Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)
1. அனதோலியாவில் பவுல் – கொரிந்துவிலும் எபேசுவிலும் அப்பொல்லோ (அப்போஸ்தலர் 18:23-28)அப்போஸ்தலர் 18:23-28 பல பட்டணங்களில் பல்வேறு பிள்ளைகளைப் பெற்றெடுத்த தகப்பனைப் போல பவுல் இருந்தார். அவர் அவர்களுக்காக ஏக்கங்கொண்டவராக அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விருப்பங்கொண்டிருந்தார். அவர் அந்தியோகியாவில் நீண்ட காலம் ஓய்வெடுக்காமல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு மலைகளையும் சமவெளிகளையும் கால்நடையாகவே கடந்து அடுத்த அருட்பணி பயணத்தை ஆரம்பித்தார். ஆபத்தான ஆறுகளைக் கடந்தார். வனாந்தரங்களில் தண்ணீரின்றி தவிப்பது என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். தன் மூலமாக மனமாற்றமடைந்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்குப் பின்தொடர் பணியைச் செய்து, அவர்களை பெலப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தவும் பவுலுடைய இருதயம் அவரை நெருக்கி ஏவியது. அவர்களுடைய நடைமுறை அன்பின் மூலமாகவும் மிகுதியான நம்பிக்கையின் மூலமாகவும் இருள் நிறைந்த உலகத்தில் அவர்கள் ஒளியாக ஒளிரவேண்டும் என்று அவர்களுக்காக பவுல் ஏக்கங்கொண்டார். அவர் திருச்சபைகளை நாட்டுவதற்காக மட்டும் தன்னுடைய பிரயாணத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அவர் தாழ்மையோடும் பயபக்தியோடும் நம்பிக்கையின் சடங்குகளையும் ஐக்கியத்தையும் அந்த மக்களோடு பகிர்ந்துகொண்டார். அவர் தனித்திருக்கும் மக்களையும் திருச்சபையோடு இணைக்கும்படி முயற்சித்தார். ஏனெனில் யாரும் யாரைக்காட்டிலும் மேலானவர்கள் அல்ல, அனைவரும் கிறிஸ்துவின் உடலுறுப்புகள். பவுல் எபேசுவிற்கு வருவதற்கு முன்பாகவே இயேசுவை நம்பிய போதகனாகிய அப்பொல்லோ தீடீரென அங்கு வந்திருந்தார். அவர் எருசலேமிலிருந்தோ அல்லது அந்தியோகியாவிலிருந்தோ வராமல் அலெக்சாந்திரியாவிலிருந்து வந்திருந்தார். மத்தியதரைக் கடல்கரையிலிருந்த இந்த அலெக்சாந்திரியா நகரம் அக்காலத்தில் ரோமாபுரிக்கு அடுத்தபடியான பெரும் நகரமாகக் காணப்பட்டது. அத்தேனே பட்டணத்தைக் காட்டிலும் அக்காலத்தில் கிரேக்க கலாச்சாரத்திற்கு மையமாக இந்த நகரம்தான் விளங்கியது. இங்கு வாழ்ந்த புகழ்பெற்ற தத்துவஞானியாகிய பிலோ கிரேக்கக் கலாச்சாரத்தை பழைய ஏற்பாட்டின் ஞானத்தோடு இணைப்பதற்கு முயற்சி செய்தார். அப்பொல்லோ புத்தகங்களை வாசித்ததன் மூலமாக அறிவைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஏனெனில் அவர் ஒரு திறமையான பேச்சாளராகவும் வேதாகமத்தை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய இருதயத்தில் வாழ்கிறார் என்ற உண்மையை அறியாதிருந்த அப்பொல்லோ திருமுழுக்கு யோவானுடைய போதனைகளைப் பின்பற்றினார். அவர் தண்ணீர் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, தன்னுடைய பாவங்களில் இருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அலெக்சாந்திரியாவில் அல்லது எருசலேமில் கிறிஸ்தவர்களைக் கண்டு அவர்கள் மூலமாக நசரேயனாகிய இயேசு கிறிஸ்து என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். பழைய ஏற்பாட்டை ஆழமாக ஆராய்ந்து பார்த்த அப்பொல்லோ இயேசுவில்தான் பழைய ஏற்பாட்டிலுள்ள மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் அற்புதமாக நிறைவேறியுள்ளன என்பதை உணர்ந்திருக்கலாம். அவர் இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பரமேறுதலையும்கூட கேள்விப்பட்டிருக்கலாம். அவர் மீண்டும் வந்து தன்னுடைய அரசை பூமியில் நிறுவுவார் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கலாம். அப்பொல்லோ விடுதலையின் மையத்தைப் புரிந்துகொள்ளாவிட்டாலும், பரிசுத்த ஆவியானவர் அவருடைய உள்ளத்தில் இன்னும் வாழ ஆரம்பிக்காவிட்டாலும், இந்தக் கிறிஸ்தவ உபதேசங்களை ஆர்வத்தோடும் பேச்சுத் திறமையோடும் பிரசங்கித்து வந்தார். இருப்பினும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் மூலமாக பணிசெய்ததைப் போலவே பரிசுத்த ஆவியானவர் அப்பொல்லோ மூலமாகவும் செயல்பட்டார். அவர் திருமுழுக்கு யோவானுடைய ஆவியினால் நிறைந்திருந்தார். ஆயினும் அவர் ஆவியினாலும் தண்ணீரினாலும் மறுபடியும் பிறந்திருக்கவில்லை. ஜெப ஆலயத்திலிருந்த யூதர்களிடத்தில் அப்பொல்லோ இயேசுவைப் பற்றி பிரசங்கிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட ஆக்கில்லாவும் பிரிசில்லாளும் கிறிஸ்தவத்தின் சாட்சி உறுதிப்படுத்தப்படுவதைக் கண்டு மனமகிழ்ந்தார்கள். ஆயினும் பேச்சுத் திறமையுடன் அற்புதமான பாணியில் சரியான வார்த்தைகளைப் பேசிய அப்பொல்லோவின் கிறிஸ்தவத்தைக் குறித்த அறிவு குறைவுள்ளதாக இருந்தது என்பதை அவர்கள் விரைவாக கண்டுகொண்டார்கள். அவர் கிறிஸ்துவின் நம்பிக்கை வைத்த ஒரு தத்துவஞானியைப்போல பேசினாரே தவிர பரிசுத்த ஆவியினால் நிரம்பிய இறைவனுடைய பிள்ளையைப் போல பேசவில்லை. ஆகவே கல்வியறிவற்ற அந்த இரண்டு கலைஞர்களும் அப்பொல்லோவை தங்கள் வீட்டிற்கு அழைத்து, விடுதலையைக் குறித்த உண்மைகளை முழுமையாக அவருக்குக் கற்பித்தார்கள். இந்தப் பாடங்களில் நாம் நான்கு முக்கிய உண்மைகளைக் காண்கிறோம்: முதலாவது, மிகுந்த புத்திக்கூர்மையும் கல்வியறிவும் பெற்றிருந்த வாலிபனாகிய அப்பொல்லோ கூடாரத் தொழில் செய்யும் ஏழைகளிடத்திலிருந்து கற்றுக்கொள்ளும் தாழ்மையுடையவராக இருந்தார். இரண்டாவது, இயேசுவை விசுவாசித்து, கற்றுத் தேர்ந்த தத்துவஞானிகளாக இருந்தும் பரிசுத்த ஆவியின் வல்லமையை அறியாதவர்களைக் காட்டிலும் பரிசுத்த ஆவியின் அருட்பொழிவைப் பெற்ற எளிய இறைமக்கள் அதிக ஞானமுள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். மூன்றாவது, இந்தக் காரியத்தில் பிரிசில்லாள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம் எப்போதும் அவருடைய பெயர்தான் முதலில் குறிப்பிடப்படுகிறது. ஆகவே, விசுவாசமுள்ள பெண்கள் உண்மையுள்ள சாட்சிகளாக கிறிஸ்துவைப் போதிக்க முடியும். நான்காவதாக, எளிய விசுவாசியாகிய அனனியாவின் மூலமாக தமஸ்குவில் பவுல் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதைப் போல, அப்பொல்லோவும் இந்த எளிய கூடாரத் தொழிலாளர்கள் மூலமாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கலாம். பெரியவர்களும் வரம்பெற்றவர்களுமாக தங்களை எண்ணிக்கொண்டிருக்கிறவர்களை வெட்கப்படுத்தும்படி இறைவன் பல தருணங்களில் எளியவர்களைப் பயன்படுத்துகிறார். எளிமையும் உண்மையுமுள்ள அங்கத்தவர்களைக் கொண்ட சபைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். அவர்கள் பிரசங்கியின் பிரசங்கத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதைக் காணும்போது அனைத்து மக்களுக்கு முன்பாவும் அவற்றை வெளிப்படுத்தி பிரசங்கியைக் காயப்படுத்தாமல், அவரை தனியாக தங்கள் வீட்டிற்கு அழைத்து, பரிசுத்த ஆவியானவரின் சத்தியத்தை அவருக்கு விளக்குவார்கள். பவுல் இந்த கூடாரத் தொழிலாளிகளுடன் சேர்ந்து பணிசெய்த காலத்தில் அவர்களுக்கு போதிய அளவு போதனையைக் கொடுத்திருந்த காரணத்தினால்தான் அவர்கள் அப்பொல்லோவுக்குப் போதிக்கத்தக்கவர்களாயிருந்தார்கள் என்பதும் இதிலிருந்து விளங்குகிறது. அப்பொல்லோ வாசித்த அனைத்து தத்துவஞானிகளுடைய புத்தகங்களும் கொடுக்காத ஞானத்தை அவர்கள் கொடுக்கக்கூடியவர்களாயிருந்தார்கள். அனைத்துத் தலையறிவையும் பற்றியெரியும் ஆர்வத்தையும்விட பரிசுத்த ஆவியில் வைக்கும் நம்பிக்கை மிகுந்த நம்பிக்கை வாய்ந்தது. எபேசுவில் இன்னும் பல விசுவாசிகள் இருந்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம். பவுல் அந்தப் பட்டணத்தில் செய்த குறுகிய கால பணியும் பிரிசில்லாளுடைய பிரசங்கமாகிய நீர் தொடர்ந்து ஊற்றப்பட்டதும் அங்கு திருச்சபை ஆரம்பிக்கப்படுவதற்கு காரணமாயிற்று. மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த திருச்சபைகளில் அது மிகவும் புகழ்பெற்றதாயிருந்தது. தத்துவஞானியைப் போல காணப்பட்டாலும் இயேசுவை விசுவாசித்து, பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிக்கக்கூடியவருமாயிருந்த அப்பொல்லோவை ஏற்றுக்கொள்ளும்படி எபேசு திருச்சபை கொரிந்து திருச்சபைக்கு பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். அப்பொல்லோ எபேசுவிற்கு தன்னுடைய சுய சிந்தையின் மீதும் மனந்திரும்புதல் மீதும் சார்ந்தவராக வந்ததைப் போல அங்கிருந்து திரும்பிச் செல்லவில்லை. இப்போது அவருடைய போதனை கிருபையை மட்டுமே வலியுறுத்துவதாயிருந்தது. கிறிஸ்துவே இரட்சகர், விடுதலையாளர், வல்லமையுள்ளவர், வெற்றி சிறந்தவர் என்பதை இந்த தெய்வீக கிருபையினால் கொரிந்துவிலும் அப்பொல்லோ நிரூபித்தார். அங்கு அவர் தன்னுடைய பேச்சு வன்மையினாலும் கல்வியறிவினாலும் யூதர்களை மேற்கொண்டார். அவர் மூலமாக பலர் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அவர்கள் அவரையே தங்கள் ஆவிக்குரிய தந்தையாகக் கருதினார்கள் (1 கொரிந்தியர் 1:12). ஆகிலும் இந்தப் பிரசங்கி விசுவாசிகளுக்கு மன உளைச்சலை உண்டுபண்ணினார். காரணம் அவர் எருசலேமிலும் அந்தியோகியாவிலும் இணைந்திருந்த திருச்சபைகளோடு இணையாமல் தனித்திருந்தார். அப்படியிருந்தும் பவுல் அவரை கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனாக ஏற்றுக்கொண்டு, திருச்சபைகளை பெலப்படுத்துவதற்கு கிறிஸ்து அவருக்குக் கொடுத்திருந்த வரங்களை அங்கீகரித்தார். அன்புள்ள சகோதரரே, வித்தியாசமான பேச்சாளர்களாக இருந்தாலும், கிறிஸ்துவுக்கு நேர்மையான சாட்சிகளாயிருப்பவர்கள் வேறு சபைகளிலிருந்து வந்தாலும் அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். நீங்கள் கிறிஸ்துவில் முழுமையடையும்படி அவர்கள் உங்களுடைய குழுவிலும் பணிசெய்யட்டும். ஆயினும், கொள்கையளவில் துர் உபதேசங்களையும் பிரிவினைகளையும் உண்டுபண்ணுகிறவர்களை உங்களுடைய ஐக்கியத்தில் அனுமதிக்க வேண்டாம். விண்ணப்பம்: அறிவில் குறைவுள்ளவர்களையும் உம்முடைய சாட்சிகளாக மாற்றும் இறைவனே நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். கல்வியறிவும் மனந்திரும்புதலுமுள்ள ஒரு வாலிபனை எளிமையும் கிருபையும் நிறைந்தவர்களிடத்தில் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளும்படி நீர் அவர்களை வழிநடத்தியதால் நாங்கள் உம்மைக் கனப்படுத்துகிறோம். மற்ற திருச்சபைகளிலுள்ள விசுவாசமுள்ள மக்களிடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு எங்கள் திருச்சபை முழுமையடைய வேண்டிய அவசியத்தை உணரும்படி எங்களுக்குத் தாழ்மையையும், தைரியத்தையும், ஒருங்கிணைந்து செயல்படும் மனப்பான்மையையும் தாரும்.. கேள்வி:
|