Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
Home -- Tamil -- Acts - 115 (Paul Alone With the Governor and His Wife; The Second Hearing of Paul’s Trial)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)
10. பவுல் ஆளுனரையும் மனைவியையும் தனியாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 24:24-27)அப்போஸ்தலர் 24:24-27 ஆளுனருடைய மனைவியாகிய துருசில்லாள் அப்போஸ்தலர் 12-ம் அதிகாரத்தில் பயங்கரமான மரணத்தைச் சந்தித்த ஏரோது அகிரிப்பாவின் மகள் ஆவாள். இந்தப் பெண் மிகவும் அழகாக இருந்ததுடன் முன்பு சீரிய நாட்டின் அரசனுக்கு மனைவியாக இருந்தாள். ஆனால் பேலிக்ஸ் யூத மந்திரவாதி ஒருவனுடைய துணையினால் அவளுடைய கணவனிடத்திலிருந்து அவளைப் பிரித்து தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவள் கி. பி. 79-ம் ஆண்டில் நடைபெற்ற வெசுவிய தீவிபத்தில் சிக்கி எரிந்து மரணமடைந்தாள் என்று வரலாறு சொல்கிறது. அவள் செசரியாவில் இருந்தபோது அந்த பரபரப்பான கைதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவருடைய விசித்திரமான தேவபக்தியைக் குறித்து வேடிக்கையாகக் கண்டு களிக்கும்படி, அவரைத் தன்னிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி தம்முடைய கணவரிடம் கேட்டுக்கொண்டாள். தந்திரமுள்ளவனும் தற்போது ஓய்வாக விபச்சார அழகியாகிய தன்னுடைய மனைவியோடு தலையணையில் படுத்துக்கொண்டு இருப்பவனுமாகிய பேலிக்ஸிடம் பேசி தன்னுடைய விடுதலைக்கு வழி செய்வதற்கு பவுலுக்கு எவ்வளவு அருமையான வாய்ப்பு. அடிகளினாலும் கல்லெறிகளினாலும் தன்னுடைய உடலில் உண்டான தழும்புகளுடன் அவர்களுக்கு முன்பாக பவுல் கைதியாக நின்றாலும் மனுக்குலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவிக்குரிய நெருப்பு அவருக்குள் எரிமலையைப் போல கனன்று கொண்டிருந்தது. பவுல் அந்த சோதனையின் தருணத்தில் அந்த தம்பதியைப் புகழ்ந்து பேசினாரா? இல்லை, அவர் ஒரு நிமிடம்கூட தன்னுடைய விடுதலையைக் குறித்துச் சிந்திக்கவில்லை. அவருக்கு முன்பாக தங்கள் சீர்கெட்ட மனசாட்சியுடன் இச்சைக்கு ஆட்பட்டவர்களாக அமர்ந்திருந்த அந்த இரண்டு பரிதாபமான ஆத்துமாக்களைக் குறித்தே அவர் சிந்தித்தார். அவர்களுடைய இரட்சிப்பைக் குறித்தே அவருடைய ஆத்துமா பாரப்பட்டது. ஒரு நல்ல மருத்துவர் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் கட்டியைத் தடவிக்கொடுக்காமல் அதை வெட்டி அகற்றுவதைப் போல, அந்த அநீதியான ஆளுனருடைய அநீதியான இருதயத்தை வெளிப்படுத்திக் காண்பித்த பவுல், இறைவன் சத்தியத்தையும், நீதியையும், நியாயத்தையுமே எதிர்பார்க்கிறார் என்று அவர்களுக்கு அறிவித்தார். விபச்சாரக்காரர் இறைவனுடைய அரசில் நுழைய முடியாது என்ற காரணத்தினால் அந்தப் பெண்ணும் இச்சையடக்கத்தையும் தூய்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில் இருக்கிறார் என்பதை அவளுக்குக் காண்பித்தார். கைதியாக இருந்த பவுல் தனக்கு முன்பாக இருந்த அவர்களுடைய மனசாட்சியை எழுப்பிவிட்ட பிறகு, அவர் இறைவனுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நின்று இறைவனுடைய கோபத்தை அவர்களுக்கு அறிவித்தார். இறைவனே தம்முடைய ஒளியை அவர்களுக்குக் காண்பித்திருந்த காரணத்தினால், பவுல் அவர்களை அழிக்க நாடவில்லை. “சந்தோஷம்” என்ற பொருளுடைய பெயருடைய பேலிக்ஸ் இப்போது பயம் நிறைந்தவனானான். அந்த தருணம்வரை யாரும் அவனுக்கு உண்மையைச் சொல்ல தைரியமாக முன்வந்ததில்லை. இறைவனுடைய செய்தியாளனாகிய பவுலின் மேல் அந்தப் பெண்ணுக்கு ஒருவேளை கோபம் வந்திருக்கலாம். அவர் அவளுடைய பொய்யையும் பாவத்தையும் வெளிப்படுத்திய காரணத்தினால் தனது கணவன் மூலம் பவுலுடைய விடுதலையை தடுக்க அவள் முயற்சித்திருக்கலாம். பேலிக்ஸ் தன்னுடைய மனசாட்சியினிமித்தம் தயக்கமுற்றவனாக இருந்தார். அவர் ஒரு இலகுவான இடைநிலையில் இருந்து செயல்பட முடிவு செய்தார். அவர் மனமாற்றத்திற்கான இறைவனுடைய அழைப்பைப் புறக்கணிக்காவிட்டாலும், தன்னுடைய மனசாட்சியின் சத்தத்திற்கு அவர் கீழ்ப்படியவில்லை. பவுலுடைய விடுதலையைத் தள்ளிப் போட்டதைப் போலவே தன்னுடைய இரட்சிப்பைக் குறித்த தீர்மானத்தையும் அவர் தள்ளிப் போட்டார். மேலும் பவுல் எருசலேமிலிருக்கிற திருச்சபை மக்களுக்கு தர்மப் பணத்தைக் கொண்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்த காரணத்தினால் பேலிக்ஸிற்கு பணத்தைக் குறித்த ஆசையும் ஏற்பட்டிருக்கலாம். திருச்சபையின் முக்கிய தலைவராகிய பவுலிடத்திலிருந்து தனக்கு ஒரு கணிசமான தொகை கிடைக்கும் என்ற அவர் எதிர்பார்த்தார். புறவினத்து மக்களின் அப்போஸ்தலனாகிய பவுலை விடுவிப்பதற்காக திருச்சபை எவ்வளவு பணத்தையும் சேகரிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் பவுலுக்கு அப்படிப்பட்ட எந்த சிந்தனையும் இருக்கவில்லை. அவர் தன்னுடைய மனசாட்சியினிமித்தமாக மட்டுமல்ல, பேலிக்ûஸ பண ஆசைக்குட்படுத்தக்கூடாது என்பதற்காக அவருக்கு முன்பாக ஒரு நேர்மையான வாழ்விற்கான உதாரணமாக அவர் நின்றார். உண்மையில் இந்த சத்தியத்தின் அப்போஸ்தலர் தன்னில் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து பேலிக்ஸ் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாதவராக இருந்தார். அவர் இவ்வுலகத்திற்குரிய காரியங்களையும் தெய்வீக காரியங்களையும் குறித்து பவுலிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்டு வந்தார். ஆளுனரைச் சுற்றியிருந்த பரிவாரங்கள் அனைத்தும் அவருக்கு முகத்துதி செய்கிறவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இப்போது அவருக்கு முன்பாக நின்ற அப்போஸ்தலனோ ஒவ்வொரு முறையும் அவருடைய மனசாட்சியைக் குத்தும் வண்ணம் சத்தியத்தைப் பேசுகிறவராக காணப்பட்டார். ஆனால் எவ்வளவுதான் ஆன்மீக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டாலும் அந்த ஆளுனர் இறைவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்தவில்லை. அவர் இறைவனை நம்பி, விடுதலையைப் பெற்றுக்கொண்டார் என்று நாம் எங்கும் வாசிப்பதில்லை.
11. புதிய ஆளுனருக்கு முன்பாக பவுல் இரண்டாம் முறை விசாரிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 25:1-12)அப்போஸ்தலர் 25:1-12 ரோமப் பேரரசில் ஆளுனர்களை அடிக்கடி இடமாற்றம் செய்யும் ஒரு ஏற்பாடு இருந்தது. அதற்குக் காரணம் ஒரு ஆளுனர் நீண்ட காலம் ஒரு இடத்தில் இருப்பாரானால் தம்முடைய பதவியைக் கொண்டு சுய இலாபத்திற்காக பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதே. பழுதான தன்னுடைய மனசாட்சியோடு மகிழ்ச்சியான பேலிக்ஸ், யூதர்கள் தனக்காக சீசரிடத்தில் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் தனது பதவிக்காலத்தில் இறைவனுக்கு முன்பாக நேர்மையாக நடந்து பவுலை விடுவிப்பதற்குப் பதிலாக யூதர்களுக்கு ஆதரவாகவே நடந்துகொண்டார். பதவிக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்ந்த அவர் இறைவனுடைய நியாயத்தீர்ப்பை நோக்கி விரைவாகச் சென்றுகொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுனராக வந்த பெஸ்து தனக்கு முன்பிருந்த ஆளுனருடைய காலத்தில் சரிசெய்யப்படாதவை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்ற தீவிரத்துடன் காணப்பட்டார். அவ்வாறு ஒரு தருணத்தில் அவர் எருசலேமிற்குச் சென்றிருந்தபோது, யூதர்களுடைய தலைவர்கள் தந்திரமாக பவுலை எருசலேமிற்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். பவுல் எருசலேமிற்குக் கொண்டுவரப்பட்டால் அவரை நியாயப்பிரமாணத்தை மீறினவர் என்று தாங்களே நியாயம் தீர்த்து தண்டனை வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால் பவுலுடைய பிரயாணத்தின்போதே அவரைக் கொலை செய்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இரகசிய திட்டமாயிருந்தது. ஆனால் பெஸ்து திறமையுடன் அந்த ரபிமாரை செசரியாவிலுள்ள தம்முடைய மாளிகைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் பவுலை நியாயம் தீர்க்கும்படியான நியாயமான குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். சில நாட்கள் சென்று கடற்கரை நகரமாகிய தனது நகரத்தில் அவன் தனது நியாயாசனத்தில் அமர்ந்தபோது அந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்வந்தான். பவுல் உலகத்தின் அஸ்திவாரங்களையே அசைக்கிறவர் என்றும் யூதர்களுடைய தேவாலயத்தை அசுத்தப்படுத்தினவர் என்றும் சட்டத்தின் உண்மையைப் புறக்கணித்தவர் என்றும் கிறிஸ்துவை ஆண்டவர் என்றும் இராஜாதி இராஜா என்றும் அறிவிப்பதன் மூலமாக சீசருக்கே எதிராகக் கலகம் செய்பவர் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூதர்கள் பவுலின் மீது சுமத்தினார்கள். இந்தக் குற்றசாட்டுகள் அனைத்தும் தந்திரமான பொய்கள் என்றும் கட்டுக் கதைகள் என்றும் பவுல் மறுத்துரைத்தார். தான் எந்த யூதனுக்கு எதிராகவும் நியாயக்கேடு செய்யவில்லை என்று கூறினார். தான் ஏதேனும் நியாயக்கேடு செய்திருந்தால் அதற்காக மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள மனதாயிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டினவர்கள் அந்தக் குற்றங்கள் எதையும் நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இந்த வழக்கு முற்றிலும் மத சம்மந்தமானது என்பதை ஆளுனர் விரைவாகவே அறிந்துகொண்டார். ஆகவே பவுலிடம் எருசலேமில் தன்னுடைய தலைமையின் கீழ் விசாரணைக்கு உடன்படும்படியாகக் கேட்டுக்கொண்டார். பிரச்சனைக்குரிய இடமாகிய எருசலேமில் வைத்து காரியங்களை விசாரிக்கும்போது காரியங்களைத் தான் சரியாக தீர்மானிக்க முடியும் என்று அவர் கருதினார். நியாயப்பிரமாணத்தையும் நற்செய்தியையும் குறித்த இறையியல் விவாதத்திற்கு பவுல் அஞ்சவில்லை. ஆனால் தன்னுடைய எதிரிகள் தன்மீது பொறாமையும் பகைமையும் கொண்டவர்களாக தம்மைக் கொல்வதற்குச் சதிசெய்கிறார்கள் என்பதைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர்கள் ஒரு நியாயமான விசாரணைக்கு ஆயத்தமாக இல்லை என்பதையும் அறிந்திருந்தார். ஆகவே தன்னை அழிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிற யூதர்களுடைய வஞ்சனையான, பிடிவாதமான திட்டத்தைப் புறக்கணித்து, ரோமாபுரியில் தாம் விசாரிக்கப்பட வேண்டும் என்று பவுல் கேட்டுக்கொண்டார். யூதர்களுடைய உயர்மட்ட ஆலோசனைச் சங்கம் நசரேயனாகிய இயேசுவையும் அவருடைய சீடர்களையும் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் எதிர்த்தார்கள். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திலிருந்து பவுலுடைய விசாரணை நடைபெறும் காலம்வரை முப்பது வருடங்களில் அவர்களுடைய நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. ஆளுனர் யூதர்களுடன் சமரசம் செய்து தன்னை ஆலோசனைச் சங்கத்தினுடைய விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடுவார் என்பதை அறிந்த பவுல் தன்னுடைய கடைசி ஆதரவாகிய தனது ரோம குடியுரிமையைப் பயன்படுத்தினார். அது அவருடைய பிறப்புரிமையாக இருந்தது. அதைப் பயன்படுத்தி தன்னைக் காத்துக்கொள்ள அவர் முயற்சி செய்தார். பிலிப்பு பட்டணத்தில் பூமியதிர்ச்சியினால் சிறைச்சாலைக் கதவுகள் திறந்தபோது ஒருமுறையும், எருசலேமில் அவர் கசையடி பெறுவதற்கு முன்பாக ஒருமுறையும் தமது ரோமக் குடியுரிமையை அவர் தன்னுடைய பாதுகாப்புக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போது மறுபடியும் தான் எதிரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட ஒப்புக்கொடுக்கப்பட முடியும் என்ற சூழ்நிலையில் மீண்டும் அதைப் பயன்படுத்த விளைகிறார். ஆகவே அவர் சீசராகிய ரோம சக்கரவர்த்தியின் முன்பாக தான் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தைரியமாகக் கோரிக்கை வைக்கிறார். அவர் ஒரு ரோமக் குடிமகனாக இருந்த காரணத்தினால் யாரும் அவருக்கு இந்த உரிமையை மறுக்க முடியாது. அந்த நேரத்தில் தான்தோன்றித்தனமான கொடிய பேரரசனாகிய நீரோ என்பவன் அரியணை ஏறியிருந்தான். ஆகவே அந்த கொடிய அரசனுடைய விசாரணைக்கு பவுலை அனுப்பி வைக்க பெஸ்து புன்னகையுடன் ஒப்புதல் அளித்தார். ரோம விசாரணை மன்றத்தில் நயவஞ்சகமான பேச்சையும், பொய்யையும், ஊழலையுமே அவர் சந்திக்க வேண்டியிருக்கும். அங்குள்ள நீதித்துறை நீதியை வழங்குவதற்கு காலதாமதப்படுத்தி மக்களை வதைப்பார்கள். பவுல் அங்கு நீண்ட சிறைத் தண்டனையை அனுபவிப்பார் என்று அறிந்திருந்தாலும் ஆண்டவர் அவரை ரோமாபுரியை நோக்கித்தான் நடத்துகிறார் என்பதை அவர் தனது இதயத்தில் நன்கு உணர்ந்திருந்தார். பவுல் இந்த முடிவை தான் விரும்பித் தேர்வு செய்யவில்லை. மாறாக ஆண்டவர்தான் தன்னுடைய தூதுவனாகிய பவுலை குற்றம் நீங்கிய வெற்றியாளனாக அல்ல, கைதியாக தலைநகரத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று சித்தம் கொண்டார். தன்னுடைய எதிரிகளோடு சமரசத்தை விரும்பி, பவுலுடைய வாதங்களுக்கும் பதிலளிக்காமல், சரியான ஒரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு பெலவீனமான ஆளுனருக்குக் கீழாக நீண்ட காலம் சிறையிலிருப்பதைக் காட்டிலும் கைதியாக ரோமாபுரிக்குச் செல்வது பவுலுக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்தது. விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, என்னுடைய துன்ப நேரங்களில் என்னைக் காப்பாற்றிக்கொள்ள மாறுபாடான வழிகளைத் தெரிந்துகொள்ளாமல், பொறுமையோடு, சக நம்பிக்கையாளர்களுடன் உம்முடைய சத்தியத்தை மறைக்காமல் உம்முடைய பெயருக்குச் சாட்சியிடும்படி, எனக்கு ஞானத்தையும், தைரியத்தையும், சத்தியத்தையும், தாழ்மையையும் அளித்தருளும். கேள்வி:
|