Previous Lesson -- Next Lesson
ஊ) கடுகு விதையின் உவமை (மாற்கு 4:30-34)
மாற்கு 4:30-34
30 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? 31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; 32 விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 33 அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். 34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
இந்த உலகிலும், இனிவரும் உலகிலும் இறைவனுடைய ஆவிக்குரிய ராஜ்யம் மிகப்பெரிய வல்லமை உடையதாகும். அங்கே பரிசுத்தமானவரின் சித்தம் நிறைவேற்றப்படுகிறது. அவரிடமிருந்து ஆவியின் ஊற்று புறப்படுகிறது. மரணத்தின் மத்தியிலும் புதிய வாழ்வை ஏற்படுத்துகின்றது. படைப்பின் ஆரம்பத்தில் நிகழ்ந்ததுபோல இப்போதும் நடக்கிறது. எந்த ஒரு தீய சக்தியும் இறை ராஜ்யத்தை வீழ்த்த முடியாது. இந்த ராஜ்யத்தில் நித்திய ஆவிக்குரிய வாழ்வு உள்ளது. உலக வல்லமைகள் அல்லது அழிக்கும் பகையினால் இது கட்டப்படுவதில்லை. இந்த ராஜ்யம் இறைவல்லமையோடு கூடிய மகிழ்ச்சி, சுய மறுப்பு, மற்றும் நீதி ஆகும். மனிதர்களின் இருதயங்களில் இறை பிரசன்னத்தை விட இந்த உலகில் அழகானது வேறொன்றுமில்லை.
இயேசு இறைவனுடைய ஆவியினால் நிறைந்திருந்த மனிதன் ஆவார். பூமியில் இறைராஜ்யத்தின் ஆரம்பம் அவரே. அவர் பிரபலமான தலைவர்கள். அதிபதிகள், அறிவு நிறைந்த தத்துவமேதைகளைப் போல அல்ல. அவர்கள் மரித்தார்கள். இவரோ ஆவியினால் பிறந்தவர். தெய்வீக அரசர் அவர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டார். பொறாமையினால் அவருடைய சரீரத்தை அவர்கள் கொலை செய்தார்கள். ஆனாலும் அவருடைய ஆவிக்குரிய ராஜ்யம் பெரிய வல்லமையுடன் பரவியது. கிறிஸ்துவின் ஆவி ஒரு போதும் மரிப்பதில்லை. அவருடைய ராஜ்யத்தின் இரகசியமும், சாராம்சமும் அவரே.
அவர் தமது ராஜ்யத்தை ஒரு கடுகு விதையுடன் ஒப்பிட்டார். அது விதைகளில் எல்லாம் மிகவும் சிறியது. அதைக் காண்பது கூட மிகவும் கடினம். அதை விதைக்கும்போது, அது வளர்ந்து பெரிய மரமாகிறது. இலைகளையும், கனிகளையும் தருகின்றது. பறவைகள் அதில் கூடுகள் கட்டுகின்றன.
இன்று இறைவனுடைய ராஜ்யம் எல்லா நாடுகளிலும் பரவியிருக்கிறது. எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, உதவி, இரட்சிப்பைக் கொடுக்கின்றது. கிளைகள் மற்றும் இலைகளை மட்டுமல்ல. நற்கனிகளைத் தருகின்றது. விசுவாசிகள் இந்த ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களில் மகிழ்கிறார்கள். இந்தப் பெரிய மரத்தின் வெளியே உள்ள உயிரினங்கள் இதன் மூலம் நன்மை அடைகின்றன. கிறிஸ்துவினிடமிருந்து நன்மைகளை வித்தியாசமான கலாச்சாரங்கள், தத்துவங்கள், குழுக்கள் பெற்றுக்கொள்கின்றன. அவருடைய போதனைகளின் தாக்கத்தைப் பெற்றிருக்கின்றன. இவைகளை பெரிய மரத்தின் உண்மைக் கிளைகளுடன் ஒரு போதும் ஒப்பிட முடியாது. பறவைகள் தற்காலிகமாக அதன் நிழலில் வந்தடைகின்றன. நீங்கள் பறவையைப் போன்றவரா? இறைவனுடைய பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு பறந்துவிடுகிறீர்களா? அல்லது இந்த ஆவிக்குரிய மரத்தில் ஒரு கிளையாக நீங்கள் மாறி, கனி கொடுக்கிறீர்களா?
விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் துன்மார்க்கமான, காய்ந்து போன நிலத்தில் நீர் பெரிய மரத்தை நாட்டியிருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னியும். இந்தப் பெரிய மரத்தில் எங்களை கிளையாக உருவாக்கும். உமது குமாரனில் எங்களை நிலைப்படுத்தி, அவருடைய ஆவியின் கனியை இன்று நாங்கள் கொடுக்க உதவும். பறவைகளைப் போல சொற்ப நேரத்திற்கு உம்மைத் தேடி, பின்பு உம்மை விட்டுவிலகிப் போகாதபடி இருக்க உதவி செய்யும். ஆமென்.
கேள்வி:
- ஏன் எல்லாக் கொள்கைகளையும்விட இறைவனுடைய ராஜ்யம் பெரியது?