Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 003 (Christ's Personal Name)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

ஆ) கிறிஸ்துவின் தனிப்பட்ட பெயர், அதனுடைய முக்கியத்துவம்


ஆண்டவரின் தனிப்பட்ட பெயர் “இயேசு” ( Iesous ) என்பதாகும். இதற்கு இணையான எபிரெய வார்த்தை “யோசுவா” (Yehoshua). இந்தப் பெயர் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு உச்சரிப்புடன் உள்ளது. ஜெர்மானியர்கள் “எசூஸ்” என்று உச்சரிக்கிறார்கள். அரேபியர்களும் கிட்டத்தட்ட இதே போன்று உச்சரிக்கிறார்கள். அவர்கள் “யெசூ” என்று உச்சரிக்கிறார்கள். அவருடைய பெயர் குரானில் “ஈசா” என்று வருகின்றது.

“இயேசு” என்பதற்கு இரட்சகர் என்று அர்த்தம். இரட்சிக்கும் செயலைக் குறிக்கிற வினைச்சொல்லில் இருந்து இது வருகின்றது. எபிரெயத்தில் யோசுவா என்பதற்கு இறைவன் உதவுகிறார், சீர்படுத்துகிறார், இரட்சிக்கிறார் என்று அர்த்தம். சர்வவல்லமையுள்ளவர் மனிதர்களிடம் இரக்கமுள்ளவராக உள்ளார். அவர் செயல்படுகிறார், ஆசீர்வதிக்கிறார், அவருடைய நாமத்தை ஏற்றுக்கொள்பவர்களை இரட்சிக்கிறார். நமக்காக இறைவன் செய்த செயல்களின் ஒட்டுமொத்த தொகுப்பையும் இயேசு என்ற பெயர் வெளிப்படுத்துகிறது. உன்னதமானவர் நியாயம்தீர்க்க வரவில்லை. அவர் இயேசுவின் வருகை மூலம அன்பு மற்றும் மீட்பின் புதிய யுகத்தை திறந்தார். யோசேப்பிடம் காபிரியேல் என்ற தூதன் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடும்படி கூறினான். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களில் இருந்து இரட்சிப்பார் (மத்தேயு 1:21). நற்செய்தியாளர் மத்தேயு உடனடியாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். “இயேசுவில் இறைவன் நம்மோடு இருக்கிறார்”. நமது பாவங்களின் நிமித்தம் அவர் இனி ஒருபோதும் நமக்கு எதிராக இருப்பதில்லை. நியாயப்பிரமாணத்தின்படி அவர் நம்மை அழித்துவிடமாட்டார். அது நமக்கு எதிராக உள்ளது. மரியாளிடத்தில் பிறந்தவரின் நிமித்தம் அவர் நம்மை இரட்சிக்கிறார். இயேசு என்ற பெயர் நியாயப்பிரமாண யுகத்தின் முடிவையும், கிருபை யுகத்தின் ஆரம்பத்தையும் குறிப்பிடுகின்றது.

“கிறிஸ்து” என்பது இயேசு என்ற பெயர் அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் “இயேசு” என்பது அவரின் தனிப்பட்ட பெயர். “கிறிஸ்து” என்பது அவருடைய பட்டப்பெயர். அவருடைய தனிப்பட்டப் பணியைக் குறிப்பிடுகின்றது. அவருடைய இறை பதவியை வெளிப்படுத்துகின்றது.

இயேசுவின் தன்மையை நீங்கள் அறிந்துகொண்டீர்களா? அவர் மெய்யான மனிதனிலிருந்து வந்த மெய்யான மனிதன். அதே சமயம் மெய்யான இறைவனிலிருந்த மெய்யான இறைவன்.

தீர்க்கதரிசனங்களுடன் சேர்த்து, பரலோகத்திலிருந்து வந்த நற்செய்தியும் அவருடைய தெய்வீக மற்றும் மனிதத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. அவர் பரிசுத்த ஆவியினால் மரியாளிடத்தில் உற்பத்தியானார். எல்லா மனிதர்களைப் போல அவரும் மனித சரீரத்தைப் பெற்றார். மேலும் இறைதன்மையும் அவருக்குள் மறைந்திருந்தது. அவர் உன்னதமானவருடைய ஆவியாய் இருக்கிறார். இந்த ஆவியின் வல்லமையினால், இயேசு வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார். மரித்தோரை உயிருடன் எழுப்பினார். பிசாசுகளைத் துரத்தினார். அசுத்த ஆவிகள் அவருடைய பெயரையும், அவருடைய உண்மையான தன்மையையும் அறிந்து வைத்திருந்தன. அவர் அருகில் வந்தபோது அவைகள் அலறின. “எங்களை போகவிடுங்கள், நசரேயனாகிய இயேசுவே எங்களுக்கும் உமக்கும் என்ன. எங்களை அழிக்கவா வந்தீர்? உம்மை நாங்கள் அறிவோம். நீர் பரிசுத்தம் (மாற்கு 1:24) நரகத்தின் ஆவிகள் இயேசுவை சரியாக அறிந்துவைத்திருந்தன. மனிதர்கள் தான் குருடராக இருக்கிறார்கள். அவர்கள் மிக அரிதாகவே அவரையும் அவர் ஆண்டவர் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள்.

இது இயேசு என்ற பெயரின் சிறந்த தன்மையாகவும், இரகசியமாகவும் இருக்கிறது. அவர் பரிபூரண மனிதன், அவர் மெய்யான ஆண்டவர். திருச்சபை இந்த இரகசியத்தை மகிழ்ச்சியுடனும், நிச்சயத்துடனும் அறிக்கையிட்டது. “இயேசுவே ஆண்டவர்”.

“இயேசு” என்ற பெயர் பூமியில் தொடர்கிறதைப் போல பரலோகத்திலும் தொடர்கின்றது. இரத்த சாட்சியான ஸ்தேவான் வானங்கள் திறந்திருக்கிறதைக் கண்டான். இறைவனுடைய குமாரன் அவருடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதைக் கண்டான். தனது மரணத்தின்போது சத்தமிட்டுக் கூறினான். “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஒப்புவிக்கிறேன்” (அப் 7:56-59).

தர்சு பட்டணத்து சவுலிற்கு தமஸ்குவின் வாசல் அருகே மகிமையுள்ள நசரேயன் இயேசு சரியான காரியத்தை வெளிப்படுத்தினார். “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே”. (அப் 9:5) சவுல் பக்திவைராக்கியம் மிக்க பரிசேயன். மோசேயின் நியாயப்பிரமானத்தில் தேர்ச்சி பெற்றவன். மதவெறி கொண்ட சுயநீதிமிக்க மாய்மாலக்காரனாக இருந்த அவன் விசுவாசியாகவும், கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும் மாறினான். அவன் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தில் மகிழ்ச்சியுடன் அறிக்கையிடுகிறான்; “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" பிலிப்பியர் 2:9-11).

இயேசு என்பது வெறுமனே பெயர் மட்டுமல்ல, அது அற்புதமான இரகசியம். அதை விசுவாசத்துடன் நாம் அறிக்கையிடும்போது, ஆண்டவரின் பிரசன்னத்தை கொண்டுவருகிறது. அவர் தமது ஊழியக்காரர்களுடன் பேசுகிறார். அவர்களுடைய வார்த்தைகள் மூலம் செயல்படுகிறார். இன்று அநேகர் ஏற்றுக்கொள்ளும்படியாக, நாம் இயேசுவின் நாமத்தை பிரசங்கிக்கிறோம். அவர்களுக்குள் இறை வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது: “ யோவான்1:12. இந்த ஒப்பற்ற நாமத்தில் பேதுரு ஒரு முடவனை எருசலேமில் குணமாக்கினான். (அப்3:1-4:31) இந்த நாமத்தின் வல்லமையினால் அப்போஸ்தலர்கள் பிசாசுகளைத் துரத்தினார்கள். திருச்சபை அவருடைய அடுத்த வருகைக்காக காத்திருக்கிறது. “ஆண்டவராகிய இயேசுவே வாரும் (வெளி).

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவார்த்தையாக இருக்கிறீர். உமக்குள் சரீரப்பிரகாரமாக இறைவனின் பரிபூரணமெல்லாம் அடங்கியிருந்தது. நீர் இறைவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிறீர். நீர் அனைத்து வியாதிகள், மரணம், பாவங்கள் மற்றும் சாத்தானை மேற்கொண்டிருக்கிறீர். அன்புள்ள இறை ராஜ்யத்தினுடைய கதவுகளை எங்களுக்காகத் திறந்த வெற்றியாளராக நீர் இருக்கிறீர். உமது வருகைக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைப் போல் எங்களை மாற்றும்படி வேண்டுகிறோம். எங்கள் பலவீனத்தில் உமது பலன் வெளிப்படி உதவும். ஆமென்.

கேள்வி:

  1. “இயேசு” என்ற பெயரின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 05:02 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)