Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 091 (Spiritual Revival in Ephesus)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

2. எபேசுவில் ஏற்பட்ட ஆன்மீக எழுப்புதல் (அப்போஸ்தலர் 19:1-20)


அப்போஸ்தலர் 19:1-7
1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: 2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 7 அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.

பவுல் தன்னுடைய அருட்பணி பயணங்களில் தலைநகரங்களையும், தொலைதொடர்பு மற்றும் வியாபாரத்திற்கான மையங்களையுமே பணித்தளங்களாக தெரிவுசெய்வது அவருடைய வழக்கமாயிருந்தது. அந்த மையங்களிலிருந்து நற்செய்தி மற்ற இடங்களுக்கு தானாகவே செல்லும் என்பதை அவர் அறிந்திருந்தார். இவ்வாறு அவர் அந்தியோகியா, இக்கோனியம், பிலிப்பு, தெசலோனிக்கேயா மற்றும் கொரிந்து ஆகிய நகரங்களில் பணிசெய்தார். எருசலேமிற்கும் ரோமாபுரிக்குமிடையில் சங்கிலித்தொடர்போல காணப்பட்ட இந்த நகரங்களின் வரிசையில் எபேசுவே தொடர்புப்புள்ளியாகக் காணப்பட்டது. ஆயினும் அந்நகரம் அப்போது நற்செய்திக்கு திறந்ததாக காணப்படவில்லை. அந்நேரத்தில் அங்கு ஒரு தீவிரமான திருச்சபையும் இருக்கவில்லை.

அனதோலியாவின் உள்ளான சமவெளிகளிலிருந்து இந்த அழகான கடற்கரைத் தலைநகரத்திற்கு பவுல் வந்தபோது, அந்நகரத்தில் 25,000 பேர் அமரக்கூடிய அரங்கம் அங்கு காணப்பட்டது. எபேசு ரோமர்களினால் சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அந்நகரத்தின் குடிமக்கள் திறமைவாய்ந்த வியாபாரிகளாயிருந்தார்கள். நகரத்தின் நடுவில் அர்டிமிஸ் தேவதையின் ஆலயம் இருந்தது. அது நகரத்தின் சமய வழிபாட்டு மையமாக இருந்ததால், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தனிநபர்களாகவும் குழுக்களாகவும் பெரிய எண்ணிக்கையில் புனித யாத்திரையாக இங்கு வந்தார்கள்.

பவுல் இந்த நகரத்திற்கு வந்தபோது திருமுழுக்கு யோவானுடைய போதனைகளை ஏற்றுக்கொண்டிருந்த 12 பேரைச் சந்தித்தார். இதிலிருந்து இந்நகரம் பன்னாட்டு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதையும் பல்வேறு இறைநம்பிக்கைகளுக்கு உரிய இடமாகவும் பல்வேறு மக்களினங்கள் வாழ்ந்த நகரமாகவும் காணப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். திருமுழுக்கு யோவானுடைய மிகவும் அற்பமான உபதேசத்தை நம்பியவர்கள் கூட அங்கிருந்தார்கள். திருமுழுக்கு யோவானைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாயிருந்தார்கள். அவர்கள் கடுமையான மனந்திரும்புதலையும் தாழ்மையையும் கடைப்பிடித்தார்கள். நசரேயனாகிய இயேசுவே இறைவனுடைய கிறிஸ்து என்றும் அவர் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்து, இறுதியில் பரமேறினார் என்று ஒருவேளை அப்பொல்லோவினால் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போது அவர்கள் இரவு பகலாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு காத்துக்கொண்டிருந்தார்கள்.

விசுவாசமும், கடுமையான மனந்திரும்புதலும், வேதாகமத்தைக் குறித்த ஆழ்ந்த அறிவும், தலையறிவில் இயேசுவை நம்புவதும் போதாது என்பதை பவுல் விரைவாகவே அறிந்துகொண்டார். இந்த சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த நீதியின்படி கிறிஸ்துவின் வருகைக்கு தங்களை ஆயத்தப்படுத்த நினைத்தார்கள். நம்முடைய விசுவாசத்தின் சாரமாகிய கிருபையைக் குறித்த இரகசியத்தை அவர்கள் அறியாதிருந்தார்கள். அது போலவே இன்றும், பல கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் படிக்கிறார்கள், வேதாகமத்தை வாசிக்கிறார்கள், திருச்சபையில் சேர்கிறார்கள், உண்மையாக மனந்திரும்புகிறார்கள், விசுவாசத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவதையும் விடுதலையின் சுயாதீனத்தையும் அறியாதவர்களாயிருக்கிறார்கள் என்பதை நாம் வெட்கத்தோடு அறிக்கை செய்ய வேண்டியிருக்கிறது.

விடுதலையின் சத்தியத்தைப் பற்றிய உங்கள் அறிவும், தண்ணீரில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் திருமுழுக்கும் உங்களை விடுவிப்பதில்லை. பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் வரும் பரிசுத்த ஆவியானவரே உங்களை இரட்சிக்கிறார். விசுவாசத்தின் நோக்கம் சமய அறிவை உங்களுக்குக் கொடுப்பதல்ல, உங்கள் இருதயத்தைப் புதுப்பிப்பது, உங்களை இரண்டாம் முறை பிறக்கச் செய்வது. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் பொழிந்தருளப்படுவதன் மூலமாக நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காகவே கிறிஸ்து சிலுவையில் மரணத்தைச் சந்தித்தார். ஆகவே, புதிய ஏற்பாட்டின் நோக்கம், தியானமோ, அறிவோ, மனந்திரும்புதலோ, பட்சாத்தாபமோ, பக்தியுள்ள வாழ்க்கையோ, கிறிஸ்துவின் வாழ்வைப் பற்றி படிப்பதோ அல்ல என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே. சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதே விடுதலையின் நோக்கம்.

“நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று பவுல் அந்த மனிதரைப் பார்த்து வெளிப்படையாகக் கேட்டார். அவ்விதமாகவே நாங்களும் உங்களைப் பார்த்து தனிப்பட்ட முறையில் கேட்கிறோம்: “நீங்கள் பரிசுத்த ஆவியை உண்மையில் பெற்றிருக்கிறீர்களா? அல்லது இன்னும் உங்கள் பாவத்தில் இறந்துதான் கிடக்கிறீர்களா?”. இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் தப்பியோட நினைக்க வேண்டாம். நின்று, உங்கள் நிலையை அறிந்துகொண்டு, உங்கள் தேவையை அறிக்கை செய்யுங்கள். முழங்கால் படியிட்டு உங்களை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுங்கள். விசுவாசத்தைக் கொண்டு அவருடைய வாக்குறுதிகளினால் அவருடன் இணைக்கப்படுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும்போது நீங்கள் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள். அப்போது நீங்கள் உங்களுக்கு அல்ல, தனது விலைமதிப்பற்ற இரத்தத்தினால் உங்களை விலைகொடுத்து வாங்கிய கிறிஸ்துவுக்கு சாட்சியிடுபவராக மாறிவிடுவீர்கள்.

கிறிஸ்துவின் நாமத்தினால் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட அந்த பன்னிரெண்டு பேருடைய தலைகளில் பவுல் கைகளை வைத்து விண்ணப்பித்தபோது அவர்களுடைய விசுவாசம் முழுமையடைந்தது. இறைவனுடைய வல்லமை அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுத்தது, அவர்கள் ஆண்டவருடைய ஆவியானவரினால் நிரப்பப்பட்டார்கள். நீங்கள் ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றிருப்பீர்களானால் மறுபடியும் நீங்கள் திருமுழுக்குப் பெற வேண்டியதில்லை. ஆனால் உங்கள் திருமுழுக்கை உறுதியாகப் பற்றிக்கொண்டு, நம்முடைய உயிருள்ள ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நம்புங்கள். உங்களுடைய உண்மையுள்ள, இடைவிடாத வேண்டுதலுக்கு ஏற்றவாறு அவர் உங்களுக்கு பதிலளிப்பார். நீங்கள் என்றும் வாழும்படியாக கிறிஸ்து தம்முடைய நற்குணங்களினால் உங்களை நிரப்புவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்று இயேசு தெளிவாகச் சொல்லியருக்கிறார். ஆகவே பரிசுத்த ஆவியானவரை உங்கள் மீது பொழிந்தருளும்படி நீங்கள் அவரிடம் விண்ணப்பம் செய்யுங்கள். இறைவன் உங்களுடைய இருதயத்தில் வாசம்செய்வார், நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாறுவீர்கள். உங்கள் இருதயம் தூய்மையான அன்பினால் நிரப்பப்படும், உங்கள் நாவு விரைவாகப் பேசும் ஆற்றல் பெறும், இவ்வுலகம் முழுவதும் இறைவனைத் தங்கள் துதிப்பாடல்களால் பாடித்துதிக்கும் கூட்டத்தில் நீங்களும் இணைக்கப்பட்டுவிடுவீர்கள். பரிசுத்த ஆவியினால் தொடப்பட்ட இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும் துதி மீட்கப்பட்டவர்களுக்கான தெளிவான அடையாளமாயிருக்கிறது. நீங்கள் இறைவன் அருளிய விடுதலைக்காக அவருக்கு நன்றி சொல்வதை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் கேட்கிறார்களா? நீங்கள் உங்கள் ஆண்டவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களில் நிலைத்திருந்தால் உங்கள் வார்த்தைகள் யாவும் மாறிப்போகும். நீங்கள் உங்களை மகிமைப்படுத்தமாட்டீர்கள், இறைவனை மகிமைப்படுத்துவீர்கள். உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசமாட்டீர்கள், கிறிஸ்துவாகிய இரட்சகரின் வல்லமையைப் பற்றியே பேசுவீர்கள். கெட்ட வார்த்தைகள் எல்லாம் மறைந்து போகும் பொய்கூறுதலும் விலகிப்போகும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் புதிய இருதயத்தையும், புதிய நாவையும் கொடுத்து, உங்களைப் புதிய படைப்பாக்கிவிடுவார்.

இறைவனைத் துதித்து உயர்த்துவதோடு, பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருயத்தில் ஊற்றப்படும்போது அதன் இரண்டாவது கனியாக இறைவனுடைய இரகசியங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இறைவன் உங்களுடைய தகப்பன் என்பதை நீங்கள் திடீரென உணர்ந்துகொள்வீர்கள். உலகத்தைப் படைத்த நித்தியரும் எல்லாம் வல்லவருமான இறைவனை யாரும் தந்தை என்று சொல்ல முடியாது. இறைவன் சரீரத்தின்படி பிள்ளைகளை உடையவர் என்று சிந்திப்பது இயலாத ஒன்று. ஆனால் பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் தாங்களாகவே மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாகிய அவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் என்பதை அறிந்துகொள்வார்கள். மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மரணத்தினால் இறைவனுடைய தத்துப்பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப் பெற்றிருப்பதையும் உணர்ந்துகொள்வார்கள். இந்தக் காரியங்கள் கிருபையினால் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திற்குள் வரும்போது, அவர்கள் தங்கள் இருதயத்தை அறிந்துகொள்வதோடு, அனைத்து மக்களுடைய இருயத்தின் தீமையையும் அறிந்துகொள்வார்கள். அவர்களிலுள்ள அனைத்து இருளினூடாகவும் கிறிஸ்துவின் வெற்றி பிரகாசித்து, அவர்களுக்கு நீதிமானாக்கப்படுதலின் நிச்சயத்தைத் தரும். வரவிருக்கின்ற வெற்றிகரமான, நிலையான, அழியாத மகிமையின் அச்சாரமாக இந்த வல்லமை நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், இறைவனுடைய அரசு நிச்சயமாக வரும் என்றும், அது அனைத்தையும் மேற்கொள்ளும் என்றும் உறுதியாக முன்னுரைக்கலாம்.

நாங்கள் மறுபடியும் உங்களிடத்தில் கேட்க விரும்புவது: “நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்களா? உங்களுடைய முழு இருயத்தோடும் உங்கள் முழு நடத்தையிலும் உங்கள் பிதாவாகிய இறைவனைத் துதித்து, உங்கள் இரட்சகராகிய கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறீர்களா? இறைவன் உங்களுக்குப் பிதா என்பதை நிச்சயமாக அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கியிருக்கிறீர்களா?” ஆம் என்றால் நீங்களும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவராக நொறுங்குண்ட இருதயத்தினாலும், அன்பினாலும், சந்தோஷத்தினாலும் எங்களோடு ஒன்றாயிருக்கிறீர்கள் என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.

விண்ணப்பம்: அன்பின் பரலோக பிதாவே, நீர் எங்களை தீமையிலிருந்து உம்முடைய பிரியமான மகன் மூலமாக விடுவித்து, எங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்து, கிறிஸ்துவின் இரத்தத்தினால் எங்கள் மனசாட்சிகளைச் சுத்திகரித்து, தூய்மையும் மென்மையுமான உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பியிருக்கிறபடியால் நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மைத் துதிக்கிறோம். உம்மை முழு இருதயத்தோடு தேடுகிற அனைத்து வாலிபப் பையன்களையும் பெண் பிள்ளைகளையும் உம்முடைய வல்லமையினால் நிறைத்தருளும். யாரும் உம்முடைய ஆவியானவரை அவர்களிடத்திலிருந்து எடுத்துவிட முடியாது. உம்முடைய கிருபையிலும், உம்முடைய செயலிலும், உம்முடைய விடுதலையின் நீரோட்டத்திலும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்..

கேள்வி:

  1. எபேசுவிலிருந்தவர்கள் பரிசுத்த ஆவியை எப்படிப் பெற்றுக்கொண்டார்கள்? நீங்கள் எவ்வாறு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரைப் பெற்றுக்கொள்வீர்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)