Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)அப்போஸ்தலர் 15:13-21 சபைகளில் கொள்கைரீதியான பதில்கள் மூலம் தீர்க்கப்படாத ஆழமான அநேக கருத்து வேறுபாடுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொரு குழுவினரும் தங்களது கருத்துகளை பரிசுத்த வேதாகமத்தின் ஆதாரங்களை வைத்து நிரூபிக்கிறார்கள் அல்லது அவர்களது சொந்த கண்ணோட்டத்தின்படி வசனங்களை வியாக்கியானம் செய்கிறார்கள் அன்பும், சகோதரத்துவமும் இப்படிப்பட்ட தர்க்கரீதியான கருத்து முரண்பாடுகளை விட பெரியவை. தாழ்மையுடன் கூடிய பரஸ்பர பொறுமையே திருச்சபை தொடர்ந்து நிலைத்திருப்பதின் இரகசியம் ஆகும். அப்போஸ்தலர்களில் முதன்மையான பேதுரு நற்செய்தியைக் குறித்த தெளிவான காரியத்தை காண்பித்த பின்பு, ஆண்டவரின் சகோதரனாகிய யாக்கோபு எழுந்து நின்றான். அவனது வார்த்தையை கூடியிருக்கும் சகோதரர்கள் கேட்கவேண்டும் என்று கூறினான். ஏனெனில் சபையின் சட்டப்பிரிவின் பிரதிநிதியாக அவன் இருந்தான். அவன் தீர்க்கதரிசிகளின் உறுதிப்படுத்துதல் இல்லாமல் பேதுருவின் வார்த்தைகள் மற்றும் அனுபவங்களை எளிதில் எற்றுக்கொள்ள முடியவில்லை. ஆமோஸ் (9:11,12) மற்றும் ஏசாயா (45:21,22) புத்தகங்களில் பேதுருவின் வார்த்தைகளுக்கான ஆதாரத்தை காணும்படியாக பரிசுத்த ஆவியானவர் இந்த உண்மையுள்ள நபரை வழிநடத்தினார். அவன் அமைதியுடன், பாதுகாப்பு உணர்வுடனும் காணப்பட்டான். இறைவன் தாவீதின் சந்ததிக்கு இரட்சிப்பை வழங்கி, அவர்கள் மூலமாக எல்லா புறஜாதிகளுக்கும் இரட்சிப்பை அருளுகின்றார் என்பதை முதல்முறையாக புரிந்துகொண்டான். எனவே முன்பு நியாயப்பிரமாணத்திற்குட்பட்ட அவன் இப்போது உண்மையான தீர்க்கதரிசனத்திற்கு ஒப்புக்கொடுத்தான். யூதநாட்டில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களை மட்டும் கொண்டு, கிறிஸ்து தனது ராஜ்யத்தைக் கட்டவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். எல்லா நாட்டு மக்களையும் இரட்சிக்கும்படி அவர் நித்தியத்தில் தீர்மானித்திருந்தார். நித்தியமான சிருஷ்டிகர் சந்தேகத்திற்கிடமின்றி தனது திட்டத்தை தனது வழிகளில் தன் விருப்பப்படி கொண்டு செல்கிறார். உலகஇரட்சிப்பு என்பது இறைவனின் சித்தம் மற்றும் திட்டமாக உள்ளது. அவரது நிறைவேற்றி முடிக்கப்பட்ட பணியின் முடிவாகவும் அது உள்ளது. பிரியமான சகோதரனே, இந்த இறைவனின் திட்டத்தில் நீயும் இணைக்கப்பட்டுள்ளாயா? இறைவனின் செயலுடன் உனது செயல் ஒத்துப் போகிறதா? உலகத்திற்கு பிரசங்கிக்கும்படி நீ செய்யக்கூடிய தியாகங்கள் என்ன? புறஜாதி விசுவாசிகள் விருத்தசேதனம் பண்ணத் தேவையில்லை என்று யாக்கோபு கூறவில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்று கூறினான். அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். எவரும் இறைவனின் பணியை எதிர்க்க இயலாது. எல்லா புறஜாதி விசுவாசிகளும் யூதர்களாக வேண்டும் என்று ஒருவேளை யாக்கோபு விரும்பியிருக்கலாம். அவன் புதிய உடன்படிக்கையை குறித்து நினைக்கவில்லை. ஆனால் விழுந்துபோன தாவீதின் கூடாரம் திரும்பக் கட்டப்படுவதைக் குறித்துப் பேசினான். அவன் முற்றிலுமாக தனது மூத்த சகோதரர் இயேசுவின் வழிநடத்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தான். பழைய நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் புதிய முன்னேற்றங்கள் சபையில் ஏற்பட ஆரம்பித்தது. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலைக்கு திரும்புதல் என்று கூறிய போது யாக்கோபு உறுதியாக சில காரியங்களை வலியுறுத்தினார். விக்கிரக ஆராதனை, பாலியல் ஒழுக்கக்கேடுகள், நசுங்குண்டு, செத்தவைகள், இரத்தம் ஆகியவைகளுக்கு புறஜாதி விசுவாசிகள் விலகி இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கோரிக்கைகள் மீண்டும் நியாயப்பிரமாணத்திற்கு திரும்புதல் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தக் கட்டளையின் மூலம் சபையின் தலைவர், யூதர்கள் மற்றும் புறஜாதி விசுவாசிகளுக்கிடையே ஐக்கியத்தை பாதுகாக்க நடைமுறை ஆலோசனையை வழங்கினார். நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பவர்கள் இரத்தம் கலந்துள்ள நசுங்குண்டு இறந்ததை சாப்பிடுவது சரி என்று எண்ணுபவர்களுடன் இணைந்து சாப்பிட இயலாது. இந்த விதிமுறைகள் மூலமாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி நீதியைக் கொண்டுவருவது இதன் நோக்கமல்ல. மாறாக பாதிக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஓர் முன்மாதிரி ஆலோசனையாக உள்ளது. நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்டங்கள் அல்ல, அன்பு தான் இணைப்பு பாலமாக, இந்த ஆலோசனையின் திட்டமாக இருந்தது. அவர்கள் விக்கிரகங்களுடன் இணைந்துள்ள விருந்துகளில் பங்கேற்க நேரிடும் போது, அங்கே களியாட்டமும், விபச்சாரமும் காணப்படும். புறஜாதிகள் இருக்கக் கூடிய இந்த ஆபத்தை யாக்கோபு நன்கு உணர்ந்திருந்தான். அவர்களது நாட்டில் இருந்து அவர்களை தனியாகப் பிரிப்பது கடினம் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் உறுதியாக அவர்களுக்கு கட்டளையிட்டான். எல்லா அசுத்தத்திற்கும், தூய்மையற்ற காரியத்திற்கும் அவர்கள் விலகியிருக்க வேண்டும். ஏனெனில் சிலுவையில் அவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட நீதியுடன் இவைகள் இணைய முடியாது. இறைவனுடன் நெருங்கிச் சேரும்படி அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஆண்டவர், பழைய அல்லது புதிய விக்கிரகங்கள் ஆகிய இரண்டிற்கும் ஒருவன் சேவை செய்ய இயலாது. மேலும் விசுவாசியின் சரீரமானது பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறது. அது எல்லா அக்கிரமங்களின் குகையாக இருக்க இயலாது. நடைமுறை அன்பைக் குறித்ததான வழியை யாக்கோபு தெளிவுபடுத்தியதை, பவுல் தனது நிரூபங்களில் இரண்டு நிபந்தனைகள் மூலம் உறுதிப்படுத்துகிறார். (1 கொரிந்தியர் 10:21; 6:18) யூதர்களின் ஜெபஆலயத்தில் இருந்து வந்த புறஜாதி விசுவாசிகளின் பின்னால் இருக்கக்கூடிய சபையில் யாக்கோபு ஒரு காரியத்தைக் கண்டார். அவன் பழைய ஏற்பாட்டில் இருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டிற்கு தாவ முற்படவில்லை. அவன் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் ஒரு இறைவனின் வெளிப்பாட்டைக் கண்டான். உலகத்தில் பல்வேறு பட்டணங்களில் அப்போது இருந்த யூதர்களின் ஜெபஆலயத்து நியாயப்பிரமாண விசுவாசிகளின் கவனத்தை ஈர்க்கும்படி செயல்பட்டான். ஒவ்வொரு ஜெபஆலயத்திலும் இருந்த நியாயப்பிரமாணவாதி சட்டத்தின் நியாயத்தீர்ப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கவோ அல்லது ஒப்புக்கொடாமலோ இருப்பதை தெரிவு செய்ய வேண்டும். எனவே யாக்கோபு கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்கு இணையான அல்லது அதற்கு மேம்பட்ட பரிசுத்தம் இல்லை என்பதை அறிக்கையிட்டான். மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு கனத்தை அளிக்கும் வகையில் இப்படிச் செய்தான். நியாயப்பிரமாணத்தின் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் இருந்து நம்மை முழுமையாக விடுதலை செய்ய பவுலின் பிரசங்கத்தின் மூலம் செயல்பட்ட கிறிஸ்துவிற்காக நன்றி கூறுவோம். கிறிஸ்துவின் அன்பிற்குள்ளான அன்பின் பிரமாணத்திற்குள் அவர் நம்மை வழிநடத்துகிறார். நியாயப்பிரமாணத்தின் மூலம் சாத்தியமற்ற கடமைகள் நம் மீது சுமத்தப்படவில்லை. மாறாக நமக்குள் பரிசுத்த ஆவியானவர் அன்பின் நோக்கமாக இருக்கிறார். நாம் ஒருவரையும் காயப்படுத்த இயலாது. மேலும் நமது முழு இருதயத்துடன் நம்முடைய ஆண்டவரை நேசிப்போம். விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, எங்களது ஞானமற்ற தன்மைக்காக எங்களை மன்னியும். உமது சபையில் ஏற்படுகின்ற பிரிவினைகளை அன்புக் குறைவோடு கையாளுவதற்காக எங்களை மன்னியும். உம்மை நேசிக்கின்ற சகோதரர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள எங்களுக்கு கற்றுத்தாரும். எங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு மாறுபட்டு நிற்கின்ற அவர்களையும் நேசிக்க உதவும். உமது சிலுவையே எங்களுடைய துருகம், உமது ஆவியானவரே எங்களுடைய பெலன். ஆமென். கேள்வி:
|