Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 107 (Jesus questioned before Annas and Peter's threefold denial)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)

2. அன்னா முன்பாக இயேசு விசாரிக்கப்படுதலும், பேதுரு மூன்று முறை மறுதலித்தலும் (யோவான் 18:15–21)


யோவான் 18:12-14
12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். 14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

யூதர்கள் மட்டும் இயேசுவைக் கைதுசெய்யவில்லை, அதற்காக அந்தக்கூட்டத்தில் வந்திருந்த ரோமப் போர்ச்சேவகர்களும் அவரைக் கைதுசெய்தார்கள். மரணத்திற்கும் பிசாசுகளுக்கும் ஆண்டவரும், காற்றையும் கடலையும் அடக்கினவரும், பிணியாளிகளைச் சுகமாக்கினவரும், பாவங்களை மன்னித்தவருமாகிய கிறிஸ்து இப்போது தாழ்மையுடன் தம்மைக் கட்டும்படி ஒப்புக்கொடுக்கிறார். சுதந்திரமானவர் கைதியானார். கர்த்தரை அவர்கள் கட்டி, விலங்கிட்டார்கள். நம்முடைய அசிங்கமான பாவங்களினால்தான் இந்நிலையை நாம் உருவாக்கினோம். அவர் சிலுவை வரை தம்மைத் தாழ்த்துவதில் அவருடைய கட்டுகள் ஆரம்பமாயிருந்தன.

கி. மு. 6 முதல் 15 வரை அன்னாதான் பிரதான ஆசாரியனாக இருந்தான். நியாயப்பிரமாணத்தின்படி அவன் சாகும்வரை பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் ரோமர்கள் அவனைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்கள். ஒரு தந்திரமான சட்ட அறிஞனான அவனது மருமகன் காய்பாவாகிய நரியை அவர்கள் தெரிவுசெய்திருந்தார்கள். அவன் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளையும் ரோமர்களுடைய விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடியவனாக இருந்தான். அவன் வஞ்சகமான தந்திரக்காரனாயிருந்து, சாத்தானுடைய தீர்க்கதரிசியாக தேசத்தின் நன்மைக்காக இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று பொய்த் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். அவர்கள் பேரளவில் நியாயம் விசாரித்து, இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தாங்கள் நீதியாக நியாயம் விசாரிப்பதைப்போல நாடகமாடினார்கள். தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்களுக்கு இது நியாயப்படி ஆதரங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை என்று காண்பிப்பதற்காக அப்படிச் செய்தார்கள்.

மற்ற நற்செய்தியாளர்களைப்போல யோவான் இரண்டு நியாயவிசாரணையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரிக்காமல், ஆசாரிய வகுப்பின் தலைவனான அன்னாவின் முன்பு நடைபெற்ற விசாரணையை மட்டுமே கவனத்தில் கொள்கிறார். அன்னா இன்னும் தேசத்தில் நடக்கும் காரியங்களில் அதிக செல்வாக்குச் செலுத்தினான். மரியாதையினிமித்தம் ஆரம்ப விசாரணையை அன்னா செய்யட்டும் என்று காய்பா விட்டுக்கொடுத்தான்.

யோவான் 18:15-18
15 சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.

அந்த இரவில் யோவானும், பேதுருவும் தூரத்திலிருந்து இயேசுவை பின் தொடர்ந்து சென்றார்கள். யோவான் பிரதான ஆசாரியனுக்கு உறவினராய் இருந்தபடியால், அவனால் ஆசாரியார்கள் செல்லும் வழக்கு மன்றத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது. நுழைவாயில் வேலைக்காரர்களால் பாதுகாக்கப்பட்டபடியால் பேதுருவால் நுழைய இயலவில்லை.

கதவருகே இருளில் நின்று கொண்டிருந்த பேதுருவின் மனக்குழப்பத்தை யோவான் உணர்ந்தார். வாசலைக் காத்துக் கொண்டிருந்த வேலைக்காரியிடம் யோவான், பேதுருவிற்கு உதவி செய்ய விரும்பி அவனுக்காக பேசினான். அவள் முழுவதும் அதற்கு இணங்காமல், சந்தேகத்துடன் பேதுருவை வினவினாள். “நீயும் அவனுடைய சீஷரில் ஒருவன் அல்லவா?”, “நான் அல்ல என்று அவன் பதிலளித்தான். தனக்கு ஒன்றும் தெரியாததைப் போலவும், தனக்கு அந்தக் காரியத்தில் எந்தப் பங்கும் இல்லை என்பதைப்போலவும் அவன் நடந்துகொண்டான். அது குளிர்காலமாய் இருந்தபடியால், பின்பு நெருப்பினருகே சென்று அவன் குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.

யோவான் 18:19-24
19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

இயேசுவின் குற்றம், அவருடைய ஆள்த்துவம் மற்றும் அவரது உரிமை கோருதல் பற்றி ஆரம்பநிலை விசாரணை இருக்கவில்லை. அது அவருடைய சீஷர்களைப் பற்றியும், அவரது போதனை முறைகள் பற்றியும் இருந்தது. அக்காலத்தில் அநேக இரகசிய குழுக்கள் அங்கே இருந்தன. அவரை விசாரித்தவர்கள் அவருடைய சீடர்கள் மூலம் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆபத்து நேரிடுமோ என தீவிரமாக கண்டறிய விரும்பினார்கள். அதன் மூலம் அவர்கள் கலகம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

அப்படிப்பட்ட எந்த குழுவும் இருப்பதை இயேசு மறுத்தார். மேலும் அநேகர் வந்து கேட்கத்தக்கதாக தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் அவர் பகலில் வெளியரங்கமாக போதித்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். தலைவர்கள் அவரை அறிவதை நேர்மையுடன் விரும்பியிருந்தால், அவரது போதிக்கும் இடங்களுக்கு சென்று அவருடைய பேச்சுக்கள் மற்றும் அழைப்பு பற்றிய விவரங்களை கேட்டிருக்க வேண்டும். இவ்விதமாக பிரதான ஆசாரியனுக்கு இயேசு பயமின்றி பதிலளித்தார். திடீரென்று வேலைக்காரர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு சாதகமாக இயேசுவை அறைந்தான். இயேசு அவனை திருப்பி அடிக்கவில்லை அல்லது கோபத்தைக் காண்பிக்கவில்லை. அதே நேரத்தில் அவனது குற்றத்தின் ஆழத்தை அவர் குறைத்துவிடவில்லை. அடித்ததற்கான காரணத்தை கூறும்படி அவனை வினவினார். இயேசு நிரபராதியாய் இருந்தபடியால், அந்த வேலைக்காரன் மனந்திரும்புதலை காண்பிக்க தனது வருத்தத்தை தெரிவிப்பது அவசியமாய் இருந்தது.

வேலைக்காரனின் நடத்தைக்கு அன்னா பொறுப்பு என்பதால் இந்த சவாலானது மறைமுகமாக அன்னாவிற்கு கொடுக்கப்பட்டது.அவன் குற்றச் செயலை அனுமதித்திருந்தான். சரியான காரணமின்றி ஒருவனை அடிப்பது அல்லது நிரபராதியை பயமுறுத்தும் செயலைச் செய்ய தன்னுடைய அடிவருடிகளை அனுமதிப்பது போன்ற காரியங்களை இன்று செய்யும் அனைவருக்கும் விரோதமாக இந்த சவால் விடுக்கப்படுகிறது. நமது ஆண்டவர் சிறு செயலுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அவர் கூறுகிறார், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.”

இயேசு தன்னை நீதிபதியாக முன்னிறுத்தி, உண்மை மற்றும் நீதியைக் குறித்து வினவினார். தனது பயமுறுத்தல்களுக்கு இயேசு அடிபணியாததை உணர்ந்த அன்னா விசாரனையை முடிவுக்குக் கொண்டுவர சூது நிறைந்த நரியாகிய தனது மருமகன் காய்பாவிடம் அவரை அனுப்பினான்.

யோவான் 18:25-27
25 சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.

காய்பா இயேசுவின் சீடர்களைக்குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டான். வழக்குமன்றத்தில் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் தாங்கள் கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் என்று அறிக்கைச் செய்யவில்லை. நெருப்பின் வெளிச்சத்தில் பேதுரு அந்த இடத்தில் அந்நியனாக காணப்பட்டான். இயேசுவுடன் தொடர்புள்ளவன் என்று வேலைக்காரர்கள் சந்தேகித்தார்கள். மறுபடியும் பேதுரு பதிலளித்தான். “இல்லை”, “இல்லை”,

சந்தேகித்தவர்களில் ஒருவன் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தான். ஆகையால் அனைவரும் பேதுருவை பயமுறுத்தும்படி பார்த்தார்கள். அவன் கலக்கமடைந்தான். நான் உன்னை அறிவேன், உன்னை நான் தோட்டத்தில் பார்த்தேன் என்று ஒரு வேலைக்காரன் கூறினான். ஆபத்து உச்சகட்டத்தை எட்டியது. ஏனெனில் பேதுரு யாருடைய காதை வெட்டினானோ, அவனுடைய உறவினன் தான் இவன். பேதுருவின் மறுதலிப்பு, சபித்து சொன்ன வார்த்தைகளின் விபரங்களை முழுமையாக யோவான் தரவில்லை. ஆனால் பேதுருவின் மாய்மாலமான நடத்தை, முதன்மையான அப்போஸ்தலரின் தகுதியற்ற தன்மையை யோவான் உறுதிசெய்கிறார்.

சேவலின் கூவல் பேதுருவின் காதுகளில் நியாயத்தீர்ப்பின் எக்காள சத்தம் போல் தொனித்தது. மரணம் வரை தன்னை விருப்பமுடன் பின்பற்றும் எந்த சீஷனையும் இயேசு காணவில்லை. அவர்கள் அனைவரும் ஓடினார்கள், பாவம் செய்தார்கள். பொய் கூறினார்கள் அல்லது மறுதலித்தார்கள். யோவான் நமது ஆண்டவரை மறுதலிப்பதின் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறார். பேதுருவை எச்சரிக்க சேவல் மூன்று முறை கூவிற்று. நமது ஆண்டவரை அறிக்கையிட நாம் பயப்படும்போது. அல்லது நாம் பொய் சொல்லும் போது இறைவன் நமக்கு ஒரு சேவலை கூவும்படி அனுப்புகிறார். சத்திய ஆவியானவர் நம்மீது இறங்க விரும்புகிறார். இயேசுவிடம் சத்திய நாவு, நேர்மையான இருதயம், தெளிந்த மனதை தரும்படி கேளுங்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் சத்தியமுள்ளவர், பொறுமையுள்ளவர், மகத்துவமுள்ளவர், எங்களது பொய்யின் எல்லா வெளிப்பாடுகளையும் மிகைப்படுத்தல்களையும் மன்னியும். மனுக்குலத்தின் கட்டுகளை நீர் அறுத்தீர். எங்கள் நாவுகள் இனிமேல் பொய் உரைக்காதபடி உமது ஆவியால் எங்களைக் கட்டும். உமது சத்தியத்தில் நாங்கள் வேரூன்றச் செய்யும். உமது பெயரில் சாட்சியுடன் இருக்க கற்றுத் தாரும்.

கேள்வி:

  1. அன்னா முன்பு இயேசு விசாரிக்கப்பட்ட போது, அவருக்கும், பேதுருவுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருந்தது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:09 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)