Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
10. அருட்பணிப் பயணத்தை முடித்து அப்போஸ்தலர்கள் திரும்புதல், மற்றும் வனாந்தரத்தில் ஐயாயிரம் பேர் போஷிக்கப்படுதல் (மாற்கு 6:30-44)மாற்கு 6:30-44 கிறிஸ்துவின் சீஷர்கள் தமது ஊழியப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பினார்கள். அவருடைய நாமத்தினால் பேசிய வார்த்தைகளையும், செயல்பட்ட வல்லமையையும் குறித்துச் சொன்னார்கள். இயேசு அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். இறைவன் அவர்கள் மூலமாய் செயல்பட்டதை உணரும்படி அப்படிச் செய்தார். அவர்கள் மத்தியில் இருந்த இறைவனுடைய ராஜ்யத்தின் மகிழ்ச்சியான அனுபவங்களைக் குறித்து நன்றி செலுத்தும்படி சொன்னார். உங்கள் நண்பர்கள் மத்தியில் பணிசெய்யும் போது வெளிப்படும் இயேசுவின் வல்லமையான அதிகாரத்திற்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து நன்றி செலுத்தும்படி இயேசு உங்களை வழிநடத்துகிறார். அவருடைய செயல்களை நீங்கள் அறிவதன் மூலம் அவரைத் துதிக்க முடியும். அப்போது நீங்கள் பெருமையடையாமல், தாழ்மையுடனும், நன்றியுணர்வுடனும் இருப்பீர்கள். இயேசு தனியாயிருக்கும்படி திரளான மக்கள் விடவில்லை. அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள். அவருக்கு முன்பாகவே சென்று கூடியிருந்தார்கள். என்ன ஓர் ஆச்சரியம், கிறிஸ்து களைப்புடன் இருந்தாலும் அவர்களை அனுப்பிவிடவில்லை. அவர்கள் மீது மனதுருகினார். நீதியின் மீதான அவர்களின் பசிதாகத்தை அறிந்தார். அன்பு மற்றும் இரக்கத்திற்கான அவர்களின் ஏக்கத்தை உணர்ந்தார். அவர்களுக்கு தமது ஆவியானவரின் நியாயப்பிரமாணத்தை போதித்தார். இறைவனின் இரட்சிக்கும் கிருபையைக் குறித்து விளக்கிச் சொன்னார். பரிசுத்தமான ஆண்டவர் நெடுநேரமாக மக்களுக்கு பிரசங்கிப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவரைச் சுற்றிலும் புல்தரைகளில் அமர்ந்தார்கள். அவர்களின் தாகம் நிறைந்த இருதயங்களில் பரதீசு வந்திறங்கியது. மாலை நேரம் ஆகியது. அவர்களுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. சீஷர்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதைக் குறித்து யோசித்தார்கள். திரளான மக்களின் பசியைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கும் நமது உலகில் பெருகிவரும் அழிவுகளுக்கு பசி காரணமாக உள்ளது. திரளான மக்களுக்கு உணவைக் கொடுக்கும்படி இயேசு தமது சீஷர்களைக் கேட்டுக்கொண்டார். சீஷர்கள் மக்களின் தொகையை எண்ணி, தேவைப்படும் பணத்தைக் கணக்கிட்டார்கள். அவர்கள் திறமைமிக்க வியாபாரிகளைப் போல நினைத்துப் பேசினார்கள். ஆனாலும் இறைவனின் குமாரனாகிய கிறிஸ்துவிற்கு மனித கணக்கீடுகளும், காரண காரியங்களும் தேவையில்லை. தம்மைச் சூழ இருந்த ஆவிக்குரிய பசி கொண்ட திரள் மக்களுக்கு இரக்கம் பாராட்டும்படி அவர் தீர்மானித்தார். அவர்களுக்கு அப்பமும் கொடுக்க தீர்மானித்தார். எனவே அவர் எல்லா மக்களையும் பெரிய விருந்திற்கு அழைத்தார். அவர் சிறியவற்றை பெரியதாக மாற்றும் வல்லமை படைத்தவர் ஆவார். இயேசு தமது சீஷர்களின் கைகளில் இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வாங்கினார். தமது பிதாவின் முன்பு அவைகளை வைத்தார். அவர்களிடம் இருந்த கொஞ்சத்திற்காக பிதாவிற்கு நன்றி செலுத்தினார். பின்பு அவர் அப்பங்களைப் பிட்டு சீஷர்கள் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டு திகைத்தார்கள். எவ்விதம் இறைவனின் குமாரன் பரிபூரண கிருபையை மனிதர்களுக்கு வழங்குகிறார் என்பதற்கு சாட்சி பகிர்ந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்பு அப்பங்களும், மீன்களும் முதலில் இருந்ததைவிட அதிகமாக இருந்தன. கிறிஸ்து நன்றி செலுத்தியதின் மூலம் இறைவனின் ஆசீர்வாதம் இவ்விதமாக ஏற்பட்டது. அவர் திரளான மக்களுக்கு அப்பத்தை பிட்டுக் கொடுத்தது போல, நாம் இறைவனுடன் ஒப்புரவாகும்படி தமது சரீரத்தை பிட்கும்படி ஒப்புக்கொடுத்தார். ஆண்டவருடைய இராப்போஜனத்தில் நாம் ஆசீர்வதிக்கப்படும்படி விரும்புகிறார். நாம் அன்பிலும், தியாகத்திலும் பெலப்படும்படி செயல்படுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் இறைவனுடைய ஆசீர்வாதத்தின் இரகசியத்தை நீங்கள் உணர்கிறீர்களா? நாம் பெற்றிருக்கும் சிறிய காரியத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். விசுவாசத்துடன் நன்றி செலுத்துவது தான் இறைவனுடைய பொக்கிஷங்களின் கதவைத் திறக்கும் சாவி ஆகும். உங்களுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துவின் உதவியை நம்புங்கள். நீங்கள் பெற்றிருக்கும் சிறிய காரியத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். அவருடைய வல்லமையை விசுவாசியுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். உங்கள் நண்பர்களின் சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை எல்லா நேரங்களிலும் சந்திக்க விரும்புகிறார். நன்றியுணர்வுடன் இருக்க ஒருபோதும் மறவாதீர்கள். விண்ணப்பம்: ஆண்டவரே, எங்கள் அவிசுவாசம், நன்றி செலுத்தாத தன்மைக்காக எங்களை மன்னியும். திரளான மக்கள் மீது நீர் மனதிரங்கியது போல நாங்களும் இரக்கம்பாராட்ட எங்களுக்குக் கற்றுத்தாரும். உமது மன்னிப்பிற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அறிந்த மற்றும் அறியாதிருக்கிற உமது ஆசீர்வாதங்களுக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் நண்பர்களும் இந்த ஆசீர்வாதங்களைப் பெற நாங்கள் உம்மை நாடுகிறோம். அவர்கள் மாற்றம் பெற உதவும். அவர்கள் முதலாவது அப்பத்தை யோசிக்காதபடி, அந்நியர்களுக்கும், உமது ராஜ்யத்தை நாடுபவர்களுக்கும் சேவைபுரிய உதவும். ஆமென். கேள்வி:
|