Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 022 (Jesus Charged with Making Agreements with Devils)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

3. பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்ற குற்றச்சாட்டை இயேசு மறுத்தார் (மாற்கு 3:20-30)


மாற்கு 3:20-27
20 பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்குஅநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். 21 அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது,அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். 22 எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக் கொண்டிருக்கிறான்,பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? 24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. 25 ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. 26 சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. 27 பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

சாத்தான் தனது படையை கிறிஸ்துவுக்கு எதிராக திரட்டினான். தோரா மற்றும் நியாயப்பிரமாண நிபுணர்கள் மகிமைமிக்க எருசலேமில் இருந்து வந்தார்கள். அவர்கள் புறக்கணிக்கப்பட்ட வடபகுதியின் மலைகளில் தச்சர் இயேசுவின் இயக்கத்தை கவனிக்க வந்தார்கள். அவரை குற்றம் பிடிக்க வகை தேடினார்கள். நியாயப்பிரமாணத்தை மீறிய செயலுக்காக கைது செய்ய நினைத்தார்கள். நியாயப்பிரமாணத்தின்படி அவர் ஏமாற்றுக்காரர், தேசத்தில் கலகத்தை தூண்டுபவன் என்று நிரூபிக்க முயன்றார்கள்.

அதே சமயத்தில் அவருடைய குடும்பத்தார், அவருக்கு நெருக்கமானவர்கள், அவருடைய சீஷர்கள் அனைவரும் தேசத்தால் புறக்கணிக்கப்படக்கூடிய, அவமானப்படுத்தக்கூடிய பெரிய ஆபத்தில் இருந்தார்கள்.

எனவே தான் அவருடைய குடும்பத்தார் தங்களை பாதுகாக்க அவர் மீது குற்றம் சாட்டினார்கள். அவர் மனநிலை சரியில்லை என்றார்கள். இது அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்கக்கூடிய எளிய வழியாகவும், அதே சமயத்தில் அவர்களை பாதுகாக்கும் வழியாகவும் காணப்பட்டது. அவருடைய ஊழியத்தை தடை செய்யும்படி அவர்கள் தொடர்ந்து முயற்சித்தார்கள். அவரைச் சுற்றிலும் திரளான மக்கள் சுகம்பெறவும், அவருடைய ஞானமுள்ள வார்த்தைகளை கேட்கவும் கூடியிருந்தபடியால், அவர்களால் அவரை நெருங்க முடியவில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறாமையுடன் சொன்னார்கள்: “இயேசுவின் உறவினர்கள் சொல்வது போல, அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்பது உண்மையல்ல. அவன் பெயெல்செபூல் ஆவியினால் நிறைந்திருந்தான்” என்று கூட்டத்தார் முன்பு இயேசுவை குற்றம் சாட்டினார்கள். பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினால் பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். இறைவனுடைய அன்பின் வெளிப்பாடாக இருந்த இயேசுவை சாத்தான் என்று அழைத்தார்கள். வேதபாரகர்களின் கண்களை நரகம் மறைத்தது. அவர்கள் நியாயப்பிரமாணத்தின் எழுத்தை மட்டும் பார்த்தார்கள். இயேசுவில் இறைவனின் இரக்கத்தை உணர முடியாதவர்களாக இருந்தார்கள்.

மக்கள் முன்பு கிறிஸ்து தன்னுடைய நிலையை விளக்கினார். அவர்களுக்கு நரகத்தின் விதிமுறைகள் மற்றும் அதனுடைய மறைவான அதிகாரங்கள் குறித்து விளக்கிப் பேசினார். நரகம் என்பது ஓர் வலிமையான இடம். அதற்குள் பிரிவினைகளும், முரண்பாடுகளும் இருந்தாலும், தன்னுடைய அழிக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துகின்றது. பொய்யின் பிதாவானவன் தன்னைப் பின்பற்றுபவர்களை ஆளுகை செய்கிறான். இறைவனையும், அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்டவரையும் மறுதலிக்கும்படி செய்கிறான்.

இயேசுவானவர் தூதர்கள் அல்லது படையுடன் இருள் நிறைந்த இவ்வுலகிற்கு வராமல், தனியாக வந்தார். அவரை எந்தப் பாவமும் செய்ய வைக்க முடியாத சோதனைக்காரனை அவர் முறியடித்தார். அவனால் சிறைப்பட்டவர்களை தனது வார்த்தையின் வல்லமையினால் விடுவித்தார். சாத்தான் மீது எப்போதும் கிறிஸ்து வெற்றி பெறுபவராக இருக்கிறார். தனது நற்செய்தியினால் அவர் உங்களை எல்லா சுயநலங்கள் மற்றும் அசுத்தங்களில் இருந்து விடுதலை செய்கிறார். நீங்கள் அவரைக் கவனித்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் போது, அவர் உங்களை விடுதலையாக்குகிறார். நீங்கள் இறைவனுடைய ராஜ்யத்தில் செயல்படும் ஒருவராக மாறுவீர்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் இறைவனுடைய அன்பை அறிந்துகொள்பவர்களுக்கு ஐயோ, அவரை மறுதலிப்பவர்கள் இருதயம் கடினப்படுகிறது. அவர்கள் அவருக்கு எதிராக தூஷணம் செய்கிறார்கள். அறியாமல் உண்மையை உணராமல் இறைவனையும், அவருடைய குமாரனையும் புறக்கணிப்பவர்கள், அவரை பரியாசம் செய்பவர்கள், அவரை தூஷிப்பவர்களை இறைவன் மன்னிக்கிறார். ஆனால் இறைவனுடைய இரக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் தங்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் அசுத்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மன்னிப்பை காண முடியாது. கிறிஸ்துவை அறிதல் அல்லது பரிசுத்த ஆவியின் அனுபவங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உண்மையாக மனந்திரும்புங்கள். உங்கள் குணாதிசயத்தை மாற்றுங்கள். காட்டிக்கொடுத்த யூதாசைப் போல இருக்க வேண்டாம். இயேசுவில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்க சரீர ஆசைகளுக்கு மரித்துவிடுங்கள். இரட்சகர் “இன்றே இரட்சிப்பின் நாள்” எனச் சொல்லும் போது அவருடைய அன்புக்கு ஒப்புக்கொடுங்கள்.

விண்ணப்பம்: பரிசுத்தப் பிதாவே, நீர் எங்களை உமது நேச குமாரனுடைய மரணத்தின் மூலம் நியாயத்தீர்ப்பில் இருந்து இரட்சித்தீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது அன்பில் எங்களை உறுதிப்படுத்தும். எங்கள் தீய ஆசைகளில் இருந்து நாங்கள் விடுதலையடையச் செய்யும். தீய ஆவிகளிடம் இருந்து எங்களை விடுவியும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும். உமக்குக் கீழ்ப்படிந்து பணிபுரிய உதவும். அசுத்தங்களில் இருந்து விடுதலை தாரும். ஆண்டவரே, ஒருவரும் உம்மை மறுதலியாதபடி, பாவத்தில் வீழாதபடி எங்கள் தேசத்தைக் காப்பாற்றும். ஆமென்.

கேள்வி:

  1. எருசலேமில் இருந்து வந்தவர்களுடைய குற்றச்சாட்டின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 06:31 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)