Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)அப்போஸ்தலர் 2:33-36 இரட்சிப்பைக் குறித்த ஒரு நீண்ட அறிமுகத்திற்குப் பிறகு, இறைவனால் அனுப்பப்பட்டு, சிலுவையில் அறையுண்டு மரணத்தைத் தழுவி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதற்கும் இடையிலான தொடர்பை பேதுரு எடுத்துரைக்கிறார். இயேசுவின் வருகையும், மரணமும், உயிர்த்தெழுதலும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்திற்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலுமின்றி பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வர முடியாது. இயேசு தம்முடைய பிதாவின் சித்தம் அனைத்தையும் இசைவாக நிறைவேற்றி, பரமேறி, அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்தார். யூதர்களால் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவருக்கு இறைவன் மிக அதிகமான கனத்தையும் மகிமையையும் பொழிந்தருளினார். வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரங்களையும் பிதா குமாரனுக்குக் கொடுத்தார். மேலும் பிதாவினுடைய வாக்குத்தத்தை நிறைவேற்றும் அனைத்து வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருந்தார். தம்மை விசுவாசித்து, தம்மிடம் விண்ணப்பம் செய்யும் தமது சீடர்களுடைய உள்ளத்தில் வாழும்படி அவர் தம்முடைய பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். கிறிஸ்து சிலுவையின் மூலமாக நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கிய காரணத்தினாலேயே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். அவர் நமக்காக பரிசுத்த பிரதான ஆசாரியனாக நமக்காகப் பரிந்துபேசுகிறார். கிறிஸ்துவின் பரிந்துபேசும் பணியே பரிசுத்த ஆவியானவரை நமக்குப் பொழிந்தருளியது. உண்மையில் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் இறைவனுடைய கிருபாசனத்தை நெருங்கி நமக்காக பரிந்துரை விண்ணப்பத்தை ஏறெடுக்க முடியாது. அனைத்து தீர்க்கதரிசிகளும், அரசர்களும், அனைத்து மதங்களை நிறுவியவர்களும் ஒன்று தங்கள் கல்லறைகளில் புதைக்கப்பட்டு அதில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது ஆபிரகம், மோசே, மற்றும் எலியா ஆகியோரைப் போல பரலோகத்தில் இளைப்பாறுகிறார்கள். கிறிஸ்து மட்டுமே பிதாவாகிய இறைவனோடு இணைக்கப்பட்டு மிக நெருக்கமாயிருக்கிறார். நித்திய காலமாகவே குமாரனில் பிதாவும், பிதாவில் குமாரனும் வாழ்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டில் தீர்க்கதரிசியாகிய தாவீது பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையிலான ஐக்கியத்தைக் கண்டார். தூதர்களுடைய துதிப்பாடல்களினால் சூழப்பட்டவராக, குமாரன் மீண்டும் பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்றபோது, பிதா குமாரனிடத்தில் என்ன சொன்னார் என்பதை தாவீது காதுகொடுத்துக் கேட்டார். “நீர் உம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்து ஓய்ந்திரும். உம்முடைய மனித உடலில் பட்ட பாடுகளினால் நீர் உம்முடைய பணியை நீர் முடித்திருக்கிறீர். நீர் இரட்சிப்பை நிறைவேற்றி விட்டீர். இப்போதிலிருந்து நான் என்னுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையோடு செயல்படப் போகிறேன். அவர் என்னை மெய்யாகத் தேடுகிற அனைவர் மீதும் இரட்சிப்பைப் பொழிந்தருளி, அநியாயக்காரரையும், அகங்காரிகளையும் நியாயத்தீர்ப்பில் கொண்டுவந்து நிறுத்துவார். பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதிலிருந்து மனிதர்கள் மீதான நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது. கிறிஸ்துவை யூதர்கள் விசுவாசித்து, மனந்திரும்பாவிட்டால் அவர்கள் அவருக்குப் பாதபடியாகிப் போவார்கள் என்று அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவே பேதுரு அறிவித்தார். அவர்கள் கண்ணீரோடு மனந்திரும்பி இறைமகனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது தண்டனை வரும். இந்தப் பயங்கரமான எச்சரிப்பின் வார்த்தைகள் பூமியன் அனைத்துக் கண்டங்களில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுடைய பல்வேறு பிரிவுகளுக்கும் மதங்கள் அனைத்துக்கும் இந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் பொருத்தமானவைகளே. இறைமகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள், கட்டப்பட்டு நித்திய காலத்திற்கும் கிறிஸ்துவின் பாதத்தின் கீழ் வைக்கப்படுவார்கள். பெந்தகொஸ்தே நாளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எந்தவிடத் தடையுமின்றி பூமியின் அனைத்து இடங்களிலும் வாழ்கிறார் என்று பேதுரு அந்த மக்களுக்குக் காண்பித்தார். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலிருந்த பிரிவினைச் சுவரைக் கிறிஸ்து அகற்றிவிட்டார். தெய்வீக அன்பின் அலை தொடர்ந்து வீசுகிறது. இன்று யாரெல்லாம் விசுவாசம்கொள்கிறார்களோ அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது. பெரும்பாலான யூதர்களின் உள்ளத்தில் சத்திய ஆவியானவர் வாசம்செய்ய முடியவில்லை. காரணம் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகுகூட பழைய ஏற்பாட்டின் மக்களாகிய அவர்கள் அவரைப் புறக்கணித்துக் கொலைசெய்தார்கள். அவர்களுடைய இருதயங்களை உருவக்குத்தும் வார்த்தைகளைப் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் பேதுருவை வழிநடத்தினார்: “பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்து நசரேத்து வாலிபனாகிய இயேசு நூறு சதவீதம் கர்த்தராகவே இருக்கிறார். அவர் மெய்யான இறைவனிடத்திலிருந்து வரும் மெய்யான இறைவன். நீங்கள் சிலுவையில் அடித்துக்கொலைசெய்தவரே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாயிருக்கிறார்.” இந்த வார்த்தைகளினால் யூதர்கள் தங்கள் வரலாற்றின் உச்சகட்டத்தை அவர்கள் கைப்பற்றத் தவறிவிட்டார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் அனைவரிலும் அதிக வெளிப்படையாகப் பேசும் தன்மையுடைய பேதுரு இங்கு அறிவிக்கின்றார். அவர்கள் இறைவன் தங்களோடு செய்த உடன்படிக்கையின் பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அதை மீறிவிட்டார்கள். சர்வ வல்லவரின் பெயரினால் பேதுரு இவ்வாறு யூத இன மக்களுடைய மனதைக் காயப்படுத்தினார். இவ்வாறு அவர்கள் மனிதனால் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாமல், இருதயங்களை ஊடுருவி ஆராயும் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டார்கள். ஆரம்பத்தில் சீடர்கள் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிறைந்ததைப் பார்த்த சில யூதர்கள் அவர்கள் குடிபோதையில் உளறுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். அவர்களுக்கு பேதுரு வாதத்தின் மூலமாக உண்மையைப் புரியவைக்காமல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களுடன் பேசினார். பரிசுத்த ஆவியானவர் யார் என்றும், அவர் எங்கிருந்து வருகிறார் என்றும், அவருடைய இருப்பிற்கான காரணம் என்ன என்றும் அவர் அவர்களுக்கு விளக்கினார். இறுதியாக, கிறிஸ்துவைக் கொலைசெய்ததே அந்த மக்களுடைய குற்றம் என்பதை அதிக கண்டிப்புடன் அவர்களுக்கு உணர்த்தினார். இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் செய்வதோ அல்லது பொய்யை சத்தியத்துடன் கலப்பதோ இல்லை என்ற உண்மையை நாம் காண்கிறோம். அவர் நம்முடைய கீழ்ப்படியாமையைக் கண்டித்து, நமது பெருமையை அழித்துப் போடுகிறார். இன்று நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டால் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள். விண்ணப்பம்: ஓ, பிதாவே, நாங்கள் உம்முடைய குமாரனைக் கொலை செய்ததில் எங்களுக்கும் பங்குண்டு என்பதால் நாங்கள் பாவிகளாயிருக்கிறோம். நீர் சிலுவையில் அறையப்பட்டதற்கு எங்கள் பாவங்களே காரணம். எங்களுடைய பாவங்களை மன்னித்து, அவற்றில் நாங்கள் மீண்டும் விழுந்துவிடாதபடி உம்முடைய பரிசுத்த ஆவியால் எங்களைச் சுத்தம்செய்யும். நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும் இரட்சகர் என்றும் அறிக்கை செய்து, அவருடைய அன்பின் வல்லமையினால் அவருடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறோம். கடினமான இருதயங்களை உணர்த்தி அவைகளை உம்மிடத்தில் திருப்பும். அவர்களுடைய உடைக்கப்பட்ட இருதயம் பிறகு குணமடையட்டும். கேள்வி:
|