Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)
3. யூதர்கள் பவுலைத் தாக்கினார்கள், ரோம போர்வீரர்கள் அவனை காப்பாற்றினார்கள் (அப்போஸ்தலர் 21:27-40)அப்போஸ்தலர் 21:27-40 பவுலின் தாழ்மை மற்றும் அன்பை உங்களால் காணமுடிகிறதா? அநேக யுத்தங்களில் ஜெயித்தவனாக, குறிப்பிடத்தக்க பண சேகரிப்பை கொண்டுவந்தவனாக, மகிப்பெரிய படையின் தளபதியாக பவுல் எருசலேமிற்கு வந்தான். தங்கள் சொந்த ஊரை விட்டு போகாதிருந்த சகோதரர்கள், அவனுடைய பாடுகளைக் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்கள். அவன் இந்த உலகில் சபை மீட்பிற்காக கடுமையாக உழைத்திருந்தான். நீண்ட முடியுடன், பணப் பற்றாக்குறையுடன் நான்கு பேருடன் ஒரு வேலைக்காரனைப் போல் காணப்பட்டான். பவுல் சுயத்திற்கு மரித்திருந்தான். தன்னை நுகத்திற்கும், நியாயப்பிரமாண கட்டிற்கும் ஒப்புவித்தான். நசரேய விரதம் எடுத்திருந்த நான்கு ஏழையருக்காக, பலிக்கான காணிக்கையை அவன் செலுத்தினான். அன்பின் கடமையை அவன் முழுமையாக நிறைவேற்றினான். அவனுடைய யூத சகோதரர்களுக்கு அவன் இடறுதலின் கல்லாக இருக்க விரும்பவில்லை. ஆவியில் எளிமையுடன் வேலைக்காரனைப் போல் இருப்பதை தெரிந்துகொண்டான். இவ்விதமாக அன்பின் பிரமாணத்தை நிறைவேற்றினான். சகோதரர்கள் மத்தியில் பிரிவினை வராதபடிக்கு திருச்சபைகளும் இவ்விதமாக அன்பை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினான். சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்த போது, சில யூதர்கள் பவுலையும், துரோப்பீமுவையும் பார்த்தார்கள். இவர்கள் ஆசியா பகுதி மற்றும் எபேசு பட்டணத்தில் இருந்து எருசலேமிற்கு திரும்பி வந்தவர்கள் ஆவார்கள். பவுலும், புறஜாதி விசுவாசி துரோப்பீமுவும் எருசலேமின் சந்தைப் பகுதியில் இணைந்து நடந்து செல்வதை பார்த்தார்கள். அவர்கள் தேவாலயத்தின் பிரகாரத்தில் அவன் மட்டும் தனியாக இருக்கும் போது பார்த்தார்கள். பவுல் புறஜாதியானை தேவாலயத்திற்குள் கொண்டுவந்தான் என்று நினைத்து, அவர்கள் கோபம் அடைந்தார்கள். அதிக சத்தத்துடன் கத்தினார்கள். “உதவி உதவி நமது மார்க்கத்தை இந்த மனிதன் அழிக்கிறான். விருத்தசேதனம் இல்லாமல் இறைவனுடன் உறவு கொள்ள முடியும் என்று அசுத்தமான புறஜாதிகளுக்கு கற்றுக் கொடுக்கிறான். நியாயப்பிரமாணத்தை மீறி நடக்கிறான். இவன் இறைவனுக்கு எதிரானவன். உங்கள் நடுவில் இருந்து இந்த ஏமாற்றுக்காரனை அகற்றுங்கள். அவனை அழித்துவிடுங்கள்”. கூட்டம் முழுவதும் குழப்பம் நிலவியது. தேவாலயத்தையும், அதன் பரிசுத்த இடங்களையும் தீட்டுப்படுத்துகிறவன் பட்டணத்தின் மீது இறைவனுடைய கோபாக்கினையை கொண்டு வருகிறான். அவன் தேசத்தின் முதல் எதிரியாக மாறுகிறான். பரிசுத்த இடத்தை தீட்டுப்படுத்துவது பட்டணத்தின் அஸ்திபாரங்களை அசைப்பது போன்றதாகும். மக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் கூட ஆரம்பித்தார்கள். அவர்கள் பவுலை முற்றுகையிட்டார்கள். மூர்க்கத்துடன் தேவாலயத்தை விட்டு வெளியே இழுத்துச் சென்றார்கள். மத சடங்காச்சாரத்தின் படி பரிசுத்தமான இடத்தில் அவனது இரத்தம் சிந்தப்படக் கூடாது. கூச்சல் போட்டவர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது, காவற்காரர்கள் ஆலயத்தின் கதவுகளை பூட்டினார்கள். அதனுடைய பரிசுத்தம் மற்றும் மேன்மையை பாதுகாக்க இப்படிச் செய்தார்கள். இப்போது தேவாலயத்திற்கு வெளியே கூட்டத்தினர் பவுலை கொடூரமாக அடித்தார்கள். தங்கள் கைகள் மற்றும் கால்களினால் அடித்தார்கள், உதைத்தார்கள். அவனை கொல்ல முயற்சித்தார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பு கொல்லப்பட்ட ஸ்தேவானை, ஒருவேளை பவுல் நினைத்திருக்கக் கூடும். ஸ்தேவான் முதல் இரத்தசாட்சியாக கல்லெறிந்து கொல்லப்பட்டிருந்தான். அந்நேரத்தில் பவுல் வாலிபனாக இருந்தான். அந்த வன்முறை செயலுக்கு முழு அங்கீகாரம் அளித்திருந்தான். இப்போது அதே பாடுகளை பவுல் சந்திக்கிறான். எருசலேம் மற்றும் அதனுடைய அநீதியைக் குறித்த இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் உண்மையானது. “ ஓ எருசலேமே எருசலேமே உன்னிடத்தில் அனுப்பப்படுகிற தீர்க்கதரிசிகளை கல்லெறிந்து கொல்பவளே” அந்தோ பரிதாபம். யாக்கோபு பவுலிடம் கூறியிருந்த பத்தாயிரம் பேருக்கும் அதிகமான பெருந்திரளான யூத விசுவாசிகளில் ஒருவர் கூட பவுலுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர், இந்த பிரச்சினைக்குரிய மனிதனின் கதை முடிவதை சந்தோஷத்துடன் பார்த்திருப்பார்கள். ஆனால் இயேசு தனது ஊழியக்காரனுக்காக வேறொரு திட்டம் வைத்திருந்தார். அவரது வேளை இன்னும் வரவில்லை. இறைவன் உதவிக்காக, தமது மகிமையை நிலைநாட்ட ஒரு தூதனை அனுப்பவில்லை. ஒரு ரோம சேனாதிபதியை பயன்படுத்தினார். அவனுக்கு கீழாக 1000 போர் வீரர்கள் இருந்தார்கள். கலகம் நிறைந்த அப்பகுதிக்கு இந்த சேனாதிபதியும், சில படைத்தலைவர்களும், போர் வீரர்களும் விரைந்தார்கள். இந்த குழப்பான நிகழ்வினால் முழுப்பட்டணமும் கலக்கமாய் இருந்தது. கலகத்தை நிறுத்தும் எண்ணத்துடன் அவன் செயல்பட்டான். வைராக்கியமுள்ள, துன்மார்க்க யூதர்கள் தலைமை சேனாதிபதி மற்றும் போர்வீரர்களைக் கண்டபோது பயந்து, பவுலை அடிப்பதை நிறுத்தினார்கள். இதனால் பவுலை கைது செய்வதற்கு அந்த சேனாதிபதிக்கு ஏதுவாய் இருந்தது. வெறியுடன் இருந்த கூட்டத்தினரிடம் இருந்து அவனை பாதுகாக்க, குற்றவாளியைக் கட்டுவது போல அவனைக் கட்டும்படி சேனாதிபதி கட்டளையிட்டான். கலகத்திற்கு காரணம் என்னவென்று கூட்டத்தில் உள்ள சிலரிடம் அவன் கேட்டான். அவன் இவ்விதமாக கட்டளையிட்டதால், கோபம் நிறைந்த யூதர்களின் கைகளில் இருந்து அவன் தப்புவிக்கப்பட்டான். போர்வீரர்கள் தங்கள் தோள்களில் அவனை தூக்கி வைத்து சென்றார்கள். கூட்டத்தினர் அவனைக் கொன்றுவிடாதபடி காத்தார்கள். அடிகளால் ஏற்பட்ட காயங்களினால், பவுல் தனது கால்களை ஊன்றி நிற்கக் கூட முடியவில்லை. கூட்டத்தார் கூக்குரலிட்டார்கள். கிறிஸ்துவிற்கு எதிராக கூக்குரலிட்டதைப் போல இருந்தது. இவனை அகற்றுங்கள், வெட்டுங்கள், இப்போதே கொல்லுங்கள். தேவாலயத்தின் அனடோனியா கோபுரத்தின் கதவருகே வந்தபோது பவுல் தாழ்மையுடன் சேனாதிபதியை பார்த்து கிரேக்க மொழியில் தான் சொல்வதைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டான். எகிப்திலிருந்து வந்து நாலாயிரம்பேரை ஏமாற்றிய கள்ளத் தீர்க்கதரிசி அவன் அல்ல என்பதை முதலாவது தெளிவுபடுத்தினான். கிறிஸ்துவை சந்திக்கும்படி ஒலிவமலையைக் கடந்து வனாந்தரத்திற்கு தனது படையை வழிநடத்தி, அதன் மூலம் ரோம அடிமைத் தனத்தில் இருந்து தேசத்தை விடுவிக்க அவன் நினைத்திருந்தான். ஆனால் பவுல் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் கலகக்காரன் அல்ல, தாழ்மையுள்ள மனிதன். மதிப்புமிக்க ரோமப் பட்டணத்தில் இருந்து அவன் வந்தவன் ஆவான். மரணத்தருவாயில் காயங்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தபோது பவுல் தனது நியாயத்தை தனது பதில் மூலம் நிரூபித்தான். சேனாதிபதி அவனது வேண்டுதலுக்கு செவிகொடுத்து, பேசுவதற்கு அனுமதி கொடுத்தான். கூட்டத்தினரிடம் தான் பேசுவது மூலம் தனக்கும், கோபம் நிறைந்த கூட்டத்திற்கும் உள்ள பகைமைக்கான காரணத்தை தெளிவுபடுத்த முடியும் என்று நம்பினான். பவுல் படியருகே எழுந்து நின்றான். ஒருவேளை யாராவது அவனை தாங்கி பிடித்திருக்கக் கூடும். அது அவனுக்கு பிரசங்கபீடமாக இருந்தது. அவன் கூட்டத்தினரைப் பார்த்து தனது கரங்களை அசைத்தான். பின்பு தனது தேச மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான். இது போன்ற பெருந்திரளான யூதர்களிடம் பேசுகின்ற இந்த தருணத்தைப் போல இதற்கு முன்பு அவன் ஒருபோதும் கண்டதில்லை. தனது ஊழியக்காரனின் பாடுகளை இயேசுவானவர் பயன்படுத்தி யூத மக்கள் மத்தியில் மனந்திரும்புதலை கொண்டுவரும்படி பிரசங்கிக்கச் செய்தார். அங்கே அதிருப்தியுடன் இருந்த மக்கள் மத்தியில் வன்மம் நிறைந்த ஓர் அமைதி காணப்பட்டது. இந்த ஏமாற்றுக்காரன் சொல்லப்போவது என்ன? என்று அவர்கள் கவனத்துடன் கேட்டார்கள். அவர்கள் பவுலின் வாயில் இருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து புரிந்து கொண்டார்கள். விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் எங்களுக்காக பாடுபட்டீர். உமது நாமத்தின் நிமித்தம் அப்போஸ்தலர்கள் வேதனைகள், பாடுகள் மற்றும் அவமானங்களை சந்தித்தார்கள். உமது பிரசன்னத்தில் வாழும்படி எங்களுக்கு கற்றுத்தாரும். உமது நாமத்திற்கு உண்மையாயிருக்க எங்களுக்கு உதவும். அநேகர் உம்முடைய நற்செய்தியைக் கேட்கும்படி எங்கள் வாழ்க்கையில் உமது சித்தம் நிறைவேறட்டும். கேள்வி:
|