Previous Lesson -- Next Lesson
19. பெத்சாயிதாவில் குருடன் பார்வையடைதல் (மாற்கு 8:22-26)
மாற்கு 8:22-26
22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். 23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். 24 அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். 25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். 26 பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
இறைவனுடைய மீட்பின் திட்டத்தை அறிகின்ற அறிவில் உண்மைக் கிறிஸ்தவன் முன்னேறிச் செல்கிறான். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் அவருடைய அன்பு மற்றும் அவருடைய வல்லமையை அறிகின்ற அறிவில் வளருகிறான். அவன் பரிபூரணமானவனாக மாறுகிறதில்லை. ஆனால் அவனுக்கு அளிக்கப்பட்ட கிருபையினால் விசுவாசத்தில் முன்னேறுகிறான். பெத்சாயிதவில் குருடனை கிறிஸ்து சுகப்படுத்திய சம்பவத்தின் மூலம் இந்த ஆவிக்குரிய வளர்ச்சியை நாம் தெளிவாகக் காண முடியும்.
இயேசுவினிடம் சில விசுவாசிகள் ஒரு குருடனை கொண்டு வந்தார்கள். தமது சுகமளிக்கும் வல்லமையினால் அவனை அவர் தொடும்படியாகக் கேட்டுக்கொண்டார்கள். இது தான் பிரசங்கத்தின் உண்மையான கருப்பொருள். ஒரு இரட்சிக்கப்பட்ட விசுவாசி குருடனை விசுவாசத்துடன் அழைத்து வந்தது போல, உங்கள் விண்ணப்பங்களினால் இயேசுவிடம் நீங்கள் அழைத்து வருகிறீர்கள். உங்களுக்கு இது ஓர் சிலாக்கியம். உங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு இயேசு அவர்களைக் குணமாக்குகிறார். கிறிஸ்து உடனடியாக அவரைத் தேடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறதில்லை. அவர் குருடனைத் தனியாக கொண்டுபோனார். கூட்டத்தின் நடுவில் இருந்து அவனைத் தனியாக அழைத்தார். அவனை சுகப்படுத்த அவர் விரும்பினார். அந்தக் குருடன் இயேசுவை பின் தொடர்ந்து அமைதியான இடத்திற்குச் சென்றான். சத்தியத்தைத் தேடும் ஒவ்வொருவரையும் கிறிஸ்து இவ்விதமாகத் தனியாகக் கொண்டு போகிறார். வாழ்வின் கவர்ச்சிகளை விட்டு, அமைதியான இடம் நோக்கி வரும்படி நடத்துகிறார். அவனுடைய சொந்த தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அறிந்து செயல்படுகிறார்.
அந்தக் குருடனின் கண்களில் இறைவனுடைய குமாரன் உமிழ்ந்தார். அவனுடைய பாவங்களைக் கழுவுவதன் அடையாளமாக இது உள்ளது. ஆவியில் குருடனாக உள்ளவன் கிறிஸ்துவின் இரத்தத்தினால் தனது பாவ இருதயத்தை முதலாவது தூய்மையாக்க வேண்டும். ஏனெனில் நமது இறைவனை அறிகின்ற அறிவை பாவங்கள் மறைக்கின்றன.
இயேசு தமது தெய்வீக கரத்தினால் அந்தக் குருடனைத் தொட்டார். ஒரு மின் கம்பியை நீங்கள் தொடும்போது உங்களுக்குள் மின்சக்தி பாய்ந்தோடுவதைப் போல சுகமாக விரும்பிய அந்த மனிதனுக்குள் வல்லமை பாய்ந்தோடியது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் புதிய பரலோக வாழ்வு உங்களுக்கு கிடைக்கின்றது. சிலுவையில் அறையப்பட்ட அவர் மூலம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று விசுவாசியுங்கள். கிறிஸ்து உங்களிடம் பேசுகிறார். அவருடைய வல்லமையின் பங்காளிகளாக உங்களை மாற்றுகிறார்.
பின்பு இயேசு குருடனிடம் பேசினார். அவன் பார்க்கும்படி இயேசு அவனை ஊக்கப்படுத்தினார். குருடன் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்தான். கிறிஸ்துவை விசுவாசிக்கும் சிலர் முதலில் எல்லாவற்றையும் தெளிவாகக் காண்பதில்லை. அவர்களுடைய இரட்சிப்பு, பரிசுத்த திரியேகத்தின் இரகசியம் ஆகியவற்றை முழுமையாக அறிவதில்லை. அவர்கள் ஆவிக்குரிய குருட்டாட்டத்தின் தாக்கத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படியிருப்பினும் அடிக்கடி இறைவனுடைய வார்த்தையை கேட்கும்போது, அவருடன் ஏற்படும் உறவினால் உண்மையான அறிவையும், சரியான விசுவாசத்தையும் பெறுகிறோம்.
சுகம்பெற மனிதன் உடனடியாக முழுமையாக பார்க்க இயலாததால் கிறிஸ்து பொறுமை இழக்கவில்லை. எனக்கு மங்கலாகத் தெரிகிறது என்று அவன் சொன்ன போது, அவன் கண்களில் மறுபடியும் கையை வைத்தார். பிரியமான வாசகரே, நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் வளரும் விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். இறைவனின் குமாரன் உங்களைத் தொடுவார். அவருடைய இரட்சிப்பு, வல்லமை, அன்பைக் குறித்த விசாலமான பார்வையைக் கொடுப்பார்.
இறுதியாக அந்த மனிதன் பார்க்க முடிந்தது. தனது கண்களின் முன்பு இயேசு இருப்பதை தெளிவாகக் கண்டான். அந்த மனிதனின் இருதயத்தை அடைந்த முதல் காட்சி இயேசுவின் அன்பு முகம் ஆகும். பின்பு அவன் ஆச்சரியத்துடன் தன்னைச் சுற்றிலும் உலகில் இருந்த காரியங்களைக் கண்டான். அவனுடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்தது. அவனுடைய கண்கள் ஆண்டவரைக் கண்டன.
ஒருவரிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்று கிறிஸ்து அவனிடம் கூறினார். அவன் கூட்டத்தை விட்டுவிலகி வந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் போது, கிறிஸ்து யார் என்பதையும், தான் யார் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். இயேசுவின் பணி எவ்வளவு மகத்துவமானது? மனிதன் தன்னுடைய தகுதியற்ற தன்மையை உணர முடியும்.
ஆண்டவர் உங்கள் கண்களைத் திறந்ததற்காக நன்றி செலுத்துகிறீர்களா? அரபு உலகத்தில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் அதிகமான குருடானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது உங்களுக்கு பாரம் உண்டா? அவர்களுக்கு சேவை செய்ய விருப்பமா? அவர் உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பிற்காக எப்போது நன்றி செலுத்த ஆரம்பிப்பீர்கள்? உங்கள் பகுதியில் குருடரான ஒருவரை எப்போது நீங்கள் சந்திப்பீர்கள்? அவருடன் இணைந்து மன்றாடி, அவருக்கு எப்போது உதவி செய்வீர்கள்?
விண்ணப்பம்: ஆண்டவரே, நாங்கள் உமது பொறுமைக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் ஆவிக்குரிய குருட்டுத்தன்மைக்காக எங்களை மன்னியும். எங்கள் இருதய மீறுதலை சுத்திகரியும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் எங்களை தூய்மையாக்கும். உமது பரிசுத்த ஆவியால் எங்களை பிரகாசிக்கப்பண்ணும். உமது இரக்கத்தை தெளிவாகக் காண உதவும். எங்கள் அறிவின்மையை உணரச் செய்யும். பெருமைகொள்ளாமல், உமது சமாதானத்தினால் நிரப்பப்பட உதவும். அநேக மக்களை உம்மிடம் அழைத்து வந்து, அவர்கள் உம்மைக் காணும்படி செய்யும். நீர் எங்கள் வாழ்வின் மையாக இருக்கிறீர். எங்களைச் சுற்றிலும் உள்ள குருடரான மக்களுக்கு சேவை செய்ய உதவும். அவர்களுக்கு பணிசெய்யவும், அவர்களுக்காக மன்றாடவும் கிருபை செய்யும். ஆமென்.
கேள்வி:
- பெத்சாயிதாவின் குருடனை சுகமாக்கியதன் மூலம் இயேசு நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார்?
கேள்விகள் - 2
பிரியமான வாசகரே,
நற்செய்தியாளர் மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த புத்தகத்தை நீங்கள் கவனமாகப்படித்தால், பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் எளிதில் பதிலளிக்க முடியும்.
- எருசலேமில் இருந்து வந்தவர்களுடைய குற்றச்சாட்டின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்ன?
- கிறிஸ்துவின் சகோதர, சகோதரி யார்?
- இறைவார்த்தையைக் கேட்கும் நான்கு விதமான மக்கள் யார்? அவர்கள் செயல்படும் வித்தியாசமான வழிகள் என்ன?
- ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் விதிமுறை என்ன?
- நாம் எப்படி இறை வார்த்தையைக் கடைப்பிடிக்க முடியும்?
- ஏன் எல்லா நேரங்களிலும் விசுவாசத்தை மறைத்து வைக்க முடியாது?
- இறை ராஜ்யத்தில் வளர்வதின் இரகசியம் என்ன?
- ஏன் எல்லாக் கொள்கைகளையும்விட இறைவனுடைய ராஜ்யம் பெரியது?
- புயலின் மத்தியிலும் இயேசு ஏன் கவலைப்படாமல் தூங்கினார்? அழிக்கும் புயலை அமைதிப்படுத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
- இயேசு அசுத்த ஆவிகளை அந்த மனிதனிடத்தில் இருந்து துரத்திய பின்பு, அவன் எப்படி வாழ்ந்தான்?
- இயேசுவானவர் ஜெபஆலயத் தலைவன் தன்னைத் தாழ விழுந்து பணிந்தபோது ஏன் அனுமதித்தார்? #Why was the woman healed when she touched Jesus?
- இயேசுவைத் தொட்ட போது ஏன் அந்தப் பெண் சுகமடைந்தாள்?
- இயேசு மரித்த சிறுமியை உயிர்ப்பித்ததின் மூலம் இயேசுவின் ஆள்த்துவத்தைக் குறித்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம்?
- ஏன் இயேசு தமது சொந்த ஊரில் அற்புதங்களை நிகழ்த்த முடியவில்லை?
- இயேசு தமது அப்போஸ்தலர்களை பிரசங்கிக்கும்படி அனுப்புவதற்கு முன்பு கொடுத்த கட்டளைகள் என்ன?
- யோவான்ஸ்நானகனின் மரணத்திற்கு காரணங்கள் என்ன?
- ஐயாயிரம் பேரை போஷித்ததின் இரகசியம் என்ன?
- “நான்தான்” என்று கிறிஸ்து தமது சீஷர்களிடம் கூறியதின் அர்த்தம் என்ன?
- கைகளைக் கழுவுதல் மற்றும் சடாங்காச்சாரங்களைக் கடைபிடித்தல் ஏன் இறைவனுக்கு முன்பாக நம்மைத் தூய்மைப்படுத்தாது?
- சீரோ-பேனிக்கியா பெண்ணின் விசுவாசத்திற்கு பதில் அளித்து இயேசு செய்த அற்புதத்தின் முக்கியத்துவம் என்ன?
- இயேசு எவ்விதம் செவிடும், ஊமையுமான மனிதனை சுகமாக்கினார்?
- இயேசு ஏன் நாலாயிரம் பேரை போஷித்தார்? எப்படி போஷித்தார்?
- இயேசு ஏன் பரிசேயர்களுக்கு சிறப்பான அற்புதத்தை காண்பிக்கவில்லை?
- பரிசேயர்கள் என்ற புளித்தமாவைக் குறித்து இயேசு பேசிய போது தமது சீஷர்களிடம் என்ன பதிலை எதிர்பார்த்தார்?
- பெத்சாயிதாவின் குருடனை சுகமாக்கியதன் மூலம் இயேசு நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார்?
26 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால், நாங்கள் இதன் தொடர்ச்சியான அடுத்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்புவோம். தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்:
Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net