Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)
9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)அப்போஸ்தலர் 11:1-18 பேதுருவின் மூலமாக இறைவனுடைய ஆவியானவர் அரிய அற்புதங்களை நிறைவேற்றினார். முதலில் லித்தாவிலிருந்த ஒரு முடவனைச் சுகமாக்கினார். இரண்டாவது யோப்பாவில் மரித்துப் போன பெண்ணை உயிரோடு எழுப்பினார். இவற்றைத் தவிர வேறு ஏதேனும் அற்புதங்களை பேதுருவைக் கொண்டு இறைவன் நிறைவேற்றினாரா? அனைத்து அற்புதங்களிலும் மிகப்பெரியது இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த புறவினத்து மக்களை இறைவன் இரட்சித்தது. செசரியாவில் நடைபெற்ற அற்புதத்தின் மூலமாக இறைவன் புறவினத்து மக்களுக்காக தம்முடைய கிருபையின் வாசலைத் திறந்து வைத்தபடியால் இது இறைவனுடைய வல்லமையின் உச்சகட்டத்தைக் காண்பிக்கிறது. விருத்தசேதனம், நியாயப்பிரமாணத்தைப் பற்றிய போதனை, மற்ற கோத்திரங்களுடனான உறவு, தேவாலயச் சடங்குகள் எதுவும் இன்றி அவர்களை இறைவன் தம்முடைய அரசிற்குள் அனுமதித்தார். கிறிஸ்துவின் ஆவியானவர் விடுதலை செய்து மக்களை விடுவித்து, சிலுவையின் இரட்சிப்பை அனைவருக்கும் முன்பாக நிறைவேற்றினார். இந்த தருணத்தில்தான் உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கும்பணி ஆரம்பமானது. இங்குதான் பழைய ஏற்பாட்டு வரலாறு புதிய ஏற்பாட்டின் வரலாற்றிலிருந்து பிரிக்கப்படுகிறது. இதனால் பல யூத கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்களுடைய இருதயம் கடினப்பட்டு கொதித்தெழுந்தது. இஸ்ரவேல் மக்களுக்குரிய ஆசீர்வாதத்தை பேதுரு தங்களை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருக்கும் மக்களுக்கு விற்றுவிட்டார் என்று கருதினார்கள். இஸ்ரவேலருடன் இறைவன் செய்த உடன்படிக்கையாகிய விருத்தசேதனம் எங்கே போனது? பன்னிரெண்டு கோத்திரத்தாரை இறைவன் தெரிவுசெய்தாரே அதன் உறுதிப்பாடு எங்கே போனது? இறைவனுக்கு உகந்தவாறு நாம் கைக்கொள்ள வேண்டிய நியாயப்பிரமாணத்தின் எண்ணற்ற கோரிக்கைகள் எங்கே போனது? நாம் நீதிச்சட்டமற்ற சிலைவழிபாட்டுக்காரரை இறைவனோடு உடன்படிக்கை கொள்ளவும் உறவுகொள்ளவும் அனுமதித்து விட்டோம் என்று தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் கேள்விப்பட்டால், அவர்கள் நம்மைச் சபித்து, மீண்டும் உபத்திரப்படுத்த மாட்டார்களா? இவ்வாறு எருசலேமிருந்த ஆதித்திருச்சபைச் சகோதரர்கள் கோபப்பட்டுக் கொதித்தெழுந்தார்கள். பேதுரு எருசலேமிற்குத் திரும்பியபோது, விசுவாசிகள் நடுவில் தீவிரமான பிரிவினை உண்டானது. அவர்கள் இருபிரிவினராகக் காணப்பட்டனர். ஒன்று நியாயப்பிரமாணத்தை எழுத்தின்படி கைக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டவர்கள்; மற்றது பேதுருவும் அவரோடு யோப்பாவிற்குச் சென்றிருந்த ஆறு சாட்சிகள். பேதுரு புறவினத்து மக்களிடத்தில் சென்று நற்செய்தியை அறிவித்ததற்காகவோ, திருமுழுக்குக் கொடுத்த அவர்களைத் திருச்சபையில் சேர்த்ததற்காகவோ அவர்கள் அவரைக் குற்றப்படுத்தவில்லை. மறுபிறப்படைந்தவர்களுக்கு விருத்தசேதனத்தைச் செய்து, அவர்களை யூதர்களாக்க அவர் ஏன் முற்படவில்லை என்பதுதான் அவர்களுடைய குற்றச்சாட்டாக இருந்தது. விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொள்ளாமல், இறைவனுடைய உடன்படிக்கை செய்துகொள்ளாத மக்களுடன் விருத்தசேதனம் செய்த மக்களுடன் பழகுவதுபோல, உணவருந்தி ஐக்கியப்பட்டுவிட்டார் என்பதுதான் அவர்களுடைய குற்றச்சாட்டு. தானும் அவர்களைப் போலவே கடின மனமும் பிடிவாதமும் உள்ளவராக இருந்த காரணத்தினால் அவர்களோடு பேதுரு போராடவில்லை. “இல்லை ஆண்டவரே, நான் ஒருபோதும் அசுத்தமானதை உண்டதில்லையே” என்று தனக்கு தரிசனத்தில் பேசிய இறைவனுக்கு பதிலுரைத்தவர்தான் பேதுரு. ஆனால் இறைவனோ மூன்று முறை “இறைவன் சுத்தமாக்கினதை அசுத்தமானதாக எண்ணாதே” என்று அவருக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு இறைவன் அவருடைய தப்பெண்ணத்தை மாற்றி, அவருடைய பெருமையான எதிர்ப்பை அழித்தார். அந்த அசுத்த மிருகங்கள் பூமியிலோ சமுத்திரத்திலோ கொட்டிப்போடவில்லை என்றும் அவை பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் பேதுரு கண்டு, அசுத்தமானவற்றை இறைவன் கிறிஸ்துவின் மூலமாக சுத்தமாக்குகிறார் என்பதற்கு அது அடையாளம் என்பதை உணர்ந்துகொண்டார். கொர்நேலியுவுக்கு நற்செய்தி அறிவித்து அவரையும் அவருடைய சொந்த மக்களையும் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்திய அனுபவத்தின் மூலமாகவே அந்த தரிசனம் நிறைவேறியது என்பதையும் பேதுரு உணர்ந்துகொண்டார். பழைய உடன்படிக்கைக்குரிய மக்களை மட்டுமல்ல, அனைத்து மனிதர்களையும் இறைவன் தெரிந்துகொண்டு, அவர்களை இரட்சித்துப் பரிசுத்தபடுத்தியிருக்கிறார் பேதுரு அந்த சகோதரர்களுக்கு முன்பாக தெளிவாள சாட்சியாக முன்னறிவித்தார். ஒவ்வொரு மனிதனையும் பரிசுத்தர் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சுத்தப்படுத்துகிறார். அவருடைய கிருபை நம்முடைய சிந்தனைகளைக் காட்டிலும் பெரியதாகவும், நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் பரந்ததாகவும், நம்முடைய இதயத்தைக் காட்டிலும் இரக்கமுள்ளதாகவும் இருக்கிறது. தன்னிடத்தில் கேள்வி கேட்ட அனைவருக்கும் தனது செயலைக் குறித்த விளக்கைத்தை பேதுரு வழங்கினார். இறுதி அதிகாரம் தன்னிடத்தில் இல்லை என்றும், தான் விரும்பியதை எல்லாம் திருச்சபையில் செய்வதற்கு தான் திருச்சபைக்குத் தலைவர் அல்ல என்றும் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். வைராக்கியத்தோடு தன்னிடத்தில் கேள்வி கேட்டவர்களுக்கு தாழ்மையுடன் பேதுரு பதிலுரைத்தார். கொர்நேலியுவினுடைய வீட்டிற்குச் செல்லும்படி பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு தன்னை வழிநடத்தினார் என்றும் தங்களது இரட்சிப்பிற்காக அப்போஸ்தலனை அழைத்துவரும்படி வேலைக்காரர்களை அனுப்பவதற்கு கர்த்தருடைய தூதன் கொர்நேலியுவை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார். தனக்கு இறைவன் கட்டளையிடாத எந்தக் காரியத்தையும் பேதுரு செய்யவில்லை. அவர் யாரிடத்தில் அனுப்பப்பட்டாரோ அவர்களுக்குத்தான் அவர் நற்செய்தியைப் பிரசங்கம் செய்தார். அதைத் தொடர்ந்து அற்புதமான காரியம் நடைபெற்றது: யூதர்கள் எதிர்பார்ப்போடு விண்ணப்பித்துக்கொண்டிருந்தபோது எவ்வாறு பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டாரோ அவ்வாறே பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த புறவினத்து மக்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டார். அப்போஸ்தலர்கள் அனுபவித்ததைப் போலவே செசரியாவிலிருந்தவர்களுக்கும் கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்னும் இறைவனுடைய கொடை அருளப்பட்டது என்பதை பேதுரு வலியுறுத்தினார். கிருபையின் மூலமாக மட்டுமேயன்றி வேறுவழியில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் நியாயப்பிரமாணத்தின் செயல்களும் விருத்தசேனமும் ஒன்றுக்கும் உதவாது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் முடிவுசெய்யும்போது தான் அதற்கு எதிர்த்து நிற்க முடியாது என்று தன்னுடைய செயலை வலுவாக உறுதிப்படுத்தினார். தான் இறைவனுடைய திட்டத்தை மாற்ற நினைத்தால் அது என்னால் முடியாது என்றார். இவ்வாறான பேதுருவின் பேச்சு ஒருவகையில் நியாயப்பிரமாணத்தை வலியுறுத்தியவர்களுக்கு பேதுரு கொடுத்த நகைச் சுவையான பதிலாகவும் காணப்பட்டது. அப்போஸ்தலரில் பேதுரு முதன்மையானவராக இருந்து, தன்னுடைய பிரசங்கத்தின் வழியாக புறவினத்து மக்களுடைய இரட்சிப்புக்கு ஏதுவாக இருந்தார். பேதுருவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியவர்கள் இறைவனுடைய அன்பைக் கண்டு சற்று நேரம் வாயடைத்துப் போனார்கள். அப்போஸ்தலரில் பெரும்பான்மையானவர்கள் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள். மூப்பர்கள் புதிய வளர்ச்சியைக் கண்டு நன்றி செலுத்தினார்கள். நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் இரட்சகரில் விசுவாசம் வைப்பதன் மூலமாக மட்டுமே மக்கள் விடுதலையடைய முடியும். அவர்கள் நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக மட்டுமே அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்போஸ்தலர்களில் மிகவும் தைரியசாலியாக பேதுருவின் மூலமாக உலகத்திற்கு நற்செய்தி அறிவிப்பதற்கான கதவை இறைவனே திறந்துவிட்டார், அவ்வாறு தம்முடைய மேன்மையை அவர் வெளிப்படுத்தினார். விண்ணப்பம்: ஸ்தேவான், பவுல், பேதுரு ஆகியவர்களுக்கு மகிமையான உம்முடைய வெளிப்பாடகளைக் கொடுத்து திருச்சபையின் போக்கில் நீர் மாற்றத்தை உண்டுபண்ணியமைக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி. உம்முடைய கிருபையினால் புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்களை உம்முடைய பிள்ளைகளாக்கினீர். இது நீர் உமது மகிமையான செயலை முழுமைப்படுத்தியது. நீர் அனைத்து இனமக்களிலும் இருந்து, எண்ணற்றவர்களை அழைத்து, பரிசுத்தப்படுத்தி, உம்முடைய வருகைவரை அவர்களைக் காத்துக்கொள்வீர். கர்த்தராகிய இயேசு நீர் வாரும். அதுவரை நாங்கள் பரிசுத்த ஆவியானவரினால் பெலப்படுத்தப்பட்டு, வழிநடத்தப்பட்டு, ஞானத்தோடும் விடாமுயற்சியோடும், உம்மைப் பிரசங்கிக்க எங்களுக்குப் போதித்தருளும். ஆமென். கேள்வி:
|