Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 005 (Son of God)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

ஈ) “தேவகுமாரன்” என்றால் என்ன அர்த்தம்?


மாற்கு 1:1
1 தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.

தேவகுமாரன் என்று அழைப்பதை யூதர்கள் இறைநிந்தனையாகக் கருதினார்கள். அவர்களுடைய உயர்நீதிமன்றம் இறைநிந்தனை செய்வதற்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கினார்கள். இறைவனின் கோபம் எல்லோர் மீதும் வராதபடி, அப்படி இறைநிந்தனை செய்பவரை ஊருக்கு வெளியே கொண்டுசென்று கல்லெறிந்து கொல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் இருந்து அநேக செமித்தியர்கள் எனப்படும் மக்கள் இறைவனுக்கு துணையான ஒருவர் அல்லது வேறு கடவுள்கள் இருப்பதை விசுவாசிக்கவில்லை (யாத்திராகமம்20:2; உபாகமம்6:4-5).

பழைய உடன்படிக்கையின் மக்கள் இந்த தீர்க்கதரிசனங்களைப் புறக்கணிக்கவில்லை. தேசம் சில சமயங்களில் ராஜா அல்லது வருகின்ற கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் புத்திரசுவீகார அடிப்படையில் இறைவனின் ஆவிக்குரிய குமாரர்கள் என்று கருதப்பட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் அவர்கள் இந்த கருத்தாக்கத்தை இறைவனில் ஆவிக்குரிய பிறப்பிற்கு அப்பியாசப்படுத்தவில்லை. உன்னதமானவர் ஒருவரே என்றும் ஒப்பற்றவர் என்றும் விசுவாசித்தார்கள் (யாத்திராகமம் 4:22; ஓசியா11:1; சங்கீரம் 89:28; 2சாமுவேல் 7:14; எஸ்ரா 7:28).

இதற்கு நேர்மாறாக பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம் மக்கள் பலதெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தார்கள். ஆண், பெண் தெய்வங்கள், ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்ட ஆவிகள், அவைகளின் பிள்ளைகள், ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டவர்கள், ஒருவரையொருவர் நேசித்தவர்கள், வெறுத்தவர்கள் என்று அவர்கள் அநேக தெய்வங்களை ஆராதித்தார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக்கடல் பகுதி முழுவதும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகளினால் நிறைந்திருந்தார்கள். பலபீடங்களுடன் கூடிய பெரிய ஆலயங்கள் அவர்கள் விக்கிரகங்களுக்கு ஏறெடுத்த ஆராதனையைக் குறித்து சாட்சியிடுகின்றன. அவர்கள் பரிசுத்த இறைவனையும், அசுத்த ஆவிகளையும் வேறுபடுத்தி அறியவில்லை. அவர்கள் ஒவ்வொரு ஆவியையும் ஆராதித்தார்கள்.

ரோமில் அநேக தெய்வங்களைக் குறித்த நம்பிக்கைக்கு எதிர்த்து நிற்கும் தைரியத்தை பேதுருவும், மாற்குவும் பெற்றிருந்தார்கள். எல்லாக் காலங்களுக்கும் முன்பு பிதாவினிடத்தில் பிறந்த ஒரேபேறான குமாரனை உடைய ஏக இறைவன் ஒருவரே என்று அறிக்கையிட்டார்கள். ஒரு மனிதனின் வாயில் இருந்து பிறக்கும் வார்த்தை அவனுடைய ஒரு பகுதியாக இருப்பதுபோல, மாம்சத்தினால் அல்ல, எல்லாக் காலங்களுக்கும் முன்பு ஆவியினால் பிறந்த இறைவனின் நித்திய குமாரனும் இருக்கிறார். பெத்லகேமில் இயேசு பிறந்தது அவருடைய உண்மையான பிறப்பு அல்ல. அது நமக்காக வெளிப்பட்ட மனித சரீரம் ஆகும். அவருடைய உண்மையான பிறப்பு ஆவிக்குரிய விதத்தில் படைப்பிற்கு முன்பு நிகழ்ந்தது. எனவே தான் அவர் இறைவனில் இருந்து வந்த இறைவன், ஒளியிலிருந்து வந்த ஒளி, உண்மையான இறைவனில் இருந்து வந்த உண்மையான இறைவன், ஜெநிப்பிக்கப்பட்டவர், ஆனால் படைக்கப்படாதவர், அவர் பிதாவினுடன் இருந்தவர். என்று கிறிஸ்தவம் அறிக்கையிடுகிறது.

இறைவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் விரும்புகிற வண்ணம் குமாரனை உடையவராக இறைவன் இருப்பதை ஒருவரும் தடைசெய்ய முடியாது. இறைவனின் சுதந்திரத்தை அவருடைய ஒரே தன்மையை வலியுறுத்தி மக்கள் மட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் மனிதர்களின் எண்ணங்களைவிட இறைவன் பெரியவராக இருக்கிறார்.

காபிரியேல் தூதன் கன்னி மரியாளுக்கு கூறியது போல இறைவனின் குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” (லூக்கா1:35) மரியாள் இதைக் கேட்டு கலக்கமடைந்தாள். இருப்பினும் அவளுடைய ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசித்தாள். இயேசுவின் இறை ஆவியானவர் மனிதத்தன்மையை மேற்கொண்டு, எல்லா காலங்களிலும் அதைக் கட்டுப்படுத்தினார். எனவே அவர் பரிசுத்தராகவும், பாவம் இல்லாதவராகவும் இருந்தார்.

இறைவனின் குமாரன் இருக்கிறார் என்று சொல்வது பலதெய்வக் கோட்பாடாக மாறாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனின் முழுமையான ஒருமைப்பாட்டை நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிறோம். இருப்பினும், ஆவியினாலும் சத்தியத்தினாலும் மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசியால் மட்டுமே மூன்றுபேர் ஒருவராக இருக்கிறார் என்ற இரகசியத்தை புரிந்துகொள்ள முடியும். இறைவன் அன்பாக இருக்கிறார் என்பதை அவன் அறிந்துகொள்கிறான். மூன்று தெய்வீகநபர்களின் ஒற்றுமை என்பது உண்மையானதும், கேள்விகேட்கப்பட முடியாததும், முழுமையானதுமாகவும் உள்ளது. உண்மையில் நித்தியகாலமாக இந்த மூன்று நபர்களும் பூரணமான அன்பினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனை நேசிக்காதவன் அவரை அறிந்துகொள்வதில்லை.

மிகுந்த தாழ்மையுடன் கிறிஸ்து பிதாவுடன் உள்ள தனது ஐக்கியத்தை விசுவாசிகளுக்கு பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கூறினார்: “அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான் (யோவான் 5:19-23).

செயல்களின் அடிப்படையில் கிறிஸ்து பிதாவுடன் கொண்டுள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்திய பிறகு வல்லமையிலும், சாராம்சத்திலும் இறைவனுடன் உள்ள அவரது ஐக்கியத்தை இயேசு அறிக்கையிடுவதை நாம் வாசிக்கிறோம். “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:27-28).

இயேசு பிதாவுடன் உள்ள தனது உறுதியான ஐக்கியத்தை சீடர்களுக்கு தெரிவிக்கிறார்: “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். “பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? (யோவான் 10:30). தமது சீஷர்களில் ஒருவனிடம் அவர் கூறினார்: “நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள் (யோவான் 14:10-11).

இந்த வேதாகம வசனங்களின் அடிப்படையில் இயேசு இதைக் கூறுவதற்கு உரிமை பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் உணர முடியும்: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9).

இயேசுவின் காலத்தில் இருந்த யூத நீதிமன்றம் (சனகெரிப்) மற்றும் உயர் ஆட்சி அமைப்பை தலைமை தாங்கிய யூதர்களின் பிரதான ஆசாரியனாகிய காய்பா, இயேசுவிற்கு முன்பு எழுந்து நின்று, அவரிடம் வஞ்சகத்துடன் ஒரு கேள்வியைக் கேட்டான்: “இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.(மத்தேயு 26:63). இயேசு இந்த உண்மையை மறுதலிக்கவில்லை. அதை நிருபித்தார். அவருடைய இறை சுபாவத்தை ஒத்துக்கொண்டார். அவர்கள் மூர்க்கமடைந்து அவரை கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தார்கள். இயேசு மரணத்தீர்ப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஏனெனில் அவர் தன்னை இறைவனின் குமாரன் என்று அறிக்கையிட்டிருந்தார். இந்த வரலாற்று சம்பவம் நடந்து 2000 ஆண்டுகள் கடந்தபிறகு எப்படி சில மக்கள், இயேசு இறைவனின் குமாரன் என்று அறிக்கையிடவில்லை என்று கூற முடியும்? பரிசுத்த இறைவனின் ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மையை அவர்கள் அறியவில்லை.

விண்ணப்பம்: இரக்கம் நிறைந்த குமாரனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். பரிசுத்த பிதாவே, நாங்கள் உம்மை துதிக்கிறோம். நீர் உமது குமாரனாகிய இயேசுவில் உம்மை வெளிப்படுத்தியிருக்கிறீர். எங்களுடைய குறுகிய மனங்கள் உமது சத்தியத்தை உணரமுடியாதபடி உள்ளது. உமது பரிசுத்த ஆவியினால் எங்கள் மனங்களை பிரகாசிக்கச் செய்யும். நாங்கள் பிரகாசமடைந்து உம்மைச் சரியாக அறிந்துக்கொள்ள உதவும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் அன்பின் ஐக்கியத்தில் முற்றிலும் இணைந்திருக்கிறார்கள். உமது அன்பு எங்களுக்கு வாழ்வு தருகிறது. உமது கிருபையினால் எங்களை உம் பிள்ளைகளாக மாற்றும். ஆமென்.

கேள்வி:

  1. “இறைவனின் குமாரன்” என்ற பதத்தில் உள்ள முக்கியமான குறிப்புகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 07:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)