Previous Lesson -- Next Lesson
4. பட்டுப்போன அத்திமரம் (மாற்கு 11:20-26)
மாற்கு 11:20-26
20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். 22 இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். 26 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.
கிறிஸ்து அத்திமரத்தை சபித்த செயல் பழைய உடன்படிக்கையின் மக்கள் மீது வரப்போகிற நியாயத்தீர்ப்பின் அடையாளமாக இருக்கிறது. அந்த மரம் விரைவில் பட்டுப்போயிற்று.
கிறிஸ்துவைப் புறக்கணித்த தேசத்தைப் போல அவருடைய சீஷர்களுள் காணப்பட்டாலும், அவர் அவர்களை இரட்சிக்க விரும்பினார். அவர்களுடைய மக்கள் மீது ஊற்றப்படுகின்ற இறைவனின் ஆக்கினைத்தீர்ப்பு மத்தியில் அவரை விசுவாசிக்கும்படி சொன்னார்.
விசுவாசித்தல் என்றால் இறைவனுடைய குமாரனிடம் இருந்து அன்பை கற்றுக்கொள்வதும் அவரை நம்புவதும் ஆகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்தின் மூலம் பரிசுத்த ஆவியின் வல்லமை விசுவாசிக்கும் இறைவனுக்கும் நடுவில் வெளிப்படுகிறது. பிதாவாகிய இறைவனுடன் விசுவாசத்தினால் தொடர்பு கொள்கிறவன் தனது சொந்த விருப்பங்களின்படி விண்ணப்பம் ஏறெடுப்பதில்லை. அவன் பரலோகப் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வாஞ்சிக்கிறான். அவன் தனது விண்ணப்பங்கள் மூலம் தனது நகரம் மற்றும் தேசத்தின் மீது ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறான். இறைவன் விசுவாசியின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கிறார். ஏனெனில் அவர்கள் எல்லா மனிதர்களின் பாவ மன்னிப்பாகிய மீட்பை நாடுகிறார்கள். அவர்கள் இறைவனுக்கு உகந்த ஜீவ பலியாக தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்து மறுரூபம் அடைந்து, பேராசை, அசுத்தம் இவைகளின் கட்டுகளில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.
கிறிஸ்து தனது வல்லமையான விசுவாசத்தின் மூலம் மலையைப் பெயர்த்து கடலில் எறியவில்லை. ஆனால் தனது அன்பின் கடலில் பாவங்களாகிய மலைகளை அவர் எறிந்துவிட்டார். அவருடைய அப்போஸ்தலர்கள் எவரும் தங்களில் உள்ள இறைவனின் வல்லமையை வெளிப்படுத்த எரிமலையை வெடிக்கச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் சமாதானத்தின் நற்செய்தியை தேசங்களுக்கு பறைசாற்றினார்கள். சோர்வுகள், கண்ணீரின் மத்தியிலும் மத்தியதரைக்கடல் பகுதி நாடுகளை இறைவனின் அன்பினால் நிரப்பினார்கள்.
ஒரு மனிதன் இறைவனுடைய அன்பின் நோக்கங்களுடன் சரியாக இணைக்கப்படாவிட்டால், அவனால் சரியாக விண்ணப்பம் ஏறெடுக்கவும், விசுவாசிக்கவும் முடியாது. பரிசுத்தமானவர் அன்புள்ள, மன்னிக்கிற, தூய்மைப்படுத்துகிற இரட்சகராக இருக்கிறார். அவர் நம்மை அழித்துவிடவில்லை. ஏனெனில் அவர் பொறுமையுள்ளவராக இருக்கிறார். இறைவனுடன் புதிய உடன்படிக்கையில் வாழுகின்ற ஒருவன் அவருடைய அன்பைக் காண்கிறான். நமது இருதயங்களில் மன்னிக்கும் தன்மை ஏற்படுகிறது. நாம் புதுப்பிக்கப்படுகிறோம். நமக்கு புதிய சிந்தனையும், தூய மனமும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆவியானவரால் நாம் நமது சுயத்தை விட்டுக்கொடுக்கிறோம். நமது எதிராளிகளை மன்னிக்கிறோம். நமது பகைவர்களை நேசிக்கிறோம். நமது வாழ்வின் முக்கியமான விதிமுறையாக இறைவனின் மன்னிப்பு காணப்படுகிறது.
தனது மக்கள் மத்தியில் அன்புள்ள, மன்னிக்கின்ற ஆவியை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆயத்த நிலைக்கான எந்த ஆதாரத்தையும் கிறிஸ்து காணவில்லை. அவர்கள் இறைவனுடைய அன்பை விட்டு, அவர்களாகவே பிரிந்து சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு மனந்திரும்ப விருப்பம் இல்லை. வரப்போகின்ற இரட்சகருக்கு ஒப்புக்கொடுக்க மனமில்லை. அவர்கள் திரளான மக்கள், அதிபதிகளுடன் இணைந்து நல்ல ராஜாவை வரவேற்கவில்லை. தங்களுடைய இருதயங்களில் அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவில்லை. அவரை வேவு பார்த்தார்கள். அவருடைய செயல்கள் அல்லது வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்து அவரை நியாயம்தீர்க்கவும், அழிக்கவும் முயற்சித்தார்கள்.
இறைவனுடைய முடிவற்ற அன்பு மற்றும் மன்னிப்பை விட்டு தன்னை வலுக்கட்டாயமாக பிரித்துக்கொள்கிற ஒருவன் கடினமுள்ள இருதயமுள்ளவனாகிறான். அவன் இயேசுவை வெறுக்கிறான். அவனுக்காக சிலுவையில் அறையப்பட்டவரை புறக்கணிக்கிறான். அவருடைய சமாதானத்தை ஏற்க மறுக்கிறான். இறைவனின் கிருபையும், கிறிஸ்துவின் தன்மையையும் அறிந்து அனுபவிக்காதவர்களுக்கு ஐயோ, பரிசுத்தமுள்ள இறைவன் அவனுக்கு கோபம் நிறைந்த நியாயாதிபதியாகவும், ஆக்கினையைத் தருபவராகவும் இருக்கிறார். பெருமைமிக்க மனிதன் இருதயத்தை கடினப்படுத்திட இறைவனின் கிருபையை புறக்கணிக்கிறான். நமது இரக்கம் நிறைந்த பிதாவை நாம் அறிந்திருக்கிறோம். நாம் அவரை நேசிக்கிறோம். ஏனெனில் அவருடைய சிலுவை மரணத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மன்னித்திருக்கிறார். அவருடைய புதிய மக்களாக நாம் இருக்கிறோம்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நீர் உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய பாவங்களை நீர் மன்னித்தீர். உமது பிள்ளைகளை நீர் வழிநடத்துகிறீர். நாங்கள் பயப்படத் தேவையில்லை. உமது பிரசன்னத்தினால் நாங்கள் வழி நடத்தப்படுகிறோம். நாங்கள் நன்றியுணர்வுடன் உம்மிடம் வருகிறோம். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் உம்மைத் துதிக்கிறோம். எங்கள் இருதயங்களை மாற்றி அமைத்தருளும். நாங்களும் பிறருடைய பாவங்களை மன்னிக்க வழிநடத்தும். எங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது இரக்கமாயிரும் உம்மை விசுவாசிக்க ஆயத்தமாய் இருப்பவர்கள் உம்மை அறியவும், உமது சாயலுக்கு ஒப்பாக மாறவும் உதவி செய்யும். ஆமென்.
கேள்வி:
- உண்மையான விசுவாசம் எப்படித் தோன்றிகிறது?