Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 041 (Jesus Reveals the Truth of Hearts)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

13. இயேசு மாய்மாலக்காரர்களுக்கு அவர்களுடைய இருதங்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தினார் (மாற்கு 7:14-23)


மாற்கு 7:14-23
14 பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். 15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். 16 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். 17 அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். 18 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்த மாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19 அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். 20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

விசுவாசிகளுக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய சோதனை தங்கள் சுய முயற்சிகளினால் பரிசுத்தமாகுதலை நாடுவதாகும். எனவே அவர்கள் குறிப்பிட்ட ஆடைகள் மற்றும் உணவுகளை தவிர்க்க விரும்புகிறார்கள். அல்லது இறைவனைப் பிரியப்படுத்த மந்திரங்களை மனப்பாடமாக சொல்கிறார்கள்.

சில திருச்சபைகள் அல்லது சில குழுவினர் குறிப்பிட்ட நாகரீகம் அல்லது வானொலி, தொலைக்காட்சியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை தடைசெய்கிறார்கள். வெளிப்பிரகாரமான தோற்றம் பரிசுத்தத்தைக் கொண்டு வராது என்பதை அவர்கள் அறியவில்லை. நம்முடைய பாவங்களை விட்டு நாம் விலகியிருக்க வேண்டும். வேரோடு பிடுங்காமல் நிலப்பகுதிக்கு மேல் இருக்கும் மரத்தை மட்டும் வெட்டுபவர்களைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் வீணாக உழைக்கிறார்கள். நமது மனங்களில் இருந்து தீமையின் வேரை அகற்ற வேண்டியது அவசியம். அப்போது தீய கனிகள் உதிர்ந்துவிடும்.

எந்தவொரு மனிதனும் தன்னில்தானே நல்லவன் அல்ல என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒருவனின் தோல்வியுற்ற நிலையில் கிறிஸ்து நமக்குப் போதிக்கிறார். மனிதனுடைய இருதயம் நச்சு மற்றும் தீமையின் ஆதாரமாக இருக்கின்றது. பிரியமான வாசகரே, நீங்கள் பகல் நேரங்களில் என்ன நினைக்கிறீர்கள், இரவு நேரங்களில் என்ன கற்பனை செய்கிறீர்கள் என்பதை அறிக்கையிடுங்கள். உண்மையாய் இருங்கள். கிறிஸ்துவின் வார்த்தைகளை அறுவைசிகிச்சை செய்பவரின் அறுவை கத்தியைப் போல ஏற்றுக்கொள்ளுங்கள். அது நம்முடைய இருதயங்களை திறக்கின்றது. அதற்குள் வெளிச்சத்தைக் கொண்டு வருகிறது.

உன்னை பாழ்படுத்தும் உனது முதல் பாவங்களை இறைவனின் குமாரன் குறிப்பிடுகிறார். உனது இச்சைகள், அசுத்தங்கள், வேசித்தனங்கள், ஓரினச்சேர்க்கை போன்ற பாவங்கள் உன்னை பாழ்படுத்துகிறது. பொய்சொல்லாதிருங்கள். இறைவனிடம் உங்கள் இச்சை நிறைந்த சிந்தனைகள், பாவங்கள், அசுத்தமான பேச்சுகளைக் குறித்து கூறுங்கள். அவர் உங்களை மன்னிப்பார். உங்களை குணமாக்குவார்.

கிறிஸ்து உன்னைக் கொலைக்காரன் என்று அழைக்கிறார். நீ யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால் நீ மற்றவர்களை வெறுக்கிறாய். உன் இருதயத்தில் அவர்களைப் புறக்கணிக்கிறாய். அவர்கள் முகத்தில் கூட முழிக்கக் கூடாது என்று எண்ணுகிறாய். உனது எதிரிகளை நேசிக்கவும், உன் பகைவர்களை முழுமையாக மன்னிக்கவும் இயேசு கற்றுக்கொடுக்கிறார். ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் திருடுகின்ற எண்ணம் இருப்பதை இயேசு காண்பிக்கிறார். உனக்குச் சொந்தமில்லாத ஏதேனும் ஒன்றை உனது கைகளில் நீ வைத்திருக்கிறாயா? மற்றவர்களின் நேரம், சிந்தனைகள், சிறிய அல்லது பெரிய காரியங்களை நீ திருடுகின்றாயா? உனக்குச் சொந்தம் அல்லாததை அதற்குரிய உரிமையாளர்களிடம் கொடுத்துவிடு. அவர்களிடம் உனது பாவத்தை அறிக்கையிடு. இறைவனை விட்டுவிட்டு பணத்தையும், உடைமைகளையும் மக்கள் நாடுகிறார்கள். நாம் உன்னதமானவரை வஞ்சிக்கிறோம் என்பதை அநேக சமயங்களில் உணருகிறதில்லை. அவர் முழு பூமிக்கும், அதன் நிறைவுக்கும் சொந்தக்காரர். இறைவனை விட்டு உனது சரீரம், பெலன், மனம் ஆகியவற்றை திருப்புகின்றயா? அல்லது அவருக்குச் சொந்தமாக உன்னை ஒப்புக்கொடுக்கிறாயா? உன்னை ஆராய்ந்து பார். இயேசுவின் முன்பு உனது சூழ்நிலையை சிந்தித்துப் பார். பெருமை கொள்ளாதே. உண்மையாக அறிக்கையிடு.

உனது இருதயம் பொறாமை, வஞ்சகம், பகையினால் நிறைந்திருக்கிறது. நீ ஆடம்பரமாக வாழ முற்படுகிறாய், உனது சுயம் உனது விக்கிரகமாக உள்ளது. நீ உன்னையே ஆராதிக்கின்றாய். மற்றவர்களுடன் உன்னை ஒப்பிட்டு உன்னை உயர்வாகக் கருதுகிறாய். உனது விண்ணப்பங்கள் மூலம் இறைவனை நிந்திக்கிறாய். ஏனெனில் உனது முழு இருதயத்தோடு நீ ஆண்டவரை நேசிக்கவில்லை. உனது கேடான ஆசைகள் உன்னை வழிநடத்துகின்றன. நீ இரவுபகலாக பகை, பெருமை, ஆணவத்தினால் நிறைந்து செயல்படுகிறாய்.

எத்தனை முறை நீ வீணாக இறைவனுடைய பெயரை பயன்படுத்தி இருக்கிறாய்? உனது வாழ்வு மற்றும் உனது எண்ணங்களின் மையமாக அவர் இல்லை. பெருமை மற்றும் ஆணவம் உன்னை ஆட்கொள்ளாதபடி எச்சரிக்கையாய் இரு. இறைவனை விட்டுப் பிரிந்துபோன சாத்தானின் உண்மையான பாவம் இது தான். அது பெருமை ஆகும்.

பிரியமான சகோதரனே, நமது அறிவின்மையை நாம் ஒத்துக்கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனங்களை பிரகாசிப்பிக்காவிட்டால் இறைவனை நாம் அறிய முடியாது. அவர் உங்களை விசுவாசம், மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துகிறார். ஆண்டவருடைய அன்பில் நாம் புதுப்பிக்கப்படுகிறோம்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, எங்கள் தீய இருதயத்தை மன்னியும். எங்கள் அசுத்த இச்சைகளில் இருந்து எங்களை தூய்மையாக்கும். பகை, களவு, பெருமை, ஆணவம், போன்ற பாவங்களில் இருந்து எங்களை பரிசுத்தப்படுத்தும். எனது பாவத்தை உமக்கு முன்பு அறிக்கையிடுகிறேன். கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிசுத்தமடைய விரும்புகிறேன். நான் வீழ்ச்சியடையாதபடி உமது பரிசுத்த ஆவியில் என்னைப் புதுப்பியும். சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும். நிலைவரமான ஆவியை எனக்குத் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் இருந்தும் புறப்படுகின்ற உண்மையான பாவங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 03:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)