Previous Lesson -- Next Lesson
3. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (மாற்கு 1:9-11)
மாற்கு 1:9-11
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். 11 அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
கலிலேயாவில் உள்ள நாசரேத்தூர் வீட்டை விட்டு இயேசு வெளியே வந்தார். யோவான்ஸ்நானகனை சுற்றியிருந்த, மனந்திரும்பிய மக்கள் அருகில் வந்தார். மதம் மற்றும் கலாச்சார மையங்கள் இருந்த எருசலேமில் இருந்து வெகு தொலைவில் நாசரேத்தூர் பட்டணம் இருந்தது. சமூகரீதியாக மோசமான பெயர் அந்த ஊருக்கு இருந்ததால், பாவமற்றவரும், மரியாளின் மகனுமான இளம் இயேசுவும் அலட்சிம் செய்யப்பட்டார். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய தேவை இல்லை. அவர் குற்றமற்றவரும், தூய்மையும், பரிசுத்தமும் நிறைந்தவராய் இருந்தார். அவர் எந்த பாவத்தையும் அறிக்கையிட வில்லை. ஆனாலும் மனிதனுடைய நிலையில் இருந்து அவர் ஞானஸ்நானம் எடுத்தார். உலகத்தின் பாவத்தை எடுத்துப்போட அவர் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இயேசு இந்த அருட்பணிக்கான நியமனத்தை ஏற்றுக்கொண்டபோது, அவருக்கு முப்பது வயதாக இருந்தது. அப்போது அவர் உலகத்தை இறைவனுடன் ஒப்புரவாக்கும் பணியை ஆரம்பித்தார்.
அவர் நமது நிலையில் இருந்து ஞானஸ்நானம் எடுத்தபோது, வானங்கள் திறக்கப்பட்டது. பரிசுத்த திரியேகத்தின் அற்புதம் வெளிப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் சமாதானத்தின் அடையாளமாக புறாவைப் போல அவர் மீது இறங்கினார். சமாதானப் பிரபுவின் இருதயத்தில் இறைவனின் சமாதானம் தங்கி, அவருக்குள் வாசம்பண்ணியது. அவர் தனது மனித சுபாவத்தை முற்றிலும் இறைவனுடைய பணிக்கென்று ஒப்புக்கொடுத்தார். ஞானஸ்நானம் எடுத்தபோது, வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் நான் பிரியமாயிருக்கிறேன்”.
சந்தேகத்திற்கிடமின்றி, கிறிஸ்து நித்தியம் முதல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார். இருப்பினும் இறைவன் இப்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அவருடன் முற்றிலும் இணைந்திருப்பதை நிரூபித்தார். இயேசு உண்மையாகவும், முழு இருதயத்தோடும் அவருடைய பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தார்.
பரிசுத்த ஆவியானவர் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அப்போது இறைவன் பேசுகிறார். அவர் பிதா என்று தன்னை அறிவிக்கிறார். இறைவனின் குமாரனாகிய கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். எந்த ஒரு மனிதனும் இப்படிப்பட்ட அன்பின் வார்த்தைகளைப் பேச முடியாது. பிதா தன்னுடைய குமாரன் தனக்கு நித்திய சாட்சி என்று கூறினார். எந்த ஒரு மனித ஆவியும் இந்த வார்த்தைகளைப் பேசமுடியாது. இறைவன் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டார். அன்பு மற்றும் நித்திய மகிழ்ச்சியுடன் கிறிஸ்து தன்னுடைய குமாரன் என்றும் அவருக்குள் சரீரப்பிரகாரமாக இறைவனின் பரிபூரணமெல்லாம் அடங்கியிருக்கிறது என்றும் சாட்சி பகர்ந்தார்.
இந்த இறைத்தன்மை அவருடைய இரக்கம், தயவு, கிருபை மற்றும் பொறுமையில் வெளிப்பட்டது. இயேசு மட்டுமே இறைவனின் அன்பால் நிறைந்திருக்கிற ஒரே நேசகுமாரன். அவர் கீழ்ப்படியாத உலகத்தை பரிசுத்த இறைவனுடன் ஒப்புரவாக்குகிறார். நாம் இறைவனின் பிள்ளைகளாகும் அதிகாரத்தைக் கொடுக்கிறார். அவருடைய மகிழ்ச்சியின் பங்காளிகளாக மாற்றுகிறார். இறைவன் உன்னுடைய நடத்தையில் பிரியமுள்ளவராக இருக்கிறாரா?
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை துதியுடனும், மகிழ்ச்சியுடனும் ஆராதிக்கிறோம். நேச கிறிஸ்துவாகிய குமாரன் மூலம் உமது நித்திய பிதாவின் தன்மையை நீர் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். உமது குறையாத அன்பின் நிச்சயத்தை உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தாரும். எங்கள் பாவங்களை மன்னியும். உமது கிருபைக்காக நன்றியுணர்வு எங்கள் வாழ்வில் நிரம்பச் செய்யும். ஆமென்.
கேள்வி:
- எவ்விதம் பரிசுத்த திரியேகம் வெளிப்படுகிறது?