோம ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவிப்பார் என்றும், முழுஉலகத்திலும் வலிமையான நாடாக அவர்களை மாற்றுவார் என்றும் நினைத்தார்கள். அரசியல் ராஜா என்ற அவர்களது நம்பிக்கை ஓர் சாத்தானின் வஞ்சகம் ஆகும். அவன் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களை தவறாக வியாக்கியானம் செய்தான்.
எல்லா நாடுகளும் இராணுவம், மற்றும் வரிகளினால் ஸ்தாபிக்கப்பட்டன என்பதை கிறிஸ்து அறிந்திருந்தார். மனிதர்களின் இருதயங்களை சட்டங்கள் மாற்றி அமைக்க முடியாது. அவர் ஒரு ஆவிக்குரிய அரசை நிறுவ விரும்பினார். அங்கே நித்திய உடன்படிக்கையுடன் இறைவன் மனிதர்களுடன் வாழ்கிறார். ஆனால் மனிதர்கள் படைத்தவரை விட்டுவிலகி விட்டார்கள். கடற்கரை மணலை விட நமது பாவங்கள் பெருகிவிட்டன. நமது சொந்த வழியில் நாம் சென்றோம். எனவே தான் கிறிஸ்து நமது பாவங்களை சுமந்தார். நித்திய நியாயாதிபதியுடன் நம்மை ஒப்புரவாக்கினார். நாம் பரலோகில் அமைதியுடன் வாழ முடியும். பேதுரு மற்ற சீஷர்கள் சார்பாக பேசினான். மெய்யாக இறைவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் இயேசு என்பதை அறிக்கையிட்டான். இதை அவன் பகுத்தறிவினாலோ அல்லது சுய தீர்மானத்தினாலோ உணரவில்லை. இரக்கம் நிறைந்த பிதாவாகிய இறைவன் இதை வெளிப்படுத்தினார். கிறிஸ்து இயேசுவைக் குறித்த சத்தியத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார். வெளிப்பாடு என்பது மாம்சம் மற்றும் இரத்தத்தின் மூலம் வருவது இல்லை. அது நமது உலகிற்கு அப்பாற்பட்ட இறைவனுடைய ஆவியின் மூலம் வருகிறது.
அக்காலத்தில் கிறிஸ்து என்ற பதத்தின் முழுமையான அர்த்தத்தை ஒருவேளை பேதுரு புரியாமல் இருந்திருக்கலாம். இயேசுவே ஆவிக்குரிய இரட்சகர் என்றும், அதே சமயத்தில் அரசியல் இராஜாவாகவும் இருக்கிறார் என்றும் நினைத்தான். எனவே இயேசு தமது மரணத்தின் அவசியத்தைக் குறித்து சீஷர்களுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். அவர் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டு, மூப்பர்கள், பிரதான ஆசாரியர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
பேதுருவால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் தீயவர்களிடமிருந்து இறைவனின் குமாரனைக் காப்பாற்ற விரும்பினான். இயேசு சிலுவைக்குச் செல்வதைத் தடுக்கும்படி சோதிக்கப்பட்டான். இப்படிப்பட்ட மனித சிந்தனையால் அவன் இழுப்புண்டான். சாத்தானின் வஞ்சகத்திற்கு இடம் கொடுத்தான். வனாந்தரத்தில் சாத்தான் இயேசுவை சிலுவைக்கு செல்லவிடாதபடி சோதித்து தோல்வியுற்றான். எனவே இப்போது சாத்தான் திரும்பவும் வந்து பேதுருவில் தங்கினான். இறைவனின் வெளிப்பாட்டை சற்று முன் பேதுரு சீஷர்கள் மத்தியில் கூறினான்.
கிறிஸ்துவின் வருகைக்கான காரணத்தை நாம் சரியாக அறிந்திராவிட்டால், கிறிஸ்துவிற்காக சாட்சியாய் நிற்கும் நிலை விரைவில் சாத்தான் பக்கம் நிற்கும் சாபமாய் மாறிவிடும் என்று பேதுருவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்து சிலுவையிலே மனிதர்களை இறைவனுடன் ஒப்புரவாக்குகிறார். அவர் நமக்காக மாம்சத்தில் வெளிப்பட்டார். பிதாவிடம் செல்லும் வாசலைத் திறந்தார். தமது மரணத்தினால் நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கியுள்ளார். இறைவனின் பிள்ளைகளாக நம்மை மாற்றுகிறார்.
விண்ணப்பம்: பிதாவே, வெறும் அற்புத செயல்களுக்காக மட்டும் உமது குமாரனை விசுவாசித்தற்காக எங்களை மன்னியும். அவரில் வைத்த விசுவாசத்தின் மூலம் தேர்வுகளில் வெற்றி, அலுவலகத்தில் வெற்றி, பணம் மற்றும் புகழை நாடினோம். கிறிஸ்துவின் மகிமையைக் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும், அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்தார். இலவசமாய் நம்மை நீதிமானாக்கினார். எங்களை உம்முடன் ஒப்புரவாக்கினார். நாங்கள் உடைக்கப்படவும், மனந்திரும்பவும், உமது தாழ்மையில் தொடரவும் உதவும். அவருடைய அன்பை எங்கள் வாழ்வில் உணரச் செய்யும். ஆமென்.
கேள்வி:
- பேதுருவின் அறிக்கையில் உள்ள மிக முக்கியமான அர்த்தம் என்ன?