Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 035 (Jesus Rejected at Nazareth)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

7. இயேசு நாசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்டார் (மாற்கு 6:1-6)


மாற்கு 6:1-6
1 அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். 2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? 3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், 6 அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.

நாசரேத்தூர் கிராம மக்கள் அநேக ஆண்டுகளாக இயேசுவை அறிந்திருந்தார்கள். ஏனெனில் அவர்கள் மத்தியில் அவர் வளர்ந்து வந்தார். அவரை மரியாளின் குமாரன் என்று அவர்கள் அழைத்தார்கள். ஏனெனில் அவருடைய உண்மையான அப்பாவை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்துவின் கனத்தையும், தனித்தன்மையையும் அவர்கள் உணரவில்லை. இறைவனே அவருடைய பிதாவாக இருந்தார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் அவர் பிறந்தார்.

அவருடைய நான்கு சகோதரர்களின் பெயர்கள் மாற்கு நற்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இறைவனால் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்களும் அல்ல. அவர்கள் இயேசுவை விட இளையவர்கள். யோசேப்பின் குமாரர்கள். கிறிஸ்துவுக்கும் அவர் தகப்பனாக செயல்பட்டார். இயேசுவின் நான்கு சகோதரர்களில் யாக்கோபு மூத்தவர் என குறிப்பிடப்படுகிறார். கிறிஸ்து பரமேறிய பின்பு, சபையின் மூப்பர்களில் ஒருவராக பேதுரு மற்றும் யோவானுடன் இணைந்து செயல்பட்டார். இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பின்பு தமது சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினார். தமது ஆவியினால் அவனை நிரப்பினார். யாக்கோபு தனது நிரூபத்தை சபைகளுக்கு எழுதினான். (அப்போஸ்தலர் 15:13; 21:18; 1கொரிந்தியர் 15:7 மற்றும் யாக்கோபு நிரூபம் முழுவதும்).

இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்பு தச்சுப்பணி செய்தார் என்று நற்செய்தியாளர் மாற்கு நமக்கு கூறுகிறார். யோசேப்பு இறந்த பின்பு, சகோதரனாகிய யாக்கோபு குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலைக்கு வரும் வரை, இயேசு அமைதி காத்தார். பின்பு இறைவன் இயேசுவை கிறிஸ்து என்ற நிலைக்கு நேராக நடத்தினார் என்பதை மாற்கு கூறுகிறார். அதுவரை இயேசு தச்சுப்பணி செய்தவராக, குடும்பப் பொறுப்பை ஏற்று செயல்பட்டார் என்பதை அறிந்துகொள்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகளின் ஞானத்தையும், அவருடைய அற்புதங்களின் வல்லமைûயுயம் கண்டு, நாசரேத்தூர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய குழந்தைப் பருவத்தின் போது, இப்படிப்பட்ட வரங்கள் எதையும் அவர் பெற்றிருப்பதாக அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது அவருடைய இறைத்தன்மை வெளிப்படுகிறது. அவருடைய அன்பில் பிதாவின் தன்மை வெளிப்பட்டது.

இயேசுவின் முன்னாள் நண்பர்கள், இரத்த சம்பந்தமான உறவினர்கள் அவருடைய வரங்களின் ஆதாரத்தை அறிந்திருக்கவில்லை. அவருடைய இறைத்தன்மையை அவர்கள் விசுவாசிக்கவில்லை. இறைவனின் குமாரன் அவர்கள் மத்தியில் அற்புதங்களை நிகழ்த்த முடியவில்லை. இறைவன் செய்ய விரும்புவதை அவரால் செய்ய இயலும் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். ஒன்றுமில்லாமையில் இருந்து இறைவன் ஒன்றை உருவாக்க முடியும். ஆக்கினைக்கு ஏதுவானவர்களை நியாயத்தீர்ப்பில் அழிக்க முடியும். ஆனால் குமாரனாகிய கிறிஸ்துவை விசுவாசியாத மக்கள் மத்தியில், தமது வல்லமை மற்றும் ஞானத்தை வெளிப்படுத்தி பரிசுத்த ஆவியானவர் அவரை மகிமைப்படுத்தமாட்டார். இறைவனுடைய ராஜ்யத்தில் விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒருபோதும் திணிக்ப்படுவதில்லை. இறைவனுடைய ஆவியின் செயலுக்கு மனப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்காதவன் அவருடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்க இயலாது.

உனது விசுவாசம் உன்னை இரட்சிக்கின்றது. உன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்கு நீ பொறுப்புள்ளவனாகிறாய். உனது விசுவாசத்தின் மூலம் மற்றவர்களுக்கு ஆண்டவருடைய ஆசீர்வாதம் வழிந்தோடுகிறது. உனது குடும்பத்தார், ஊர் மக்கள் உன்னைப் புறக்கணித்து, துன்புறுத்தினால் ஆச்சரியப்பட வேண்டாம். இவைகள் அனைத்தும் கிறிஸ்துவுக்கு ஏற்பட்டன. நீ உனது எஜமானைவிடப் பெரியவன் அல்ல. அவரிடம் இருந்து கற்றுக்கொள். உனது ஊர் மக்கள் உன்னைப் புறக்கணித்தால், அங்கே தங்கியிராதே. ஏற்றுக்கொள்ளும் இன்னொரு பகுதிக்குச் செல். அங்கே கிறிஸ்துவைக் குறித்தும், இறைவனுடைய ஞானம் மற்றும் வல்லமையையும் குறித்தும் சாட்சியிடு.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களை இரட்சிப்பதற்காக செயல்பட்ட நேரங்களில் எங்களது அவிசுவாசம் மற்றும் விசுவாசக் குறைவிற்காக எங்களை மன்னியும். உறுதியான விசுவாசத்தை எங்களுக்கு கற்றுத்தாரும். உமது வார்த்தையின் ஞானத்தினால் எங்களை நிரப்பும். எங்களில் உமது ஆவியின் வல்லமை பாய்ந்தோடச் செய்யும். எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாங்கள் ஆசீர்வாதமாக இருக்க உதவும். நாங்கள் உம்மை மகிழ்வுடன் துதிக்கும்படி எங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் ஆசீர்வதியும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் இயேசு தமது சொந்த ஊரில் அற்புதங்களை நிகழ்த்த முடியவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 03:34 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)