Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 093 (Spiritual Revival in Ephesus)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

2. எபேசுவில் ஏற்பட்ட ஆன்மீக எழுப்புதல் (அப்போஸ்தலர் 19:1-20)


அப்போஸ்தலர் 19:13-20
13 அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16 பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். 17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். 20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.

இறைவனுடைய அரசை நிறுவுதல் என்பது ஒரு யுத்தமாகும். அது பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இறைவனுடைய ஆவிக்கும் சாத்தானுடைய ஆவிக்கும் இடையில் நடைபெறும் போராட்டமாகும். மக்கள் தீய ஆவிகளுடைய வல்லமைக்குத் தங்களைத் திறந்துகொடுக்கிறார்கள் அல்லது பரலோக பிதாவின் வல்லமைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். சில மக்கள் நரகத்தினால் பிடிக்கப்பட்டிருப்பதையும் வேறுசிலர் இறைவனுடைய அன்பினால் பிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் காண்பதில்லையா?

பழைய ஏற்பாட்டு விசுவாசிகளில் சிலர் உயிருள்ள ஆண்டவருடைய பெயரில் தீய ஆவிகளை விரட்டும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள் என்பதை நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம். பரிசுத்தமுள்ள இறைவனுக்கு பிசாசுகள் பயந்து நடுங்குகின்றன. ஆனாலும் தீய ஆவிகள் ஒருவனைவிட்டு விரட்டப்பட்ட பிறகு, அவனுக்குள் அனுப்பக்கூடிய நல்ல ஆவி எதுவும் யூதர்களிடத்தில் இருக்கவில்லை. ஆகவே சில வேளைகளில் தங்களிலிருந்த தீய ஆவிகள் விரட்டப்பட்ட பிறகு சிலர் முன்பு இருந்ததைக் காட்டிலும் தீயவர்களாக மாறினார்கள்.

தன்னை தலைமைக் குரு என்று சொல்லிக்கொண்டிருந்த ஸ்கேவா என்பனுடைய மகன்கள் ஏழுபேர் இவ்வாறு எபேசு நகரமெங்கும் திரிந்து தீய ஆவிகளை விரட்டினார்கள். அவர்கள் ஒருவேளை பவுலைக் கண்டு அவர் எவ்வாறு இயேசுவின் நாமத்தில் நோய்களைக் குணமாக்குகிறார் என்றும் பிசாசுகளைத் துரத்துகிறார் என்றும் அறிந்துகொண்டிருக்கலாம். ஆகவே இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி அவர்களும் அதே காரியங்களைச் செய்ய முயற்சித்தார்கள். அவர்கள் இயேசுவின் நாமத்தை மந்திரம்போல பயன்படுத்தினார்களே தவிர அவர்கள் இயேசுவை தங்கள் தனிப்பட்ட இரட்சகராக அறிந்திருக்கவில்லை. அவர்கள் அவருடைய வல்லமையை அறியவோ அவரை நம்பவோ இல்லை. அவர்கள் இறைவனைப் பரீட்சைப் பார்க்கும்விதமாக இயேசுவின் நாமத்தை மந்திரத்தைப் போல பயன்படுத்தியது அவர்களுடைய குற்றம்.

பிசாசு பிடித்தவர்களில் இருந்த அந்த அசுத்த ஆவி பயங்கர சத்தத்தோடு: “இயேசு யார் என்றும் பவுல் யாரென்றும் நான் அறிவேன்” என்று கதறியது. மரணத்தை வென்ற கிறிஸ்துவை பிசாசுகள் பற்களைக் கடித்துக்கொண்டு அறிக்கை செய்தன. இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்து, மனிதர்களை இறைவனோடு ஒப்புரவாக்கிவிட்ட காரணத்தினால் அது அவரை மேற்கொள்ள முடியாது. பிசாசுகளுக்கு சிலுவையையும் மரணத்திலிருந்து உயிர்தெழுந்து, இன்றும் உயிரோடிருக்கும் கிறிஸ்துவை நன்கு தெரியும். அவைகளுக்கு இறுதியான நீதித் தீர்ப்பொன்று வரப்போகிறது என்பதும் தெரியும். பவுல் கிறிஸ்துவின் தூதுவர்களில் ஒருவர். அவருடைய வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டவையாகவும் குறைவான சக்திகளின் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவைகளாகவும் இருந்தன. அவருடைய சிந்தனைகள் பலவீனமானவைகளோ அல்லது பயனில்லாதவைகளோ அல்ல, அவை இறைவனுடைய அரசை இவ்வுலகத்தில் கொண்டுவருவதற்கு போதிய வல்லமையுள்ளவைகள்.

பிசாசுகள் கிறிஸ்துவை அறிந்து அவருடைய நாமத்திற்குப் பயந்து நடுங்குகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? பலர் குருடராயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, நற்செய்திக்கு எதிராக தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் பிசாசின் கைகளில் இரையாகிப் போகிறார்கள். பிசாசு பிடித்தவனால் தாக்கப்பட்ட அந்த ஏழுபேரும் கிறிஸ்துவின் அரசிற்குள்ளாக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு சாத்தானால் வரப்போகிற ஆபத்திற்கு அடையாமாயிருக்கிறார்கள். பவுலின் மீதோ கிறிஸ்துவின் உடலாகிய சபையில் அங்கமாயிருக்கிறவர்கள் மீதோ தீய ஆவிகளுக்கு எந்தவித அதிகாரமோ வல்லமையோ கிடையாது. இந்த இரட்சகரைவிட்டு விலகியிருப்பவர்கள், சாத்தானுடைய வட்டாரத்தில் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் முழு உலகமும் பொல்லாங்கனுக்குக் கீழாகவே இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவோ பிசாசின் அரசில் தலையிடக்கூடியவராக இருக்கிறார். அவர் பிசாசினால் சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கி அவர்களை வெற்றி பவனியாக அழைத்து வருபவர். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் விசுவாசத்தினால் இவ்வுலகத்தை வெல்லும் அனுபவத்தைப் பெற்றவர்கள்.

“நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “நான் கிறிஸ்துவின் சொத்தாயிருக்கிறேன். நான் அவருடைய இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டு அவரில் நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். கிறிஸ்துவின் மூலமாக பிசாசின் வல்லமையிலிருந்து மனிதர்களை விடுவிக்கும் அனுபவத்தை விசுவாசத்தினால் பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

நரகத்திலுள்ள சக்திகளும் இயேசுவை அறிந்திருக்கின்றன என்றும் பவுல் உயிருள்ள ஆண்டவரின் தூதன் என்பதையும் எபேசுவிலிருந்த மக்கள் அறிந்துகொண்டபோது மிகவும் பயந்தார்கள். அவர்கள் தங்கள் நிலையை நினைத்துப் பார்த்து, வரப்போகிற நீதியான தீர்ப்பு நிச்சயமானது என்பதை அறிந்துகொண்டார்கள். பலர் உண்மையில் மனந்திரும்பி இயேசுவைத் தொழுதுகொண்டு, அவருடைய பாவமன்னிப்பையும் விடுதலையையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் பவுலை மகிமைப்படுத்தவில்லை. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து பலரை விடுவித்து, மந்திரவாதம் என்னும் பயங்கரத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய கிறிஸ்துவையே மகிமைப்படுத்தினார்கள். இவ்வாறு மந்திரவாத செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தங்கள் பாவங்களையும், தந்திரங்களையும், நியாயமற்ற செயல்களையும் அப்போஸ்தலர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக வந்து பொதுவில் அறிக்கை செய்தார்கள். அவர்கள் தங்கள் தீய நடவடிக்கைகளை விட்டுவிடுவதற்கு உறுதியாகத் தீர்மானம் எடுத்து, அவர்கள் விசுவாசத்தில் உறுதிப்படும்படி சகோதரர்கள் அவர்களுக்காக ஏறெடுக்கும் விண்ணப்பத்தில் பங்கேற்றார்கள். கிறிஸ்துவின் இரத்தம் அவர்களை முழுவதும் விடுவிக்க வல்லதாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவர்களை நித்தியமாகப் பரிசுத்தப்படுத்தினார்.

அன்புள்ள சகோதரனே, கிறிஸ்து இன்றும் விடுதலையாளராகவே இருக்கிறார். இப்போதும் தீய ஆவிகளுடைய வல்லமையிலிருந்து அவரால் உங்களை விடுவிக்க முடியும். நீங்கள் எப்போதாவது ஜாதகம் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது மந்திரவாதத்தை நம்பியிருக்கிறீர்களா? ஒரு ஷேக்கினிடத்தில் சென்று உங்களுக்கு மாந்தீரக்கதினால் சுகம் கிடைக்க வேண்டும் என்று நாடியிருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது நீல முத்துக்கள் அல்லது உங்கள் சுற்றுச் சூழலில் உள்ள ஏதாவது தீமையின் உருவங்களை நம்பியிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இந்தப் பாவங்களை எல்லாம் இறைவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, முடிந்தால் ஆண்டவரின் உறுதியான ஊழியர்களுடன் சேர்ந்து விண்ணப்பம் செய்யுங்கள். அப்போது இயேசுவின் நாமம் இந்த பிசாசின் கட்டுகள் அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்கும். நீங்கள் பிசாசிற்கு உங்கள் சிறிய விரலைக் கொடுப்பீர்களானால் அவன் உங்களுடைய கையையும், அதன் பிறகு உங்கள் முழு உடலையும் எடுத்துக்கொள்வான் என்பதை மறந்து விடாதீர்கள். யார் முழு இருதயத்தோடும் மனந்திரும்பி, இறைமகன் இயேசுவினிடத்தில் தஞ்சம் அடைகிறார்களோ அவர்கள் தங்களை முழுவதுமாக விடுவித்துக்கொள்கிறார்கள். ஆகவே உங்கள் விடுதலையின் நேரத்தைப் புறக்கணித்துவிடாதீர்கள். இன்று நீங்கள் இயேசுவை நம்புவீர்களானால் இறைவனுடைய வெற்றி உங்களுடைய வாழ்வில் உணரப்படும்.

நித்திய மரணத்திலிருந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் நித்திய வாழ்வைப் எபேசுப் பட்டணத்தில் பெற்றுக்கொண்டபோது, அங்கு கிறிஸ்துவின் திருச்சபை நாட்டப்பட்டபோது சாத்தானுடைய கோட்டை உடைபட்டது. மீட்கப்பட்டவர்களின் பொதுவான விசுவாசமும் அவர்களுடைய விண்ணப்பத்தின் ஐக்கியமும் கிறிஸ்துவினிடத்திலிருந்து மாபெரும் வல்லமையைக் கொண்டுவந்தது. பிரசங்கிக்கப்படும் இரட்சகரின் வார்த்தைகள் சிலைவழிபாடு செய்பவர்களின் இருளை மேற்கொள்கிறது. அது மந்திரத்தினாலும் மனித சிந்தையினாலுமல்ல, சட்டத்தினாலும் தெய்வ பக்தியினாலுமல்ல, அவருடைய பணியாளர்களுடைய வார்த்தையின் மூலமாகவே அது நடந்தேறுகிறது. ஆகவே உங்கள் இருதயத்தை உங்கள் ஆண்டவருடைய வார்த்தையினால் நிரப்புங்கள். விண்ணப்பத்தின் மூலமாக அவருடன் ஐக்கியத்தில் நிலைத்திருங்கள். உங்கள் பணியின் மூலமாக, பிசாசு பிடித்த பலரை விடுவித்து, அவர்களை தம்முடைய அரசில் உறுதிப்படுத்த கிறிஸ்து விரும்புகிறார். நம்முடைய விசுவாசமே உலகத்தை வெற்றிகொள்ளும் ஜெயமாக இருக்கிறது.

விண்ணப்பம்: மரணத்தையும், சாத்தானையும், பாவத்தையும் வெற்றிகொண்ட எங்கள் கர்த்தராகிய இயேசுவே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். பாவச் சோதனையில் விழுந்து போகாத நித்திய பரிசுத்தர் நீரே. நீர் எங்கள் பாவங்களை மன்னித்து பிசாசுடன் எங்களுக்குள்ள தொடர்புகள் அனைத்தையும் மன்னித்தருளும். உம்மைத் தேடுகிற எல்லாரோடும் சேர்த்து, எங்களை விடுவித்து, பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் எங்களை உறுதிப்படுத்தும். நாங்கள் உம்மை நம்பி உம்மை மகிமைப்படுத்துகிறோம். நீர் எங்கள் இரட்சகராகவும், எங்களை ஆதரிப்பவராகவும் எங்களுக்கு எல்லாமுமாகவும் இருக்கிறீர். ஆமென்.

கேள்வி:

  1. இயேசுவின் பெயரும் அவருடைய வார்த்தையும் எபேசுவில் எவ்வாறு பெரிய அளவில் மகிமைப்படுத்தப்பட்டது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)