Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- The Ten Commandments -- 05 Third Commandment: Do Not Take the Name of God in Vain

Previous Lesson -- Next Lesson

TOPIC 6: பத்து கட்டளைகள் - மனிதனை விழாது காக்க இறைவன் கட்டிய மதிற்சுவர்கள்

05 - மூன்றாவது கட்டளை: இறைவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக



யாத்திராகமம் 20:7
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
(யாத்திராகமம் 20:7).


05.1 - இறைவனுடைய திருப்பெயர்

படைத்தவராகிய இறைவனின்றி மனிதனால் வாழ முடியாது. மனிதன் இறைவனுடைய சாயலில் படைக்கப்பட்டவன், ஆனால் அவன் இறைவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். அப்போதிலிருந்து, மனிதன் இந்த உலகமாகிய பாலைவனத்தில் தான் தொலைத்துவிட்ட தன்னுடைய வீட்டை தேடிக்கொண்டு, மறைந்திருக்கும் தனது வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக்கொண்டு அலைந்து திரிகிறான். அப்போதிலிருந்து அவன் இறைவனுக்குப் பதிலாக பல்வேறு தெய்வங்களை உருவாக்கிவிட்டான். அவற்றின் கொடூர முகங்கள் அவனுக்குள் மறைந்திருக்கும் பயத்தையும் ஏக்கத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அவன் மந்திரவாதத்தையும், கைரேகை பார்ப்பதையும், குறிசொல்லுவதையும் நாடுகிறான். ஆனால் அவை எதுவும் அவனுக்குப் பாதுகாப்பை அருளுவதில்லை. கறுப்புக் கல்லுக்குள் பரலோகத்திலிருந்து வந்த ஆவி குடியிருப்பதைப் போல முஸ்லீம்கள் அதற்கு மரியாதையோடு முத்தமிடுகிறார்கள். பௌத்தர்கள் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தருடைய சிலையை வணங்குகிறார்கள். ஆனால் புத்தருடைய சிலையோ அறியாமையில் இருக்கும் தனது பக்தர்களைப் பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இறைவன் மனிதனைப் பார்த்து, “உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று சொன்னபோது மனிதனுடைய தேடல்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவர் எரிகிற முட்செடியில் தோன்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. ஏனெனில் அங்கு இறைவன் வெளிப்பட்டு தம்முடைய திருப்பெயரை அறிவித்தார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இறைவனைப் பற்றிய பல்வேறு வெளிப்பாடுகளை நாம் பார்க்கிறோம். வேதாகமம் திரியேக இறைவனுக்கு 638 பெயர்களையும் குணாதிசயங்களையும் கொடுக்கிறது. செமித்திய மொழிகளில் ஒவ்வொரு குணாதிசயமும் இன்னொரு பெயராகும். ஆகவே, இறைவன் நீதியுள்ளர் மட்டுமல்ல, அனைத்து நீதியும் அவரில்தான் தங்கித் தரித்திருக்கிறது. அவர் பரிசுத்தர் மட்டுமல்ல, அவரில்தான் அனைத்துப் பரிசுத்தமும் அடங்கியிருக்கிறது. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் அவருயை மகிமையின் கீற்றுகள். ஆனால் மற்ற அனைத்துப் பெயர்களைக் காட்டிலும் அதிகமான முறை இடம் பெற்றிருக்கிற பெயர் யாவே என்பதாகும் (பழைய ஏற்பாட்டில் மட்டும் 6,828 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது). இந்தப் பெயருக்கு வல்லமையுள்ளவராக இவ்வுலகத்தைத் தாங்குகிறவர், பரிசுத்தர், பழுதற்றவர், வரலாற்றின் இறைவன், அவரது உண்மைத் தன்மையில் எப்போதும் மாறாதவர் என்று அர்த்தம் ஆகும்.


05.2 - புதிய ஏற்பாட்டில் கர்த்தர்

புதிய ஏற்பாட்டில் கர்த்தரே நாசரேத்தூர் இயேசு என்ற நபராக மனுவுருவாகி வந்தார். தேவதூதர்களும், தீர்க்கதரிசிகளும், அனைத்து விசுவாசிகளும் “இயேசுவே கர்த்தர்” என்று ஏற்றுக்கொண்டு அறிக்கை செய்கிறார்கள். ஆயினும் இயேசு ஒருபோதும் தன்னை மகிமைப்படுத்தாமல், தம்முடைய பரலோக பிதாவையே மகிமைப்படுத்தினார். உண்மையில், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று விண்ணப்பிக்கும்படி அவரே நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்த விண்ணப்பத்தில் பிதாவினுடைய நாமம் அனைத்து நாமங்களுக்கும் மேலாக கனப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டு, பரிசுத்தம்பண்ணப்படுகிறது. இயேசுவின் மூலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற பிதாவாகிய இறைவனைக் குறித்த வெளிப்பாடு இறைவனைக் குறித்த மிகவும் உயர்தரமான அறிவை நமக்கு வழங்கியிருக்கிறது.

கர்த்தராகிய இயேசுவில் தாழ்மை மனுவுருவாகி வருவதை நாம் காண்கிறோம். அவர் தம்முடைய அவமானகரமான சிலுவை மரணத்தின் மூலமாக பரிசுத்தரையும் பாவிகள் அனைவரையும் ஒப்புரவாக்கும் பணியைச் செய்து முடித்திருக்கிறார். “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உணர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:9-11). அப்போதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவினுடைய பெயரை மகிமைப்படுத்துவதோடு, அவரே “கர்த்தர்” என்று நமக்கு உறுதியளிக்கிறார். அதேவேளையில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினுடைய ஒற்றுமையைப் பற்றியும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தாவீது ஏற்கனவே இந்த வெளிப்பாட்டைக் கேட்டிருக்கிறார். “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்” (சங்கீதம் 110:1).


05.3 - இறைவனுடைய திருப்பெயரை அறிதல் என்றால் என்ன?

ஒருவர் தான் அறியாத நகரத்திற்கு வரும்போது, தான் அறிந்த ஒருவருடைய முகவரி அவரிடத்தில் இருந்தால் அது அவருக்கு மகிழ்ச்சியான காரியமாயிருக்கும். அவரை அழைத்து சரியான வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். உண்மையான இறைவனுடைய பெயரை அறிந்து, அவருடைய “தொலைபேசி எண்ணை” வைத்திருப்பவர் மகிழ்ச்சியான நபர். “ஆபத்து நேரத்தில் என்னை நோக்கிக்கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50:15). உயிருள்ள நமது இறைவன் உறங்குகிறவர் அல்ல. அவர் நம்முடைய ஆவிக்குரிய தொலைபேசி அழைப்பிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் பரிசுத்த ஆவியானவரோடு இடைப்படும்போது, நமக்குப் பாவத்தோடு இருக்கும் ஈடுபாடு, நம்முடைய தனிமை மற்றும் இழந்துபோன தன்மை ஆகியவை தெளிவாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும். அவருடைய பரிசுத்தத்தின் மகத்துவம், நமது மேலோட்டமான ஒழுக்க வாழ்க்கை மற்றும் போலியான மனித நேயம் ஆகியவற்றை தோலுரித்துக் காட்டும். இறைவனுடைய நற்குணம் நம்முடைய பாவங்களை அறிக்கைசெய்யும்படி நம்மை உற்சாகப்படுத்தும். அவருடைய தாழ்மை நம்முடைய விஷமத்தனமான பெருமையை வெளிப்படுத்தும். இறைவனுடைய நாமத்தை அறிந்துகொள்வது உடைந்துபோன மக்கள் இறைவனோடு தனிப்பட்ட முறையில் உறவுகொள்வதை சாத்தியமாக்குகிறது.

நம்முடைய விசுவாசம் பெருகும்போது நாம் மூன்றாவது கட்டளையில் நிலைநிற்கிறவர்களாவோம். “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்பதில் “உங்கள்” என்ற பிரதிப்பெயர்ச் சொல் இறைவன் பாவிகளும், பெலவீனரும், குறைவுள்ளவர்களுமாகிய தமது படைப்புகளோடு பரிசுத்தராகிய இறைவன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. அவர்களிடத்தில் தாம் உண்மையுள்ளவராக இருந்து, அவர்களைப் பாதுகாப்பதாக அவர் நமக்கு உறுதியளிக்கிறார். புதிய ஏற்பாட்டின்படி அவர் நம்மை இறைவனுடைய குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்கிறார். தலையாகிய கிறிஸ்துவின் ஆவிக்குரிய உடலின் அங்கத்தவர்களாக நாம் செயல்படும்படி அப்படிச் செய்கிறார். தம்முடைய பிள்ளைகள் அனைவரும் ஒரே ஆவியும் ஒரே சிந்தையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் தான் அவர்கள் மூலமாக இந்த தீய உலகத்தை மீட்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அவர் தம்முடைய கிருபையினால், அவருடைய நாமத்தை நம்பி அந்த நாமத்தினால் செயல்படும் அதிகாரத்தை நமக்கு அவர் கொடுக்கிறார்.


05.4 - கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவது

வேதாகமத்தில் இறைவன் அருளிச் செய்திருக்கிற வெளிப்பாட்டினால் பாதிக்கப்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். ஆயினும் வெகு சிலரே இறைவனை முழு இருதயத்தோடு நம்புகிறார்கள். இறைவனுடைய பிரசன்னத்தில் ஒருவன் நிலைத்திராவிட்டால், அவன் இறைவனுடைய நாமத்தை வீணில் வழங்குகிறவனாகவே மாறிவிடுவான். அப்படிப்பட்ட மக்கள் இறைவனை செல்லாக்காசைப் போல பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்கூட தங்களுடைய வீணான பேச்சினால் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இறைவனுடைய பெயரைப் பயன்படுத்தும்போது கவனமாக சிந்திப்பதில்லை. மூன்றாவது கட்டளை இறைவனுடைய பெயரை நாம் வீணில் வழங்கக்கூடாது என்று நம்மை எச்சரிக்கிறது.

“கடவுளே” என்றும் “ஆண்டவரே” என்றும் பெயர்க்கிறிஸ்தவர்கள் இடைவிடாமல் இறைவனுடைய நாமத்தை உச்சரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் சிறுபிள்ளைகளைப் போல் இருக்கிறார்கள். சிறுபிள்ளைகள் தொலைபேசி மணி ஒலித்தவுடன் வேகமாகச் சென்று அந்த அழைப்பை எடுத்தாலும் பேசுகிறவர்களுக்கு அவர்கள் பதில் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் அடுத்த முனையில் இருப்பவர் மீண்டும் அந்த அழைப்பை மேற்கொள்ள மாட்டார். நீங்கள் இறைவனுடைய பெயரை உச்சரிக்கும்போது என்ன சிந்திக்கிறீர்கள்? நீங்கள் இறைவனுடைய பெயரை வீணிலே வழங்குகிறவராக இருந்தால் உங்கள் வாழ்வில் வெகு குறைவான பகுதியையே இறைவனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள் என்பதையே அது காண்பிக்கிறது.


05.5 - முஸ்லீம்கள் அல்லாஹ்வின் பெயரை உச்சரித்தல்

ஒரு முஸ்லீம் அல்லாஹ்வின் பெயரை அடிக்கடி உச்சரித்தால் அவர் நீதிமானாக்கப்படுவார், நீதியும், நம்பிக்கையும், உண்மையுமுள்ளவராகக் கருதப்படுவார் என்ற நம்பிக்கையினால் அவர் அப்படிச் செய்ய வேண்டும். அவர் எவ்வளவு அதிகமாக அல்லாஹ்வின் நாமத்தை உச்சரிக்கிறாரோ அவ்வளவுக்கு அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கருத்து அல்லாஹ்வின் பெயரை வீணாக உச்சரிக்கும் ஒரு தொழுகை முறையை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் ஒரு முஸ்லீமிற்கு இறைவனோடு தனிப்பட்ட உறவு இல்லை என்பதை நாம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அல்லாஹ்வின் பெயரை ஒரு முஸ்லீம் உச்சரிக்கும்போது அது ஒரு வேலைக்காரன் தனது முதலாளியின் பெயரைச் முணுமுணுப்பதைப் போன்றது. அல்லாஹ் அதைச் செவிகொடுத்துக் கேட்கிறாரா என்பதைக் குறித்த நிச்சயம் எந்த முஸ்லீமிற்கும் கிடையாது.

மேலும் அவர்களடைய அனுதின தொழுகை கட்டளையிடப்பட்ட சடங்குகள். ஒரு சராசரி இஸ்லாமியர் ஒரு நாளைக்கு தன்னுடைய ஐந்து வேளைத் தொழுகையின்போது ஃபாத்திஹாவை (சுரா அல்-ஃபாத்திஹா) பதினேழு முறை சத்தமாகவோ அமைதியாகவோ ஒப்புவிக்க வேண்டும். அராபிய உலகத்தில் வாழும் இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் ஃபாத்திஹாவை அரபியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் 80 சதவீதமானவர்களுக்கு அரபிய மொழி தெரியாது. அவ்விதமாக கர்த்தருடைய ஜெபமும் பல திருச்சபைகளின் ஆராதனை நேரங்களில் பொருளற்ற முறையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதும் வேதனைக்குரியதே.


05.6 - நிச்சயமற்ற விண்ணப்பங்களும் பயனற்ற வாதங்களும்

முஸ்லீம்கள் மட்டும் சடங்குரீதியாக சிந்திக்காமல் தொழுகைகளை ஒப்பிக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையைத் தூங்கச் செய்வதற்காக பாடும்போது எப்படி தான் பாடும் வார்த்தைகளின் மேல் சிந்தையின்றிப் பாடுகிறாளோ அதேபோல எண்ணற்ற கிறிஸ்தவர்களும் விண்ணப்பங்களைப் பொருளின்றி ஏறெடுக்கிறார்கள். இறைவனிடத்திலிருந்து பதிலை நாம் எதிர்பார்க்காமல் எப்படி நாம் அவரை நோக்கிக் கூப்பிடலாம். அல்லது வியாபாரத்தைப் பற்றி அல்லது முக்கியமற்ற காரியங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு இறைவனோடு எப்படி நாம் பேச முடியும்? உதாரணமாக, நாம் நமது நாட்டின் பிரதமரைச் சந்திக்கப் போகிறோம் என்றால் அவரோடு என்ன பேசப்போகிறோம் என்பதை வார்த்தைக்கு வார்த்தை முன்கூட்டியே சிந்தித்து ஆயத்தமாயிருப்போம் இல்லையா? மனிதனைக் காட்டிலும் இறைவன் நமக்கு முக்கியமானவர் இல்லையா? ஒருவன் சிந்திக்காமல் விண்ணப்பிக்கும்போது அவன் இறைவனை ஏளனம் செய்கிறான்.

சில இறையியலாளர்கள் வேதாகமத்தைப் படித்து, இறைவனுடைய குணாதிசயங்களையும் அவருடைய அற்புத செயல்களையும் பற்றிப் பேசும்போது, அவருடைய பிரசன்னத்தை உணராமல், ஏதோ ஒரு அறிவியல் கருத்தைப் பற்றிப் பேசுவதுபோல பேசுவதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தி, மூன்றாவது கட்டளையை மீறுகிறார்கள். இறைவனைப் பற்றி நாம் முற்றிலும் அகவயப்பட்ட நிலையில் நடுநிலையாக இருந்து பேச முடியாது, காரணம் அவர் ஒரு வெறும் கருத்து அல்ல. அவர் உயிருள்ள நபராக எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவர் நம்முடைய பேச்சுக்களைக் கேட்கிறார், தூரத்திலிருந்து நம்முடைய சிந்தனைகளை அறிகிறார். இறைவனுக்குப் பயப்படும் பயத்துடன் மேற்கொள்ளப்படாத எந்த இறையியல் படிப்பும் மூன்றாவது கட்டளையை மீறுவதாகவே அமையும்.


05.7 - இறைவனுடைய கட்டளையைப் பாவமான முறையில் பயன்படுத்துவது

இறைவனுடைய வார்த்தையை வேண்டும் என்றே திரித்துப் போதிக்கிறவனுக்கு, அதை அவமதிப்பவனுக்கு அல்லது அதைப் பரிகசிப்பவனுக்கு ஐயோ! அனைத்து நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவன் தவறாகப் பயன்படுத்துவதோடு, இறைவனைக் குறித்த பயமோ மரியாதையோ அவனிடத்தில் கொஞ்சமும் இல்லை. இறைவனுடைய வார்த்தையைப் பற்றி நக்கல் செய்கிறவர்களோடு சேர்ந்து நாம் சிரிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக நாம் அந்த பரியாசக்காரரை எச்சரித்து இறைவனுடைய நாமத்திற்காக நிற்க வேண்டும். இறைபக்திக்குரிய வார்த்தைகளின் மாபெரும் தாக்கத்தை அறிந்திருக்கிறபடியால் எழுத்தாளர்களும் திரைக்கதாசிரியர்களும் அவற்றை தங்கள் எழுத்துக்களில் பயன்படுத்துகிறார். ஆனால் அவர்கள் “பாவம்”, “நரகம்” மற்றும் “அழிந்துபோதல்” ஆகிய வார்த்தைகளை அவற்றின் எழுத்தின்படியான பொருளில் பயன்படுத்தாமல், அவற்றிற்கு இவ்வுலகத்திற்குரிய பொருள் கொடுக்கிறார்கள். அவர்களுடைய சொந்த வார்த்தைகளே அவர்களிடத்திற்குத் திரும்ப வந்து அவர்களை நியாயம் தீர்க்கும்.

மக்கள் கோபப்படும்போது மற்றவர்களைச் சபிக்கையில் இயேசு அல்லது அல்லாஹ் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் அல்லது வேறு இறைபக்திக்குரிய காரியங்களை சிந்திக்காமல் பேசுகிறார்கள். ஒரு செங்கல் தொழிலாளி இறைவனுடைய நாமத்தைப் பயன்படுத்தி சபிக்கும்போது, அவனுக்கருகில் இருந்த ஒரு போதகர், “நீ இவ்வளவு சத்தமாகவா விண்ணப்பிக்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார். புரியாத அந்தத் தொழிலாளி “நான் எப்போது விண்ணப்பித்தேன்?” என்று பதில்கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்தப் போதகர், “நீ இறைவனுடைய திருப்பெயரைப் பயன்படுத்தும்போது அவர் உனக்கு நிச்சயமாக பதில் தருவார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். அந்தத் தொழிலாளியின் வழியிலேயே சென்று அவனுடைய தவறு அவனுக்கு உணர்த்தப்பட்டது.

மக்கள் கடுமையாக மற்றவர்களைத் திட்டுகிறவர்களாகவும் தங்கள் சொந்தக்காரர்ளையும் சபிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஆழமான வெறுப்பு அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட சாபங்களில் மனிதர்களில் இருக்கிற இறைவனுடைய சாயலைப் பாதிப்பதால் அவற்றை இயேசு கொலைக்குச் சமமாகக் கருதினார்.


05.8 - இறைவனுடைய எச்சரிப்பு: கடுமையான தண்டனை

“கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனை கர்த்தர் நிச்சயமாகத் தண்டிப்பார்” என்ற கடுமையான எச்சரிக்கையை மூன்றாவது கட்டளை முன்வைக்கிறது. இவ்வாறான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், பலர் தீமையான செயல்களை மறைப்பதற்கு இறைவனுடைய நாமத்தைப் பயன்படுத்துவதோடு, தங்களுடைய அநீதியான செயல்களையும் அவருடைய திருப்பெயரால் மனப்பூர்வமாக நியாயப்படுத்துகிறார்கள். தன்னுடைய பொய்யையும் மாய்மாலதையும் மறைப்பதற்கு ஆண்டவருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனுக்கு ஐயோ! தற்காலத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்பாதவர்களாக இருக்கிற காரணத்தினால் இறைவனுடைய திருப்பெயரால் பேசும்போதும் அவர்கள் உண்மையைச் சொல்வதில்லை. ஆகவே, நாம் சத்தியம் செய்யக்கூடாது என்று இயேசு குறிப்பாகத் தடைசெய்கிறார். உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையாக இருக்கும் என்று சொல்கிறார் (மத்தேயு 5:37). நாம் சத்தியம் செய்து பொய் சொல்லும்போது மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, இறைவனிடத்திலும் பொய் சொல்கிறவர்களாயிருக்கிறோம். கர்த்தருடைய நாமத்தை வீணிலே வணங்கக்கூடாது என்று எச்சரிக்கும் மூன்றாவது கட்டளைக்குக் கீழாகவே பொய்ச்சத்தியம் செய்யக்கூடாது என்ற கட்டளையும் அடங்குகிறது. அதனால்தான் வேதாகமம், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று கூறுகிறது. நாம் பாவத்திற்குள் விழுந்து விடாதபடி கர்த்தருக்குப் பயப்பட வேண்டும்.

இறைவனை அறிந்திருக்கிற ஒருவன் தன்னுடைய துன்ப நேரத்தில் அவரை நோக்கிக் கூப்பிடாமலும், அவருடைய வழிநடத்துதலை நாடாமலும், ஆண்டவருடைய நாமத்தை வீணிலே வழங்கி, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ் காலத்தையும் வெளிப்படுத்துவதாகக் கூறும் ஜாதகம் பார்க்கிறவர்களை அவர் வெறுக்கிறார் (உபாகமம் 18:9). “அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனை தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்” (லேவியராகமம் 20:6). இறந்தவர்களுடன் தொடர்புகொண்டு, செய்திகளைப் பெற்றுக்கொள்வது தடைசெய்யப்படுகிறது. நாம் பாவம் செய்யும்போது அது மனிதர்களை இறைவனிடத்தில் இருந்து பிரித்து தீய ஆவிகளுக்கு வழியை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட காரியம் இறைவனுடைய பார்வையில் விபச்சாரத்திற்கு இணையாக இருக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய மனைவிக்கு உண்மையில்லாமல், தனது மனைவியைவிட்டுவிட்டு, தன்னுடைய பணத்தை விபச்சாரிகளிடத்தில் செலவு செய்யும் பாவத்தைப் போல இதுவும் கொடியது. இப்படிப்பட்ட பாவங்களை ஆவிக்குரிய விபச்சாரம் என்றும் இந்த சந்ததியை விபச்சார சந்ததி என்றும் இறைவன் கூறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள மக்கள் தீமையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தாயத்துப்போன்ற பலவற்றை அணிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வியாபாரங்களில் வெற்றியைப் பெறுவதற்கும் தம்பதிகளுக்கிடையில் அன்பைத் தூண்டுவதற்கும் தகடுகளில் சில மந்திரங்களை எழுதிவைத்துக்கொள்கிறார்கள். இந்தக் காரியங்களைச் செய்கிறவர்கள் உண்மையில் இறைவனை நம்புவதில்லை. சில நாடுகளில் ஜாதகம், மூடநம்பிக்கைகள், ஆவியுலகத்துடன் பேசுதல் போன்ற காரியங்களை தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்கிறார்கள். இந்தவிதமான நிகழ்ச்சிகள் தெளிந்த புத்தியற்ற பார்வையாளர்களுக்கு எதிரான சாத்தானுடைய தாக்குதல்கள் என்றே கிறிஸ்தவர்களாகிய நாம் பார்க்கிறோம். அவைகள் நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுகின்றன. அவைகள் இறைவனை விட்டு மனிதர்களைப் பிரிக்கும் காரியங்கள் என்பது தௌவாக இருப்பதால், இந்த ஆபத்துக்கள் அனைத்திற்கும் எதிராக ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார். அப்படிப்பட்ட மக்களை இயேசு மட்டுமே விடுதலை செய்ய முடியும். ஜாதகங்களை வாசித்தல், கைரேகை பார்த்தல், சித்துவிளையாட்டுகள் மூலம் ஆவிகளை வரவழைத்தல் ஆகியவை நரகத்திற்குச் செல்வதற்கான குறுக்கு வழிகள். இந்தியாவில் இருக்கும் பயணியர் தங்கும் ஹோட்டல்களில் வருகிற ஒவ்வொரு நபருக்கும் அவருடைய எதிர்காலத்தை முன்னறிவிக்கும் ஜாதகக்காரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண் பார்வையினால் ஏற்படும் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கென்று கண்களில் அம்புகள் ஊடுருவுவதுபோன்ற படங்களையும் வரைகிறார்கள். சிலர் தங்கள் கார்களில் இந்தத் தாயத்துக்களைக் கட்டுவதாலும், சில மிருகங்களுடைய பற்கள் முதலானவற்றைத் தங்கள் வீடுகளில் தொங்கவிடுவதாலும், மரங்களைத் தொடுவதாலும் தீமைகளில் இருந்து தப்பித்து விடலாம் என்று கருதுகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தங்கள் பரலோக தகப்பனாகிய இறைவனிடத்தில் நம்பிக்கை வைக்காமல், அந்தகாரத்தின் சக்திகளின்மேல் அதிகம் நம்பிக்கை வைக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளினால் அவர்கள் இந்தக் காலத்தின் சக்திக்கு அடிமைகளாயிருக்கிறார்கள்.


05.9 - இறைவனை நிந்தித்தல்

இறைவனுடைய பெயரையும் அவருடைய கிறிஸ்துவின் பெயரையும் வெளிப்படையாகவே தாங்கள் சத்தியம் செய்யும்போது பயன்படுத்துகிறவர்கள் வரம்புமீறி செயல்படுகிறார்கள். அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடைய நாமத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்களோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். சாத்தான் இறைவனுடைய பழைய எதிரியாவான். இறைவனுக்கு எதிரான நிந்தனையான வார்த்தைகளைக் கூறுவது நரகத்திலிருந்து புறப்பட்டுவரும் அசுத்த நீரோட்டத்தைப்போல பிசாசின் செய்கைகளுக்கு ஒப்புக்கொடுக்கும் செயலாகும். கிறிஸ்துவின் திருப்பெயர் சபிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு நீண்ட கடிதத்தை ஒருவன் வாசிக்க நேர்ந்தால், அவனுடைய முகத்தில் நரகத்தின் வாசனையை அவன் உணர முடியும். லேவியராகமம் 24:14-16-ல் இவ்விதமாக நாம் வாசிக்கிறோம்: “தூஷிக்கிறவனைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின் மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள். மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறிய வேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்பட வேண்டும்”.

நாம் இறைவனுடைய நாமத்தை நிந்திக்கிற ஒருவனைப் பற்றி நாம் பேசும்போது அல்லது அவனை நியாயம் தீர்க்கும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிசாசு பிடித்த பலர் தாங்கள் இறைவனுக்கு சேவை செய்வதாக நினைத்தாலும் உண்மையில் அவர்கள் இறைவனுக்கும் அவருடைய மேசியாவிற்கும் எதிராக போராடுகிறார்கள் என்பதை காண முடியாத குருடர்களாக இருக்கிறார்கள் (யோவான் 15:19-21; 16:1-3). இயேசு இறைவனை நிந்தித்தார் என்று குற்றஞ் சுமத்தித்தான் அவருடைய காலத்தில் இருந்த ஞானமும் பக்தியும் உள்ள தலைவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள். அவர்கள் ஆவிக்குரிய தலைவர்களாக இருந்தபோதிலும் உயிருள்ள இறைவனுடைய ஒரே மகன் இயேசுதான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் இறைவன் மீது கொண்டிருந்த வைரக்கியத்தினால் அவர் அபிஷேகம் செய்த மேசியாவை நிந்தித்தார்கள். அவருடைய முகத்தில் துப்பி அவருடைய தலையில் அடித்தார்கள். பழம்பெரும் இந்த மக்களுடைய தலைவர்களாகிய இவர்கள் தங்கள் நடுவில் வந்திருந்த தங்கள் ஆண்டவரை அறிந்துகொள்ளவும் இல்லை அவரை ஏற்றுக்கொள்ளவுமில்லை. அவர்கள் அவரைப் புறக்கணித்துச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்களில் பலர் இன்றும் அவரைப் புறக்கணிக்கிறார்கள்.

யாக்கோபின் பிள்ளைகளாகிய இவர்களைப் போலவே, கிறிஸ்துவின் தெய்வீகத்தையும் அவருடைய சிலுவை மரணத்தையும் நம்புகிறவர்கள் இறைவனை நிந்திக்கிறார்கள் என்று முஸ்லீம்களும் நம்புகிறார்கள். யூதர்களுடைய இந்த நியாயமற்ற வெறுப்பை அவர்களும் பெற்றிருப்பதோடு, திரியேக இறைவனை நம்புவதற்கு எதிராகப் போராடுகிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட இறைமகனுக்கு எதிரான கடும் எதிர்ப்பை அவர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறார்கள். திரித்துவ உபதேசத்திற்கு எதிரான தங்கள் வெறுப்பின் நிமித்தமாக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக நிந்தனையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதே வேளையில் இயேசுவை பல தெய்வங்களில் ஒன்றாகக் கருதுவதன் மூலமாக இந்து மார்க்கம் கிறிஸ்துவின் தனித்துவமான அதிகாரத்ததைப் புறக்கணிக்கிறது.

பின்மாற்றமடைந்த சில கிறிஸ்தவர்கள் தங்கள் இறை நிந்தனையில் சாத்தானையே தொழுதுகொள்ளும் அளவுக்குச் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆராதனைகளில் காட்டுத்தனமான விருந்துக்களை கொண்டாடுவதோடு, சாத்தானுக்கு இரத்த பலிகளையும் செலுத்துகிறார்கள். அவர்கள் சாத்தானைத் தொழுதுகொள்ளும்போது, கர்த்தருடைய ஜெபத்தின் வார்த்தைகளையே திரித்து சாத்தானுக்கு உகந்தவாறு பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவில் உள்ள இரட்சிப்பைப் புறக்கணிக்கிறவர்களை அந்தகாரத்தின் வல்லமை இவ்விதமாகத்தான் பிடிக்கும்.

நரகத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழி கிறிஸ்துவில் உண்டு. நம்முடைய நல்ல மேய்ப்பன் இப்படிச் சொல்கிறார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்கிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:27-30).

யூதர்கள் மூன்றாவது கட்டளையை மிகவும் கவனமாகக் கைக்கொள்ள நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் இறைவனுடைய மகத்துவமான திருப்பெயரை தவறுதலாகவோ, பெருமையுடனோ பயன்படுத்துவதற்கு அஞ்சுகிறார்கள். YHWH என்ற நான்கு எழுத்துக்கொண்ட வார்த்தையே இறைவனைக் குறிக்கும் வார்த்தை என்பது நாம் அனைவருக்கும் தெரியும். கி. பி. 300-வது வருடத்தில் இருந்து, பரிசுத்தமான எழுத்துக்கள் கொண்டதாக அவர்கள் கருதிய வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வேதாகமத்தை வாசிக்கும்போது “அதோனாய்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். “அதோனாய்” என்ற வார்த்தையில் உள்ள உயிரெழுத்துக்களை எடுத்து YHWH என்ற வார்த்தையில் சேர்த்து மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் “யெகோவா” என்ற வார்த்தை ஆகும். 1520-களில்தான் இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. இந்த வார்த்தை ஆரம்பத்தில் “யாவே” என்றுதான் உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இது, நாம் இறைவனுடைய திருப்பெயரை உச்சரிக்கலாமா என்ற கேள்வியை கேட்கத் தூண்டுகிறது. இந்தக் கட்டளையை மீறாமல் நாம் எவ்வாறு இறைவனுடைய திருப்பெயரைப் பயன்படுத்தலாம்?


05.10 - இறைவனுடைய திருச்பெயரைச் சரியாகப் பயன்படுத்துதல்.

இறைவனுடைய பெயரைச் சரியாகப் பயன்படுத்துவதை மூன்றாவது கட்டளை தடைசெய்யவில்லை. “விசுவாசத்தோடும், அன்போடும், நன்றியுணர்வோடும் இறைவனுடைய நாமத்தைப் பயன்படுத்தும்போது அதை நாம் வீணாகப் பயன்படுத்தபடுவதாக கருதவேண்டியதில்லை”. உங்கள் விசுவாசத்தின் சாட்சியை உங்கள் நண்பர்களுடைய மறுவாழ்வுக்கும் பாவமன்னிப்புக்கும் ஏதுவாக இறைவன் பயன்படுத்துவார். நம்முடைய விருப்பத்தின்படியும் சித்தத்தின்படியும் இறைவனுடைய திருப்பெயரைப் பயன்படுத்தி சித்து வேலைகளை நாம் செய்ய முடியாது. உயிருள்ள ஆண்டவர் தம்முடைய முன்னறிவின்படியும் திட்டத்தின்படியும் தம்முடைய திருப்பெயரால் செயல்படுகிறார். “நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்துநட” என்று பேதுரு முடவனைப் பார்த்துக் கூறினார். அதன் பிறகு மூப்பர்களையும் மக்களின் தலைவர்களையும் அவர் பார்த்து, “இவன் நசரேயனாகிய இயேசுவின் நாமத்தினாலே உங்களுக்கு முன்பாக நிற்கிறான்” என்று சொன்னார் (அப். 3:6,16; 4:10). இயேசுவின் திருப்பெயரையும் அதன் வல்லமையையும் குறித்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சிலேற்றர் என்ற ஒரு புகழ்பெற்ற இறையியலாளர் புதிய ஏற்பாட்டின் கிரேக்கப் பாடம் முழுமையையும் மனப்பாடம் செய்திருந்தார். ஆனால் அவருடைய வாழ்வின் இறுதியில், “நாம் இயேசுவை அறிந்திருக்கிறோமா?” என்ற நூலை எழுதினார். நாம் இயேசுவைப் பற்றி அக்கறையற்ற முறையில் பேசாமல், அவரை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நாம் விண்ணப்பத்தோடு அவருடைய வார்த்தையைக் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வோம். நாம் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் நம்முடைய இருதயத்தில் தியானித்து, ஆழமாகப் பதியச் செய்துகொள்ளும்போது, அவற்றின் மூலமாக இறைவன் நம்முடைய இருதயத்தில் பேசுவார்.

வேதாகமத்தின் அனைத்து அதிகாரங்களையும் வசனங்களையும் மனப்பாடம் செய்வோமானால், நாம் இயேசுவுக்குச் சிறந்த சாட்சிகளாக இருக்க முடியும், ஏனெனில் இறைவனுடைய வார்த்தை வல்லமையுள்ளதாகவும் பரிசுத்த ஆவியின் ஞானத்தை நமக்குக் கொடுக்கிறதாகவும் இருக்கிறது. தங்களுடைய ஆழ்மனதையும் நினைவுகளையும் இறைவனுடைய வார்த்தையினால் நிரப்புகிற ஆண்களும் பெண்களும் பாக்கியவான்கள். மேலும் விசுவாசிகளுடைய சாட்சிகளும், முதிர்ந்த இறைமக்களுடைய வாழ்க்கை வரலாறுகளும் இறைவனுடைய திருப்பெயரையும் அவரது திருப்பணியையும் மென்மேலும் அறிந்துகொள்ளவும் நம்முடைய விசுவாசத்தில் பெலப்படவும் உறுதுணையாக அமையக்கூடியவைகள்.

நாம் இறைவனுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது, நாம் தனிமையாக இருப்பதில்லை. ஆனால் இறைவனை நாம் மேலும் மேலும் அறிந்துகொள்கிறோம். நாம் அவருடைய நாமத்தை அறிந்திருக்கிற காரணத்தினால் அவரை நாம் நேரடியாக அழைக்க முடியும். அவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் நம்முடைய விண்ணப்பத்தில் அவருக்கு பதில் சொல்கிறோம். நம்முடைய பாவம், வியாதிகள், பிரச்சனைகள், உபத்திரவங்களின்போது நம்மைப் படைத்தவரிடத்தில் பேசுவதும் அவர் நமக்குச் செவிகொடுப்பதும் எவ்வளவு பெரிய சிலாக்கியம். அவருடைய ஆலோசனை ஒரு மருத்துவருடைய ஆலோசனையைக் காட்டிலும், ஒரு மனோதத்துவ அறிஞருடைய ஆலோசனையைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கிறது. நம்முடைய உலகத்திற்குரிய தகப்பனைக் காட்டிலும் அவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் கிருபாதார பலியின் காரணமாக அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்வதன் மூலமாக நிலைவாழ்வின் நன்மையை அவர் நமக்கு அருளுகிறார்.


05.11 - நம்முடைய முழு இருதயத்தோடும் முழு மனதோடும் நாம் அவரைத் துதிக்க வேண்டும்.

நாம் உண்மையிலேயே இறைவனைத் துதித்து, முழு இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துகிறோமா? எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார் என்பதையும், அவருடைய ஒரே பேறான குமாரன் நம்முடைய மீட்பராக இருக்கிறார் என்றும், பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்தி, எப்போதும் ஆறுதல் அளிப்பவராகவும் இருக்கிறார் என்றும் நாம் நினைத்துப் பார்த்து, நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். பயத்தோடும் நடுக்கத்தோடும் அவருக்கு ஆராதனை செய்வதற்குப் பதிலாக, அவருடைய பிள்ளைகளாக அவரது செயல்களில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். ஏனெனில் அவைகளில் நமக்கு நம்பிக்கையும் முழுமையடந்த மீட்பும் இருக்கிறது. நாம் இனிமேல் பாவத்தில் மரணமடைந்தவர்களாக இருக்க வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவில் என்றென்றும் உயிருள்ளவர்களாயிருக்கிறோம். நீங்கள் பாடல் குழுவோடு பாட முடியாவிட்டாலும், தனிமையாகப் பாட முடியும், உங்கள் உதடுகளால் பாட முடியாவிட்டாலும் உங்கள் உள்ளத்தில் நீங்கள் பாடலாம். யாரெல்லாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தைரியமாகப் பேசி விண்ணப்பங்களையும் மகிழ்ச்சி நிறைந்த துதிகளையும் ஏறெடுக்கிறார்களோ, அவர்கள் வல்லமையுள்ள இறைவனைக் கனப்படுத்தி, அவருக்குத் துதிசெய்வதன் மூலமாக அவரைப் பிரியப்படுத்துகிறார்கள்.

யாரேனும் இறைவனை அறியாதவராக இருந்தாலோ அல்லது மறைவான பாவங்களினால் மனசாட்சியில் குற்ற உணர்வடைந்து, அல்லது இருதயம் கடினப்பட்ட நிலையில் இருந்தலோ அவர் பேதுருவின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். “கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்” (அப்போஸ்தலர் 2:21) என்று அவர் கூறுகிறார். நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிதாவாகிய இறைவனை நோக்கிக் கூப்பிடும் போது அவர் நமக்கு பதில் தருகிறார். இது எத்தனை பெரிய சிலாக்கியம்! நாம் இறைவனிடத்தில் கிட்டிச் சேர்கிறோம், அவரும் நம்மிடத்தில் நெருங்கி வருகிறார். “எங்கள் பிதாவே” என்ற இறைவனுடைய திருப்பெயர் அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற அனைத்து பரலோக ஆசீர்வாதங்களையும் நமக்கு உறுதி செய்கிறது. இயேசு பாவம், மரணம், பிசாசு ஆகியவற்றை மேற்கொண்ட காரணத்தினால் அவருடைய நாமம் நரகத்தின் அஸ்திவாரங்களையே அசைக்கிறது. பரிசுத்த ஆவியானவர் குமாரனுடைய நாமத்தில் நித்திய வாழ்வையும் இறைவனுடைய தனிச்சிறப்பான பெலத்தையும் கொடுக்கிற காரணத்தினால் அவர் இறைமகனை மகிமைப்படுத்துகிறார். அவர் பாதுகாப்பையும் பரிசுத்தத்தையும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கிறார். அனுதினமும் சூரியன் தன்னுடைய கதிர்களை பூமிக்கு அனுப்புவதைப் போல, இறைவனும் திரியேக நாமத்தில் கிருபையின் மேல் கிருபையைப் பொழிகிறார். பிதாவிற்கு நன்றி செலுத்தாமலும், குமாரனைத் துதியாமலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே விண்ணப்பஞ் செய்யாமலும் இருக்கக்கூடியவர்கள் யார்? ஆண்டவருடைய ஆறுதலின் ஆவியானவருக்கு உங்களைத் திறந்துகொடுங்கள், அப்போது இறைவன் உங்களுடைய விண்ணப்பங்களுக்கு எப்படி பதில் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். பிதா ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இயேசுவின் நாமத்தினால் அவருக்கு உங்கள் துதிகளைச் செலுத்துங்கள். அவர் உங்களை நேசித்து, மீட்டுக்கொண்டு, உங்களுங்கு நிலை வாழ்வைக் கொடுத்திருக்கிறபடியால், அவருக்கு நன்றி சொல்லி, துதி செலுத்துங்கள்.


05.12 - மற்றவர்களுக்கான விசுவாசத்தின் சாட்சி

ஒருவனுடைய உள்ளம் துதியினாலும் நன்றியினாலும் நிறைந்திருக்கும்போது அவனால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? அனைத்து மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் என்பதை அறிந்துள்ள ஒருவன் தன்னுடைய இரட்சிப்பின் அனுவத்தை எப்படி தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள முடியும்? தொலைந்து போனவர்களைச் சந்திக்க வேண்டும் என்பது நாம் விரும்பினால் செய்யக்கூடிய ஒரு காரியம் அல்ல, நாம் எங்கும் சென்று அவருடைய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பது கர்த்தராகிய இயேசுவின் கட்டளை. இயேசு கிறிஸ்துவின் வெற்றியும் அவருடைய மேன்மையும் எங்கும் அறிவிக்கப்பட வேண்டும். அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்விதமாகக் கூறுகிறார்: “உங்களில் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). இயேசு கிறிஸ்துவும் இவ்விதமாக நம்மை எச்சரிக்கிறார்: “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (மத்தேயு 10:32-33).

இறைவனுடைய எதிரிகளுடைய தாக்குதல்களினால் அப்போஸ்தலனாகிய பவுல் சோர்வடைந்திருந்தபொழுது, இரவிலே கர்த்தர் அவருக்குக் காட்சியளித்து அவரை இவ்விதமாக ஆறுதல்படுத்தினார்: “இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.” (அப்போஸ்தலர் 18:9-10). மேலும் கர்த்தர் பவுலுக்கு இவ்விதமான உறுதியைக் கொடுத்தார்: “உன்சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்தில் அனுப்புகிறேன் என்றார்” (அப்போஸ்தலர் 26:17-18).

கர்த்தராகிய இயேசு உயிர்தெழுந்த அந்த நாளின் மாலையில் பயந்துபோய் தங்களுடைய அறைக் கதவுகளை மூடிக்கொண்டிருந்த தம்முடைய சீடர்களுக்கு இயேசு தம்முடைய தெய்வீக அதிகாரத்தை வழங்கி, “பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்று சொன்னார். அவர் இவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திய பிறகு, அவர்கள் மீது ஊதி: “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கபடாதிருக்கும்” என்றார் (யோவான் 20:21-23). இந்த வசனங்களை உங்கள் மனதில் வைத்து, தியானிப்பீர்கள் என்றால், உங்களை எதிர்க்கும் அவிசுவாசிகள் நடுவிலும் இழந்துபோன மக்கள் நடுவிலும், நீங்கள் சிறப்பாக சாட்சி பகரும்படி இறைவன் உங்களைப் பலப்படுத்தி, வழிநடத்துவார்.


05.13 - ஆண்டவருடைய நாமத்தினால் சேவித்தல்.

ஆண்டவர் தம்முடைய வார்த்தையின் மூலமாக நம்முடன் பேசும்போதும், விண்ணப்பத்திலும் துதியிலும் நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய பரிசுத்த நாமத்தை நம்முடைய நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் முன்பாக அறிக்கை செய்யும் போது, அவருடைய நாமத்தின் அதிகாரத்தை நாம் அனுபவிப்போம். அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்தினால் நோயாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்தி, மரணமடைந்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள். இயேசு தம்முடைய வார்த்தையினாலே புயலையும் கொந்தளிக்கும் கடலையும் அமைதலாக்கினார். அவர் ஐந்து அப்பங்களை ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொடுக்கும்படி பெருகப்பண்ணினார். மனந்திரும்பிய பாவிகளுடைய பாவங்களை அவர் மன்னித்து, அவர்களுக்கு நிலை வாழ்வைக் கொடுத்து ஆசீர்வதித்தார். “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார்; நானும் கிரியை செய்துவருகிறேன்” என்று அவர் சொன்னார் (யோவான் 5:17). நாம் அவருடைய நாமத்தில் பேசுவது மட்டுமல்ல, நம்முடைய பெலவீனத்தின் மூலமாக அவர் செயல்படுகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஒருவருடைய இருதயத்தில் வாழும்போது, அவருடைய வாழ்வின் மூலமாக இறைவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறார். அவருடைய பிள்ளைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் பிதாவே பணிகளைச் செய்து முடிக்கிறார்.

உண்மையான பலனளிக்கிற சாட்சி உண்மையான விசுவாசிகளுடைய வாழ்க்கையின் மீதுதான் கட்டப்படுகிறது. நாம் இறைவனைத் துதிக்கிறோம், அதே வேளையில் அவருக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நாம் பரிசுத்த வாழ்க்கை நடத்தும்படி நம்மைத் தூண்டுகிறார், ஏனெனில் அவரே பரிசுத்தமுள்ள இறைவனாக இருக்கிறார். இறைவனுடைய நாமத்தை நம்முடைய வார்த்தைகளினாலும் வாழ்க்கையினாலும் “பரிசுத்தப்படுவதாக” என்று விண்ணப்பிக்க அவர் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இறைவனுடைய வல்லமையை மறுதலித்து, உண்மையான தாழ்மையை நமக்குக் காண்பிக்காத வாழ்க்கை வாழ்வோமானால் நம்முடைய விண்ணப்பங்கள் பொய்யானவைகளாகவும் நம்முடைய சாட்சி உண்மையற்றதாகவும் இருக்கும்.

நம்முடைய சித்தத்திற்கு எதிராக நாம் பாவம் செய்தாலும், பரிசுத்தருடைய சமூகத்திற்கு முன்பாக நாம் நொறுங்கிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய பாவங்கள் இறைவனுடைய சமூகத்தில் சாதாரண காரியங்கள் அல்ல. அவை இறைவனைத் துக்கப்படுத்துபவை என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனந்திரும்பிய ஒவ்வொரு பாவியினுடைய மனதிலும் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்து, அவனுக்கு ஆறுதல் அளித்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அனைத்துப் பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்ற நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்கிறார் (1 யோவான் 1:19). திரித்துவ இறைவனுடைய நாமத்தின் மீது நம்பிக்கை வைத்து, வாழும்படி பிதாவினுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் இறைவனுடைய நீடிய பொறுமையினாலும் மாறாத அன்பினாலும் பரிசுத்தமாகுதலைப் பெற்று அனுபவிக்கிறோம்.

நீங்கள் இறைவனுடைய திருப்பெயரை உண்மையில் அறிந்து உணர்ந்துகொண்டிருக்கிறீர்களா? அவருடைய பரிசுத்த நாமம் உங்கள் உதட்டில் இருக்கிறதா? கர்த்தருடைய ஆவியானவர் உங்கள் இருதயத்தில் வாழ்கிறாரா? அப்பொழுது மட்டுமே நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அன்புடனும் மரியாதையுடனும் சரியாகப் பேச முடியும். நீங்கள் ஆண்டவருடைய நாமத்தை வீணில் வழங்காமல், உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு அவரைத் துதிக்கும்படி அவர் உங்களை வழிநடத்துவாராக.

www.Waters-of-Life.net

Page last modified on March 16, 2015, at 12:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)