Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
10. தேவாலயத்தில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 3:11-26)அப்போஸ்தலர் 3:11-16 ஒரு குறிப்பிட்ட தலைவரிடம் வல்லமை இருப்பதை மக்கள் உணரும் போது, அவர்கள் அவரிடம் ஓடி, அந்த வல்லமையை பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். ஆனால் துரதிர்ஷடவசமாக அநேக தலைவர்கள் தங்களை பின்பற்றுபவர்களுக்கு இறைவனின் வல்லமையை கொடுப்பதில்லை என்பதே நீண்ட கால அனுபவமாயிருக்கிறது. மாறாக, அவர்கள் தங்களை பெருமைப்படுத்தி தங்களது சொந்த வலிமையை காட்டுகிறார்கள். அவர்கள் பொன், வெள்ளியைக் குறித்த நம்பிக்கையை தங்களை பின்பற்றுபவர்களிடம் வாக்குப் பண்ணுகிறார்கள். ஆனால் ஒருபோதும் அதை நிறைவேற்றுவதில்லை. பேதுரு யூதர்களின் மனப்பான்மையைக் கண்டு வியப்புற்றார். அவர்களிடம் செயல்பட்ட இறைவனின் வல்லமையையோ அல்லது சத்தியத்தையோ அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே முதலாவது தன்னை அவர்கள் புகழுவதை தடைசெய்ய அவன் முயற்சித்தான். அவனது வரத்தில் அவர்கள் நம்பிக்கை வைக்காமல், இறைவனின் ஈவை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் . கர்த்தர் இவ்விதம் கூறுகிறார்:“மனிதன் மேல் நம்பிக்கையாயிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்”. மனித வல்லமையோ அல்லது மதமோ மனிதனின் பாவத்தை அல்லது வியாதியை நீக்காது என்பதை பேதுரு உறுதிப்படுத்தினார். மனிதர்கள் முற்றிலும் அருகதையற்றவர்கள். அவர்கள் சிறகை விரித்து ஆடும் மயில்களைப் போல தங்களையே காண்பித்துக் கொள்பவர்கள். அமைதியற்ற இவ்வுலகிற்கு வல்லமை மற்றும் நம்பிக்கையை தரக்கூடிய ஓர் ஒப்பற்ற மனிதனை அப்போஸ்தலர்கள் சுட்டிக் காட்டினார்கள். அந்த மனிதன் நாசரேத்தூர் இயேசு ஆவார். பேதுரு அவரை கிறிஸ்து என்று அழைக்கவில்லை. அவரை விவரிக்க கடவுளின் ஊழியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இறைவனின் அடிமையாக இருக்கும் ஊழியர் என்று கிரேக்கத்தில் பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தினார். தன்னுடைய பிதாவிற்கு முற்றிலும் தன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவை இது காண்பிக்கிறது. அவரது மனப்பூர்வமான ஒப்புக்கொடுத்தலின் மூலம் கிறிஸ்துவின் முழுமை மற்றும் வெற்றியை நாம் காண்கிறோம். இறைவனின் குமாரன் தனக்கு புகழ் சேர்க்கவில்லை. அவர் மனிதன் ஆனார். அடிமையின் ரூபம் எடுத்தார். மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் தன்னை தாழ்த்தினார். எனவே இறைவன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளி, அவரை உயர்த்தினார். (பிலிப்பியர்2:7-9). இறைவன் தனது ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார் என்று பேதுரு கூறியது சரியாய் இருந்தது. இறைவனாயிருக்கக் கூடிய பரிசுத்த ஆவியானவரின் இறுதிப்பணி இயேசுகிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதே ஆகும். புரிந்துகொள்ள முடியாத, அறியாத ஓர் இறைவனைக் குறித்து பேதுரு பேசவில்லை. அவர் இறைவனை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவரின் இறைவன் என்று அழைத்தார். அவர்களுடைய மூதாதையர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார். அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். தேசப் பிதாக்களின் இறைவன் தன்னுடைய ஊழியர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த தெய்வீக நிகழ்வின் தாக்கம் அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தின் தலையங்கத்தை வடிவமைத்தது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கல்லறையில் தங்கியிருக்கவில்லை. என்றென்றும் வாழுகிற அவர் எழுந்தார். அப்போஸ்தலர்கள் கண்கண்ட சாட்சிகளாக திகழ்ந்தார்கள். அவர்கள் அவரை பார்த்து, அவருடன் பேசியவர்கள் ஆவார்கள். அவரது உயிர்த்தெழுதல் மற்றும் சிலுவை மரணத்திற்கு பிறகு வெளிப்பட்ட மகிமையின் சரீரம் குறித்த நிச்சயத்தன்மைக்கு அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள். இறைவனின் கிருபையையும் வெற்றியையும் மட்டுமே காண்பிப்பதில் பரிசுத்த ஆவியானவர் திருப்தி அடையவில்லை. இறைவனின் ஆவியானவர் பரிசுத்தமானவராக இருக்கிறபடியால், அவர் எப்போதும் மனிதனின் உள்ளான பாவங்களைத் தாக்குகிறார். ரோம ஆளுநர் இயேசுவை குற்றமற்றவர் என்று கண்டும், யூத தேசம் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை புறக்கணித்தார்கள்; மறுதலித்தார்கள். அவர் சத்தியத்தை திரித்துப் பேசினார் என்று சொல்லி இறைவனின் குமாரனை சிலுவையில் அறையும்படி புறஇனத்து ஆளுநரை வலியுறுத்தினார்கள். இயேசு முன்பு பேசிக்கொண்டிருந்த சாலமோனுடைய மண்டபத்திற்கு வெகு அருகில் தான் தேவாலயத்தின் முன்னிருந்த திறந்த வெளியை நோக்கிக் கொண்டிருக்கும் ஆன்டோனியா கோபுரம் இருந்தது. அங்கு தான் யூதத் தலைவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட மக்கள் அவர்களிடம் காணப்பட்ட அநீதியை உணர்ந்தார்கள். மேலும் அந்தக் கட்டிடங்களே அவர்களுக்கு விரோதமாக சாட்சி கூறும். மனிதரைப் பிடிக்கிறவர்களாக மாறிய பேதுரு தனது பிரசங்கத்தைத் தொடர்ந்தார். கொலைகாரர்களின் முகங்களில் இருந்து அவர் போலியான இறைபக்தி எனும் திரையை விலக்கினார். இறைவனின் ஆட்டுக்குட்டியை புறக்கணித்து விட்டு பரபாஸ் என்பவனை அவர்கள் தெரிந்து கொண்டதை கண்டித்தார். பரபாஸ் என்பவன் கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தவன். இந்த தெரிந்தெடுப்பு அவர்களது தீய ஆவியையும், பாதகமான மனதையும் வெளிப்படுத்தியது. பரிசுத்த ஆவியானவர் பேதுருவை கிறிஸ்து என்ற பதத்தை பயன்படுத்தும்படி ஏவினார். இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்தவர். பரிசுத்தமான அவர் முழு உலகத்தின் பாவத்தையும் தன் மீது சுமந்தார். அவர் குற்றமற்றவர், இறைவனின் மனுவுருவானவர். பாவமில்லாமல் வாழும் ஒருவர் ஒரு போதும் மரிக்க கூடாது. இருப்பினும் இயேசுவின் மரணத்தில் நடக்க முடியாத ஓர் காரியம் நடந்தது. ஜீவாதிபதி மரித்தார். இயேசுவின் அடிப்படைத் தன்மையை தெளிவுபடுத்தும்படி, பேதுரு “கிறிஸ்து” அல்லது இறைவனின் குமாரன் என்ற பதத்தை இதுவரை பயன்படுத்தவில்லை. மாறாக இயேசு என்ற பெயரில் அடங்கியிருந்த அனைத்து சிறப்பம்சங்களையும் வெளிப்படுத்தும்படி அதை பயன்படுத்தினார். பேதுரு தொடர்ந்து தன்னை குற்றம் சாட்டிய கொலைகாரர்களிடம் பேசினார். இறைவன் நாசரேத்தூர் இயேசுவை நேசித்தார். ஆனால் நீங்கள் இறைவனின் ஆவியானவருக்கு எதிர்த்து நின்றீர்கள். பரிசுத்தமானவரின் நேசகுமாரனை கொலை செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், இறைவனின் பகைவர்கள், அவரது எதிராளிகள். நீங்கள் ஆலயத்துக்கு வந்து ஆசீர்வாதத்தை அடையும்படி விண்ணப்பம் பண்ணுகிறீர்கள். ஆனால் இறைவன் உங்கள் விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பது கிடையாது. ஏனெனில் இறைவனின் நீதியுள்ள ஊழியர் இயேசுவை நீங்கள் கொலை செய்தீர்கள். அதைத் தொடர்ந்து மேலும் அவர் சாட்சி பகர்ந்தார். யூதர்களால் அவமதிக்கப்பட்டு, பாடுபட்டு, இறுதியில் கொலைசெய்யப்பட்ட இயேசுவுக்கு இறைவன் ராஜ்யத்தை தரும்படி தமது கரத்தை நீட்டினார். அவர் மோசே, எலியா மற்றும் திருமுழுக்கு யோவானுக்கு இப்படிச் செய்யவில்லை. இறைவனின் சித்தம் மற்றும் விருப்பத்துடன் இசைந்திருந்த இயேசுவின் பரிசுத்தத்திற்கு அவரது உயிர்த்தெழுதல் சான்றாக இருந்தது. ஆண்டவராகிய இயேசு வாழுகிறார், இருக்கிறார், நமக்கு அருகில் உள்ளார். மற்ற மனிதர்களைப் போல கிறிஸ்து கல்லறையில் அழிந்துவிடவில்லை என்பதை பேதுருவின் சாட்சி உறுதிப்படுத்துகிறது. மரணக் கட்டுகளை தகர்த்தெறிந்து, பிதாவாகிய இறைவனின் மகிமையில் இயேசு இப்போது வாசம் பண்ணுகிறார். யூதர்களுக்கு இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை உறுதிப்படுத்தும்படி, அவர்கள் அநேக வருடங்கள் அறிந்திருந்த சுகமாக்கப்பட்ட அந்த மனிதனை அவர்கள் நடுவே நிறுத்தி பேசினார். அவனது புதுப்பிக்கப்பட்ட தசைகள், நேராக்கப்பட்ட எலும்புகள் பேதுருவின் சாட்சிக்கு சான்று பகர்ந்தது. மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நிரூபணமாக்கியது. அந்த சுகமாகுதல் கிருபையினால் மாத்திரம் வந்தது என்பதை பேதுருவின் அறிக்கை மூலமாக மருத்துவராகிய லூக்கா தெளிவுபடுத்திக் கொண்டார். இயேசுவின் மீதான விசுவாசம் என்பது கூட மனிதனுக்கு இரட்சகர் அருளும் கிருபையின் விளைவு தான்.இயேசு என்னும் நாமத்தின் மீதான விசுவாசம் அவருடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்துகிறது, அவரது இரட்சிக்கும் சித்தத்தைக் குறித்த நிச்சயத்தை தருகிறது, சிறந்த மருத்துவரான அவரிடம் ஒப்புக்கொடுப்பதைக் காண்பிக்கிறது. அவரது வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்கிறது. இயேசு என்னும் நாமம் முழுவதும் வல்லமையால் நிறைந்திருக்கிறது. இயேசு என்னும் ஒப்பற்ற நாமத்தின் வல்லமையை விட இந்த உலகில் வேறு கட்டி எழுப்பும் வல்லமை கிடையாது. பரிசுத்த ஆவியானவர் இந்த ஒப்பற்ற, அதிசயமான நாமத்தின் மூலம் மட்டுமே இரட்சிக்கிறார், சுகப்படுத்துகிறார், பரிசுத்தப்படுத்துகிறார். இந்த நாமத்தை மக்கள் மறக்கும்படியாகவும் அல்லது வேறு முக்கிய நாமங்களுக்கு இதை மாற்றியமைப்பதின் மூலம் சாத்தான் ஆயிரம் வழிகளில் இந்த நாமத்தை அழிப்பதற்கு முயற்சிக்கிறான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்போதும் அருமையான சகோதரரே, நீங்கள் சத்தியத்தை கேட்பவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் நாசரேத்தூர் இயேசு என்னும் மனிதனின் சரீரத்திலே தங்கியிருந்தது. எவர் ஒருவர் அவருக்கு தங்களை அர்ப்பணிக்கிறார்களோ, அவர்கள் அவருடைய வல்லமையை அனுபவிப்பார்கள். இறைவனின் நித்திய வல்லமை நமது பலவீனத்தை சரிசெய்து பலப்படுத்துகிறது. இரட்சிக்கும் விசுவாசம் என்பது ஒரு மாபெரும் இரகசியம். ஒரு விசுவாசி இயேசுவின் நாமத்தின் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு அதுவே தைரியத்தையும், உறுதியையும் தருகிறது. இரட்சகர் மீதான அவனது தொடர்ச்சியான பார்வை மூலம் அவனது நம்பிக்கை வளருகிறது. உங்களது அசைக்க முடியாத விசுவாசத்தையும், சிலுவையில் அறையப்பட்ட அவரை உறுதியாக பற்றிக் கொள்வதையும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையால் நீங்கள் ஆட்கொள்ளப்படுவதையும் அவர் எதிர்பார்க்கிறார். உன் விசுவாசம் உன்னை இரட்சித்திருக்கிறது விண்ணப்பம்: ஓ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமது நாமத்தை எங்களுக்கு தெரியப்படுத்தின படியால் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உண்மையான இறைவனிடம் இருந்து வந்த உண்மையான இறைவன் நீர். பிதாவுக்கு சமமானவர் நீர். சர்வ வல்லமையுள்ளவர் உம்மில் செயல்படுகிறார். உமது பிரசன்னத்திலிருந்து எங்களை தள்ளி விடாதிரும். உமது பரிசுத்த ஆவியானவரை எங்களை விட்டு எடுத்துப் போடாதிரும்; உமது வல்லமையில் நாங்கள் தொடர்ந்திருக்கவும், முழு உலகத்திற்கும் உமது நாமத்தை அறியச்செய்யவும், உமது அன்பின் சாரத்தினால் எங்களை நிரப்பும். கேள்வி:
|