Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)
அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)ரோமர் 1:2-4 நைல்நதி வறண்டு போன நிலப்பகுதிகளை மென்மைப்படுத்தி, செழுமையடையச்செய்து, கனிநிறைந்தவைகளாய் மாற்றுவதைப் போல, நற்செய்தியும் விசுவாசிகளுக்கு வல்லமையை வழங்கி, அவர்களை கனி நிறைந்தவர்களாக, சந்தோஷம் மிகுந்தவர்களாக மாற்றுகிறது. இயேசு கிறிஸ்துவின் வருகை மற்றும் செயல்பாடு தான் நற்செய்தியின் மிகப்பெரும் இரகசியம் ஆகும். நீங்கள் ஒரு புத்தகத்தை அல்ல, மாறாக, சரித்திரப்பூர்வமான, காலம் கடந்து நிற்கும் ஒரு பண்பாளர் மீது நம்பிக்கை வைக்கும்படி அழைக்கப்படுகிறீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இறைவன் தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னுரைத்தார். இறைவனின் ஆவியால் ஒரு மனிதன் பிறப்பார். அது கன்னிகைப் பிறப்பாக இருக்கும். அவருடைய பெயர் இறைவனின் ஒரேபேறான குமாரன் என்பதாகும். இந்த நிகழ்வைக் குறித்த தீர்க்கதரிசனங்களால் தோரா நிறைந்து காணப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு உண்மையான தீர்க்கதரிசியும், கிறிஸ்துவே இறைவனின் குமாரன் என்பதை தங்களுடைய செய்தியில் அறிக்கையிடுகிறார்கள். நமது ஆரோக்கியமற்ற சிந்தனைகளை மாற்றவும், ஆழமான உண்மைகளுக்குள் நம்மை கொண்டு செல்லவும், ஒரே தன்மையோடு, பரிசுத்த திரியேகராக தன்னை வெளிப்படுத்தும் இந்த பரிசுத்தமுள்ள இறைவனை யார் எதிர்த்து நிற்க முடியும்? கிறிஸ்து வந்ததின் நிமித்தம் நம் இறைவன் இரக்கமுள்ளவர், அன்புள்ள பிதா என்று அறிந்துகொள்கிறோம். இரக்கமுள்ள குமாரனின் சாயல் நமக்கு இறைவனைக் குறித்த புதிய பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. இறைவன் அன்பாக இருக்கிறார். இறைவனின் குமாரன் உண்மையான மனிதன் ஆனார். தீர்க்கதரிசி மற்றும் சங்கீதக் காரனாகிய தாவீது இறைவனிடம் இருந்து ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றான். தாவீதின் சந்ததியில் தோன்றும் ஒருவர் உன்னதமானவரின் குமாரனாக இருப்பார். ( 2 சாமுவேல் 7:13) இந்த மனுவுருவாதலில், நித்தியமான கிறிஸ்து நமது பலவீனமுள்ள சரீரத்தை தமக்கென்று உடுத்திக் கொண்டார். நம்மைப் போல அவர் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார். அவர் பாவமில்லாதவராக இருந்தார். மரணத்திற்கு அவர் மீது அதிகாரம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் தனது எல்லா முழுமையோடும் அவருக்குள் வாசம்பண்ணினார். அவர் பாவ சரீரத்தை மேற்கொண்டார். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததின் மூலம் தனது வல்லமையை நிரூபித்தார். மனிதனின் எதிரியான மரணத்தின் மீது அவர் வெற்றி கொண்டார். இந்த அற்புதமான நிகழ்வின் மூலம் இயேசு இறைவனின் குமாரன் என்பது இறைவனால் நிரூபிக்கப்பட்டது. இயேசு உண்மையான ஆண்டவராக அவரது வலது பாரிசத்தில் உட்காரும்படியாக செய்தார். அங்கிருந்து இப்போது ஆளுகை செய்யும் இயேசு கூறுகிறார்; “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது”. அவர் என்றென்றும் ஒரே இறைவனாக பிதாவோடும், பரிசுத்த ஆவியானவரோடும் வாழ்கின்றார். பவுலிடம் இருந்து கிறிஸ்துவின் வல்லமை பாய்ந்தோடிச் சென்று திருச்சபைகளை விரைந்து அடைந்தது. கன்னிகையினிடத்தில் பிறந்த இயேசுவே ஆண்டவர் என்று இன்றும் அறிக்கையிடுபவர்கள் மத்தியில் இயேசுவின் வல்லமை வெளிப்பட்டு செயலாற்றுகிறது. கிறிஸ்தவத்தின் ஆரம்பகாலத்தில் இருந்து “இயேசு கிறிஸ்துவே நம்முடைய ஆண்டவர்” என்பது நமது விசுவாசத்தின் தொகுப்பாக இருக்கிறது. பரிசுத்த திரியேகத்தின் இரகசியம், இரட்சிப்பின் வல்லமை மற்றும் நம்பிக்கை குறித்த எல்லா அர்த்தங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. விண்ணப்பம்: இறைவனின் குமாரனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது அன்பின் நிமித்தம் மனுவுருவானீர். உமது சரீரத்தில் பாவத்தையும், மரணத்தையும் மேற்கொண்டீர். அழிந்து போகும் எங்கள் வாழ்வை மாற்றும். உமது அன்பின் அரசாட்சிக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கும்படி உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களை பரிசுத்தப்படுத்தும். எங்கள் சிந்தனைகள், பேச்சு மற்றும் நடத்தைகளில் கவனமாக இருக்க உதவும். எங்கள் தேசத்தில் உமது உண்மையுள்ள ஊழியக்காரர்களாக உண்மையுள்ள சாட்சிகளாக இருக்க உதவும். கேள்வி:
|