Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)
அ) யோர்தானுக்கு அக்கரையில் இயேசு (யோவான் 10:40 – 11:16)யோவான் 10:40-42 இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையிலான பிரச்சனை வெடித்தது. பெதஸ்தா குளத்தருகே அவர் வியாதியஸ்தனைச் சுகமாக்கியதிலிருந்து பரிசேயர் மக்களுடைய தலைவர்களைத் தூண்டிவிட்டார்கள் (அதிகாரம் 5). இயேசு மூன்றாம் முறை எருசலேமிற்குச் சென்றபோது, இந்தப் பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. ஒளி இருளில் பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இயேசு மரணத்தைச் சந்திக்கக்கூடிய ஆபத்திருந்தது. அவருடைய எதிரிகள் அவர் மீது வெறுப்புடன் அலைந்துகொண்டிருந்தாலும், தன்னுடைய சீஷர்களை அறிவிலும் விசுவாசத்திலும் முதிர்வடையச் செய்யும்படி அவர் திரும்பத் திரும்ப தேவாலயத்திற்குள் சென்று வந்தார். பிரதிஷ்டைப் பண்டிகைக்குப் பிறகு இயேசு எருசலேமைவிட்டு யோர்தானுக்கு அப்புறம் போனார். அந்தப் பகுதி ஆலோசனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல. இந்தப் பகுதியில்தான் முன்பு யோவான் ஸ்நானகன் பிரசங்கம் பண்ணினான். அது யூதர்களுடைய அதிகாரத்திற்கு வெளியே ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டபகுதியாயிருந்தது. யோவான் ஸ்நானகனும், அவன் இயேசுவுக்குச் சாட்சி பகர்ந்ததும் இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட காரியங்களாயிருந்தது. ஸ்நானகன் நிதித்தமாக விசுவாசித்தவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள். அவர்களுடைய போதகர் சிரச்சேதம் பண்ணப்பட்டிருந்தார். இயேசு அங்கு வந்தபோது அவருடைய தாழ்மையையும், மகத்துவத்தையும், வல்லமையையும் அறிந்து அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். இயேசு அவர்களுக்கு அடையாளங்களையும் இறைவனையும் மனிதனையும் பற்றிய உண்மையுள்ள பிரசங்கத்தையும் வழங்கினார். அநேகர் தங்கள் இருதயங்களைத் திறந்து நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்நானகன் அற்புதங்களைச் செய்யாவிட்டாலும் தீர்க்கதரிசியாக தன்னுடைய பங்கை நிறைவேற்றினார் என்று அவர்கள விசுவாசித்தபடியால் அப்படிச் செய்தார்கள். இயேசு அவர்களிடம் வந்தபோது அவர்கள் உடனடியாக அவரே ஆண்டவர் என்றும் இரட்சகர் என்றும் ஏற்றுக்கொண்டார்கள். யோவான் 11:1-3 யோர்தான் பகுதியில் இயேசு பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, லாசரு என்று பெயருடைய ஒரு மனிதன் வியாதிப்பட்டான். அவன் ஒலிவமலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். இயேசு அவனுடைய வீட்டில் அடிக்கடி விருந்தாளியாக வந்து சென்றிருக்கிறார். லாசருவின் சகோதரியாகிய மார்த்தாளிடம் இயேசு பேசியது மிகவும் பிரபலமானது. அந்த விவரங்கள் மற்ற நற்செய்தி நூல்களில் இருப்பதால் யோவான் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. ஆயினும் இயேசுவின் பாதங்களில் பரிமள தைலத்தை ஊற்றிய மரியாளைப் பற்றி யோவான் குறிப்பிடுகிறார். இந்தப் பெண் கர்த்தருடைய வார்த்தைக்கான ஆவலுடன் காத்திருந்தாள் என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். அவள் இயேசுவின் பாதங்களை தைலத்தினால் கழுவிய பிறகு தன்னுடைய தலைமயிரினால் துடைத்தாள் (யோவான் 12:1-8). அவள் இறைமகனிடமான தன்னுடைய தாழ்மை, விசுவாசம், அன்பு ஆகியவற்றைக் காண்பித்தாள். லாசரு வியாதிப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு இயேசு துக்கமடைந்தார். ஆயினும் அவனுடைய சகோதரிகளின் விசுவாசம் அவரை அழைத்தது. இயேசு வேகமாக வந்து தங்கள் சகோதரனைச் சுகமாக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவர் தூரத்திலிருந்தே அவனைச் சுகமாக்க முடியும் என்பதற்காக அவருக்கு அவனுடைய நிலையைக் குறித்துச் செய்தியனுப்பினார்கள். லாசருவை இயேசு நேசித்தபடியால் அவர் ஏதாவது செய்வார் என்ற அவர்கள் அறிந்திருந்தார்கள். “லாசரு” என்றால் “இறைவன் உதவியிருக்கிறார்” என்று பொருள். ஆகவே யோவான் நற்செய்தியில் எழுதப்பட்டுள்ள கடைசி அற்புதத்தின் நோக்கம் இந்தப் பெயரில் வெளிப்படுகிறது. யோவான் 11:4-10 இயேசுவுக்கு அந்த செய்தி எட்டியபோது, அவருக்கும் மரணத்தின் சக்திகளுக்கும் இடையிலுள்ள போராட்டத்தை அவர் உணர்ந்தார். அந்த வியாதிக்காரன் மரணத்திற்குப் பலியாகாமல், இறைவனுடைய நாமத்தின் நாமம் அவன் மூலமாக மகிமைப்படும் என்று அவர் முன்னறிவித்தார். தான் செய்யப்போவது என்ன என்பதை அவர் பரிசுத்த ஆவியின் மூலம் அறிந்திருந்தார். எருசலேம் நகரத்தின் வாசலுக்கு அருகில் அவர் ஒருவனை உயிரோடு எழுப்புவதன் மூலம் அவருடைய அதிகாரம் நன்கு விளங்கும். அப்போது எருசலேமிலிருப்பவர்கள் தங்கள் அவிசுவாசத்திற்கு எந்தக் காரணமும் கூறமுடியாது. இறைவனுடைய மகிமையும் கிறிஸ்து மகிமைப்படுவதும் ஒன்றே. அவர் மரணத்தைச் சந்தித்து அதை மேற்கொண்டபடியால் அவருடைய மகிமை பெருகியது. மனுக்குலம் முழுவதுமே மரணத்தினால்தான் வேதனையடைகிறது. மரணம் நேரடியாக இல்லாமையினத்திற்கு மக்களை வழிநடத்துகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தை அறிந்திருந்தார். மரணத்தினாலோ அதன் விளைவுகளினாலோ அவர் கலங்கவில்லை. மரணத்தின் காரணத்தையும் அவர் அறிந்திருந்தார். அவர் மரணத்தின் பிடியில் உள்ள இவ்வுலகத்திற்கு வாழ்வளிப்பவர். இயேசு உடனடியாக பெத்தானியாவிற்குப் போகாமல், இரண்டு நாட்கள் காலதாமதம் செய்தார். மரணம் தன்னுடைய நண்பனை விழுங்க அவர் அனுமதித்தார். யூதேயாவில் அவரைக் கல்லெறிய மக்கள் முயற்சித்த காரணத்தினால், அவர் மறுபடியும் யூதேயாவுக்குச் செல்வோம் என்று சொன்னபோது அவருடைய சீஷர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அவர்கள் இறந்துபோன லாசருவுக்காக கவலைப்படவும் இல்லை, இறைவனுடைய மகிமையைக் காண விரும்பவும் இல்லை, தங்கள் உயிருக்காக மட்டும் பயந்தார்கள். இத்தருணத்தில் இயேசு ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தினார். ஒருவன் பகலில் பிரயாணம் செய்யும்போது பாதுகாப்பாக பயணிக்க முடியும். ஆனால் இரவுப் பயணத்தில் பல தடைகளும் பள்ளங்களும் பிரயாணத்தைக் கடினமாக்கும். சிலுவையின் நேரம் நெருங்கிவருதால், அவருடைய பகல்பொழுது இன்னும் முடிவடையவில்லை. அவர்கள் இறைவனுடைய கரத்தில் பாதுகாப்பாக, எருசலேமுக்குள் அமைதியாகச் செல்ல வேண்டும். இறைவனுடைய பராமரிப்பை நம்பாதவர்கள், இயேசுவின் எதிரிகளைப் போல இருளில் வாழ்கிறார்கள். ஏனெனில் விசுவாசத்தின் ஒளி அவர்களிடத்தில் உதிக்கவில்லை. ஆகவே, அவருடைய சீஷர்கள் அவருடைய தலைமையை முழுவதுமாக நம்ப வேண்டும் என்று இயேசு கேட்டுக்கொண்டார். இல்லையெனில் அவிசுவாசம் அவர்களை இருளுக்குள் கொண்டு செல்லும். கர்த்தருடைய சித்தமில்லாமல் நமக்கு எதுவும் நடக்காது என்பதுதான் இருள் நிறைந்த தருணத்தில் ஒரே ஆறுதல். நம்முடைய நம்பிக்கை அவரே. விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்கள் வாழ்வின் எஜமானாக இருப்பதால் உமக்கு நன்றி. உம்முடைய வெளிச்சத்தில்தான் நாங்கள் நடக்கிறோம். உம்முடைய எதிரிகள் எங்கள் அழிவை விரும்பினாலும், நீர் எங்களை நேரான பாதையில் வழிநடத்துகிறீர். உன்க்காக பாடனுபவிக்கவும் மரணத்தைச் சந்திக்கவும் தாமதியாமல் ஆயத்தப்பட எங்களுக்கு உதவும். நீர் எங்களைப் பராமரிப்பதினால் உம்முடைய நாமம் மகிமைப்படட்டும். கேள்வி:
|