Previous Lesson -- Next Lesson
12. கைகளைக் கழுவுதல் மற்றும் முன்னோர்களின் பாரம்பரியம் குறித்த விவாதம் (மாற்கு 7:1-13)
மாற்கு 7:1-13
1 எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3 ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4 கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5 அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். 9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. 10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. 11 நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, 12 அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; 13 நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
சாப்பிடுவதற்கு முன்பு மக்கள் கைகளைக் கழுவுவார்கள். காற்றில் படிந்துள்ள மாசுக்கள் அநேக வியாதிகளுக்கு காரணமாக உள்ளன. ஆனால் வெளிப்புறத் தூய்மை ஒரு மனிதனை நீதிமானாக்கும், இறைவனை திருப்திப்படுத்தும் என்று நினைப்பவர்கள் மதியீனர்கள். பரிசுத்தமானவர் வெறுமையான சடங்குகளை அல்ல, இருதயத் தூய்மையை எதிர்பார்க்கிறார். வேலை செய்யும் ஒருவனின் கைகள் அவனுடைய கடினமான வேலையின் நிமித்தம் அழுக்காக இருக்கலாம். அவன் கிறிஸ்துவின் இரத்தத்தினால் தனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று விசுவாசித்தால், அவன் அழுக்கான கைகளை உடையவனாக இருந்தாலும் அவனுடைய சிருஷ்டிகரைப் போல பரிசுத்தமுள்ளவனாக இருக்கிறான். அடிக்கடி குளித்து கொண்டும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு இருந்தாலும் அசுத்த இருதயமுள்ளவன் அல்லது தீமையான எண்ணங்களினால் நிறைந்தவன் எவ்வளவு புறத்தூய்மையுடன் இருந்தாலும் நிச்சயம் நரகத்தில் இருப்பான்.
மதங்களில் மிகப்பெரும் மாற்றத்தை கிறிஸ்து கொண்டு வந்தார். அவர் நம்மை சடங்காச்சாரங்கள், சமய பணிகள், சட்டங்களில் இருந்து விடுதலை செய்கிறார். அதன் வலுவிழந்த தன்மையையும், அதன் முடிவையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். அது புதிய இருதயமாக இருக்கின்றது. எல்லா கற்பனைகளையும் கைக்கொள்வதாக உரிமை கோருவது மாய்மாலம் ஆகும். இறைவனால் மறுபடியும் பிறக்காதவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். மனிதன் தன்னுடைய குறையை அறிக்கையிடாதவரை அவனுடைய விண்ணப்பங்கள் பொய்யானவைகளாக இருக்கின்றன. “இறைவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்,” என்று மன்றாட வேண்டும். நாம் இறைவனுக்கு செய்யும் அனைத்து செயல்களும் சுயநலம் என்ற இடத்திலிருந்து வருகின்றன. பாரம்பரியங்கள், சடாங்காச்சாரங்கள், மன்றாட்டுகள், உபவாசங்கள், புனிதப்பயணம், மற்றும் தானதருமங்கள் இவற்றினால் மனிதன் இறைவனை பிரியப்படுத்த இயலாது. மனிதனுடைய இருதயம் மற்றும் மனதிலிருந்து வரும் எந்த ஒரு காரியமும் அசுத்தமானதாக உள்ளது. பரிசுத்தமானவரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக உள்ளது.
இறைவனிடம் இருந்து வருகின்ற காரியம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. கிறிஸ்துவினால் நமக்கு அருளப்பட்ட நீதி இறைவனுடைய இரக்கத்தினால் கிடைத்தது ஆகும். நமது சொந்த செயல்களினால் அது கிடைக்கவில்லை. பரிசுத்தமாகுதலும் பரிசுத்த ஆவியானவரின் செயல் ஆகும். நமது சொந்த முயற்சியினால் நாம் கட்டளைகளைக் கைக்கொள்ள இயலாது. கட்டளைகளைக் கைக்கொள்வதை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் மாய்மாலம், சுய ஏமாற்று நிறைந்தவை. இறைவன் நமது இருதயம் நொறுங்குண்ட நிலையையும், மனந்திரும்புதலையும் எதிர்பார்க்கிறார். நமது கொழுந்துவிட்டு எரியும் இருதயங்களை அவருடைய அன்பினால் நிரப்புகிறார். அப்போது நாம் மாற்றம் அடைவோம். நமது பெற்றோர்களுக்கு நாம் கனத்துடனும், மரியாதையுடனும் சேவை செய்வோம். அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவோம். அவர்களுடன் நேரம் செலவழிப்போம். இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நமது இருதயங்களில் துதிகள் பொங்கிவழியும். இறைவன் அவருடைய குமாரன் மூலம் நம்மிடம் வருகிறார். அவர் நம்மை சடங்காச்சாரங்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்கிறார்.
பக்தியுள்ளவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள், அன்புடன் பேசுபவர்கள், மற்றவர்கள் முன்பு விண்ணப்பம் ஏறெடுப்போர் ஆகியோரிடம் காணப்படும் அதிகம் தெரியப்படாத ஒரு பாவம் மாய்மாலம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் வாய் பேசுவது போல அவர்கள் இருதயம் இல்லை. அவர்களுடைய சிந்தனைகள் இறைவனை விட்டுத் தூரமாக உள்ளன. அவர்களுடைய அநேக விண்ணப்பங்கள் பொய்யானவை. அவைகள் தாழ்மையுள்ள இருதயத்தில் இருந்து வரவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் ஆவியினால் பரிசுத்தமாக்கப்படவில்லை. ஒருவன் விண்ணப்பம் செய்தும் பரிசுத்தமானவருக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவில்லையென்றால், அவனது மதசம்பந்த அனைத்து நடவடிக்கைகளும் இறைவனுக்கு முன்பாக பொய்யானவை.
இறைபக்தியின் ஆபத்து சுயநலவழியில் மதப்பற்று உள்ளோரிடம் அதிகரிக்கின்றது. அவர்கள் தூய்மையாக்கப்படுவதற்கான சிறப்பான திட்டங்களை உருவாக்குகிறார்கள். அனைவரையும் நியாயம்தீர்க்கிறார்கள். மாய்மாலத்தை விட்டு விலகியிருங்கள். அது விஷத்தைவிட ஆபத்தானது. அது நேர்மையான மன்றாட்டுடன் கூடிய அன்பையும், விசுவாசத்தையும் கொல்லக் கூடியது. அது மாய்மாலக்காரரின் பெருமையைத் தூண்டிவிடும்.
விண்ணப்பம்: பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் பாவிகளாகிய எங்கள் மீது இரக்கம் காண்பித்தீர். உமது குமாரனின் மரணத்தினால் எங்கள் பாரங்களை முழுமையாக மன்னித்தீர். உமது அன்பின் வல்லமையினால் எங்களை நிரப்பும். நாங்கள் துதியுடனும், நன்றியுடனும் எங்களை உமக்கு அர்ப்பணிக்கச் செய்யும். எங்கள் பெற்றோருக்கு அன்புடன் சேவை செய்ய உதவும். பொய்யான இறைபக்தி, மாய்மாலத்திலிருந்து எங்களை காத்துக்கொள்ளும். நாங்கள் பெருமையைவிட்டு விலகி, உமக்கு முன்பாக தாழ்மையுடன் வாழ உதவும். ஆமென்.
கேள்வி:
- கைகளைக் கழுவுதல் மற்றும் சடாங்காச்சாரங்களைக் கடைபிடித்தல் ஏன் இறைவனுக்கு முன்பாக நம்மைத் தூய்மைப்படுத்தாது?