Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 016 (Jesus Calls Levi to Follow Him)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)

2. இயேசு வரிவசூலிக்கிறவன் லேவியை அழைக்கிறார். அவன் அவரைப் பின்பற்றிச் செல்கிறான் (மாற்கு 2:13-17)


மாற்கு 2:13-17
13 அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். 14 அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 15 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 16 அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 17 இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

இயேசு மனந்திரும்பும் பாவிகளை நேசிக்கிறார். அவர்கள் சத்தியத்திற்காக ஏங்கினார்கள். தங்கள் சுயநீதியினால் நிறைந்த மதப் போதகர்கள் பரிசுத்த இறைவனுக்கு முன்பாக தங்கள் நிலையை உணரவில்லை. ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் தன்னுடைய அசுத்தமான இருதயத்தின் நிலையைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இறைவனின் ஆவியானவர் நமது பாவத்தைக் காண்பிக்கிறார். நமது சொந்த செயல்கள் மூலம் நம்மை மாற்றியமைக்க முடியாத நமது இயலாமையைக் காண்பிக்கிறார்.

பிரியமான சகோதரனே, இறைவனுக்கு முன்பாக நீ குற்றமுள்ளவன். உனது இளமைக் காலம் முதல் நீ தீயவன். இயேசுவிடம் வா. அவரிடம் தூய்மை மற்றும் உண்மையுடன் கூடிய அன்பு நிறைந்துள்ளது. அவருடைய முகத்தின் ஒளியில், உனது இருதயத்தின் இருளை நீ உணர முடியும். அவருடைய இரக்கத்தின் முன்பு உனது சுயபெருமை காண்பிக்கப்படும்.

இயேசு மனந்திரும்பும் பாவிகளை மன்னிக்கிறார். அவர்கள் பாவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி. அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தாலும் சரி. அவர்களை நேசிக்கிறார். அவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவன் உன்னையும் புறந்தள்ளமாட்டார். வீட்டிற்கு திரும்பி வந்த இழந்துபோன குமாரனை தகப்பன் அணைத்துக் கொண்டதைப் போல, அவர் உன்னை ஏற்றுக்கொள்வார்.

அந்நாட்களில் வரிவசூலிப்பவர்கள் மற்றவர்களால் ஏளனமாக எண்ணப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் அந்நிய கடவுளுக்கு பணி செய்வதாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் தங்களுடைய பணியில் காணப்பட்ட தவறுகள் நிமித்தம் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் மக்களை ஒடுக்கினார்கள், லஞ்சம் வாங்கினார்கள், பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். எனவே தான் அவர்கள் சமூகத்தில் வெறுக்கப்பட்டார்கள். மற்ற எல்லா மக்களையும் விட இவர்கள் ஏளனமாக கருதப்பட்டார்கள்.

ஒரு திருடனுக்கும் நன்மை எது தீமை எது என்ற அறிவு உள்ளது. வரிவசூலிப்பவனின் இருதயமும் இறைவனுக்காக ஏங்கியது. இயேசு ஆயத்துறையின் அருகே நின்றுகொண்டிருந்த லேவியின் இருதய சிந்தனைகளை அறிந்திருந்தார். அவனது வாழ்வில் ஒரு சந்தர்ப்பத்தை அவனுக்கு கொடுத்தார். “என்னைப் பின்பற்றிவா” என்றார். வரிகள் மற்றும் பணங்களை இறைவனின் குமாரன் பெரிதாகக் கருதவில்லை. அவர் வரிவசூலிப்பவனின் இருதயத்தைத் தொட்டார். ஒரு வார்த்தையினால் பொருள் நிறைந்த வாழ்வில் இருந்து ஆவி, அன்பு, சத்தியம் நிறைந்த வாழ்விற்கு அவனைக் கொண்டு வந்தார்.

உடனடியாக இயேசுவைப் பின்பற்ற அவன் தயங்கவில்லை. அவன் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்தான். வரிவசூலிப்பவனாகிய அவன் மக்களை அறிந்திருந்தான். அவன் இயேசுவில் மெய் வாழ்வைக் கண்டான். அவன் இயேசுவுடன் ஐக்கியப்படுவதை விரும்பினான். தனது தீய செயல்களைக் குறித்து வெட்கப்பட்டான். அவனுடைய இருதய எண்ணங்களை ஆண்டவர் அறிந்திருந்தார். அவனுடன் இந்த வார்த்தைகளைப் பேசினார்: “என்னைப் பின்பற்றி வா”. இந்த வார்த்தை வரி வசூலிப்பவனுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. எனவே அவன் உடனடியாக ஆண்டவரின் வார்த்தைக்கு கீழப்படிந்தான். தனது பொக்கிஷங்கள், உரிமைகள் மற்றும் பதவி அனைத்தையும் விட்டான். உடனே ஆண்டவரை தைரியத்துடன் பின்பற்றினார். தனது வரிவசூலிக்கும் வேலையின் நிமித்தம் இயேசுவிடம் பணம் இல்லை என்பதை புரிந்திருந்தான். இயேசுவிடம் அன்பும், பரலோக வல்லமையும் உள்ளது என்று அறிந்திருந்தான்.

அவனுடைய அளவற்ற மகிழ்ச்சியினால், அவன் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் தனது வீட்டிற்கு அழைத்தான். அழைக்கப்பட்ட விருந்தாளிகளில் பணக்காரர்கள் மற்றும் விபச்சாரக்காரர்கள் இருந்தார்கள். மத்தேயு ஒரு பெரிய திட்டத்துடன் அழைப்பு கொடுத்திருந்தான். தன்னுடைய பழைய நண்பர்களுக்கு மனந்திரும்பவும், இரட்சிக்கப்படவும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தான்.

இயேசு திருடர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுடன் அமர்ந்திருந்ததால் கப்பர்நகூமில் இருந்த வேதபாரகர்கள், பரிசேயர்களுக்கு இயேசுவைக் குறித்து புறம்பேச சந்தர்ப்பம் கிடைத்தது. பரிசுத்தம் மற்றும் வாழ்க்கை முறையைக் குறித்த அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப இயேசுவின் நடத்தை இல்லை என்று அவர்கள் தங்கள் இருதயங்களில் இயேசுவை கடிந்துகொண்டார்கள். அவருடைய சீஷர்களை எச்சரித்தார்கள். தன்னுடன் அமர்ந்திருந்த மக்களின் நிலையை இயேசு அறிந்திருக்கவில்லை என்று நினைத்தார்கள்.

தங்கள் பெருமையை வெளிப்படுத்திய அவர்களின் இருதயத்தை இயேசு அறிந்திருந்தார். ஒவ்வொரு மனிதனும் தன்னில்தானே வியாதிப்பட்டவன் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். சிலர் இந்த உண்மையை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் தங்களை சரியானவர்கள், நல்லவர்கள், நீதிமான்கள் என்று கருதினார்கள். ஆனால் அவர்களின் நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் நீதியை விட சிறந்ததாக இல்லை. ஒரு கட்டளையை மீறுகிறவன் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறினவன் ஆவான். வித்தியாசம் இல்லை. எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை இழந்துப்போனார்கள்.

நீ உன்னைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீ நல்லவனா அல்லது கெட்டவனா? உங்கள் பட்டணத்தில் உள்ள மோசமான மனிதனை விட உன்னை நீ சிறந்தவனாகக் கருதுகிறாயா? உனக்கும் எல்லாப் பாவங்களும் உண்டு என்பது உனக்குத் தெரியுமா? நீ விழாமல் இருக்க ஆண்டவருடைய கிருபை தான் உன்னைப் பாதுகாக்கிறது. நீ உன்னை நீதிமானாகக் கருதினால், இயேசு உனக்கு உதவி செய்ய முடியாது. மனந்திரும்பி, இருதயம் நொறுங்குண்டு, ஆவியில் எளிமையுள்ள மக்கள் தான் அவருடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க முடியும். மனந்திரும்புகிறவர்கள் தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்கள். அவர்கள் மத்தியில் அவருடைய பிரசன்னம் உண்டு.

பின்பு லேவியின் பெயர் மத்தேயு என்று மாற்றப்பட்டது. கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அப்போஸ்தலர்கள் அவனிடம் வந்து ஆண்டவரின் வார்த்தைகளைக் குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அவன் வரிவசூலிப்பவனாக இருந்த போது அநேக மொழிகளில் எழுதும் திறமை பெற்றவனாக இருந்தான். அவன் இனிமேல் பணத்தை சேகரிப்பவன் அல்ல. இறைவனின் வார்த்தையை சேகரிப்பவன். அவனுடைய ஆண்டவர் உன்னையும் அழைக்கிறார்: “என்னைப் பின்பற்றி வா”

விண்ணப்பம்: இரட்சிக்கும் ஆண்டவரே, நீர் வரிவசூலிப்பவனாகிய லேவியை புறக்கணிக்கவில்லை. எனவே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவனுடைய இருதய சத்தத்தைக் கேட்டீர். அவனுக்கு இறைகட்டளையைக் கொடுத்தீர். “என்னைப் பின்பற்றி வா” ஆண்டவரே, நான் லேவியை விட சிறந்தவன் அல்ல. நீர் என்னுடைய சிந்தனைகள், என்னுடைய வார்த்தைகள் எனது பழைய செயல்களை அறிந்திருக்கிறீர். என்னுடைய பெருமை, அசுத்தங்கள், பண ஆசைக்காக என்னை மன்னியும். உலகப்பொருள்களின் மீதான நாட்டத்தில் இருந்து என்னை விடுவியும். என்னை மட்டுமல்ல, உம்முடைய பரிசுத்த வார்த்தைக்காக ஏங்கும் என்னுடைய நண்பர்களையும் விடுவியும். எங்கள் மீதான உமது அன்பு, பொறுமைக்கு நன்றி. ஆமென்.

கேள்வி:

  1. இயேசு ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளுடன் பந்தியிருந்ததன் முக்கியத்துவம் என்ன?

மனனவசனம்:
“இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன்
வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை;
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு
(மாற்கு2:17).

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 09:57 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)