Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 008 (Matthias Chosen)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

4. பாவியான யூதாஸின் இடத்தில் மத்தியா தெரிவு செய்யப்படுதல் (அப்போஸ்தலர் 1:15-26)


அப்போஸ்தலர் 1:21-26
21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

ஏன் யூதாஸ் இயேசுவை மறுதலித்தான் என்ற தத்துவரீதியான கேள்யை சீடர்கள் கேட்காமல், இறைவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கடந்த காலத்தை நோக்கிப்பார்த்து கலங்கி நிற்காமலும், தற்கால உணர்வுகளால் நிலைகுலையாமலும் இருந்து, உலகத்திற்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய தங்கள் கடமையை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். அப்போஸ்தலர்களுடைய எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவை நிறைவாக்கும்படி அவர்கள் இறைவனிடம் விண்ணப்பித்தார்கள். அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது அவர்கள் எண்ணிக்கை சரியானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட இருப்பவர் ஆரம்ப முதல் தொடர்ந்து இயேசுவோடு இருந்தவராயிருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வையும் பணிகளையும் கண்களினால் கண்ட சாட்சியாயிருப்பதுடன் அவருடைய உயிர்தெழுதலுக்கும் நேரடியான சாட்சியாயிருக்க வேண்டும். இயேசு ஒவ்வொரு நகரங்களாகச் சுற்றித்திரிந்து ஊழியம் செய்யும்போது, பன்னிரவர் மட்டும் அவரோடு இருக்கவில்லை. மேலும் அநேகர் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். கலிலேயாவில் தம்முடைய பணியைச் செய்யும்படி இயேசு எழுபது சீடர்களை அனுப்பினார். ஆகவே அப்போஸ்தலருடைய பணிக்கு முன்வரக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அதற்கான தகுதியை அவர்கள் கடுமையாக்கினார்கள். அவர்கள் யோவான் ஸ்நானகனுக்குச் சீடர்களாக அவருடன் நிலைத்திருந்து, தங்கள் பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிட்டு, இறைவனுடைய அரசு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களே அப்பணிக்குத் தகுதியானவர்கள். உண்மையில் யோவானுடைய சீடர்களில் பலர் அவருடைய அழைப்பைக் கேட்டிருந்தார்கள். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே அவர்கள் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தவராகிய அவரைவிட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பராகிய கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.

இடைவிடாமல் இயேசுவைப் பின்பற்றியவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஞானமும் முதிர்ச்சியும் உள்ளவர்களாக மாறியிருப்பர்கள் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் சீடர்களுடைய நடத்தை அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் மெய்யான விசுவாசத்திற்கும், மேலான அன்பிற்கும், பரந்த விசுவாசத்திற்கும் யாருடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் ஆயத்தப்படுத்தப்பட்டதோ அவர்களைத் தவிர வேறு யாரும் பொருத்தமானவர்களாயிருக்கவில்லை. சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டிருந்தபோதிலும், அவர்கள் இருதயம் பெருமையுள்ளதாகவே இருந்தது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய மகிமையை அவர்கள் கண்டிருந்தும், அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் வந்து தங்காத காரணத்தினால் அவர்கள் நித்திய வாழ்வற்றவர்களாயிருந்தார்கள். சில வேத வியாக்கியானிகளுடைய கருத்துப்படி, யூதாஸின் இடத்திற்கு அப்போஸ்தலர்கள் வேறு ஒருவரைத் தெரிவுசெய்யும் இந்த செயல் மனித ஞானத்தின்படி மேற்கொள்ளப்பட்ட அவசர முடிவாகும். ஏனெனில் கர்த்தர் ஏற்ற காலத்தில் புறவினத்து மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி யூதாஸின் பணியையும் அதிகாரத்தையும் கொடுத்து அப்போஸ்தலனாகிய பவுலை அழைத்தார்.

ஆயினும் ஆரம்பத்தில் பதினொரு சீடர்களும் உலகத்திற்கு நற்செய்தியைப் பிரசங்கம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களைத் திரும்பக் கட்டுவதைக் குறித்தே சிந்தித்தார்கள். மற்ற அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து பேதுரு, இயேசுவின் சீடர்கள் அனைவரையும் கூட்டி, அவர்களில் ஒருவரை அப்பணிக்காக தெரிவுசெய்யும்படி முயற்சி செய்தார். இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவராகிய கர்த்தரே ஆத்துமாவின் நோக்கங்களை அறிந்தவராயிருப்பதால் இறுதி முடிவை அவருடைய கரத்திலேயே அவர்கள் விட்டுவிட்டார்கள். பேதுரு இங்கு ஒரு பிஷப்பைப்போல மேலான அதிகாரத்துடன் செயல்படவில்லை என்பதையும் இங்கு அப்பணிக்கான தேர்தல் ஒரு ஜனநாயகத் தேர்தலைப் போல பெரும்பான்மையானவர்களுடைய வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் அனைவரும் இறைவனிடத்தில் கூடிவந்து, அவருடைய தெய்வீக நியாயத்தையும் உடனடியான வழிநடத்துதலையும் நாடினார்கள்.

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்கு முன்பாக இறைவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிப்பதற்காக சீட்டுப் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள் உதவிக்காரர்களைத் தெரிவுசெய்யும்போது, அப்போஸ்தலர்களே திருச்சபையை வழிநடத்தினார்கள். அவ்விதமாகவே அந்தியோக்கியாவிலும் மூப்பர்கள் விண்ணப்பத்தோடும் உபவாசத்தோடும் கிறிஸ்துவின் வழிநடத்துதலை நாடியபோது, பரிசுத்த ஆவியானவரே பவுலையும் பர்னபாவையும் தெரிவுசெய்து அனுப்பினார். உண்மையில் அப்போஸ்தலர்களுடைய வரலாறு கிறிஸ்துவினுடைய வரலாறாகவே இருக்கிறது. அது இறைவனுடைய அரசை விரிவுபடுத்துவதற்கான அவருடைய செயல்பாடுகளின் வரலாறாகும். நாம் போப்பின் அதிகாரத்திற்கு கீழாகவோ, ஜனநாயக அரசியலுக்குக் கீழாகவோ, சோசலிச சர்வாதிகாரத்திற்குக் கீழாகவோ இல்லை. மாறாக நாம் கிறிஸ்துவின் ஆளுகைக்கும் வழிநடத்துதலுக்கும் கீழாக இருக்கிறோம். அவருடைய வல்லமை விசுவாசிகளுடைய இருதயத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவரினால் உணரப்படுகிறது.

மூப்பர்கள், உதவிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாயிருப்பவர்களிடம் நாம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது. நம்முடைய அறிவையோ, சித்தத்தையோ, குடும்பத் தகுதிகளையோ நாம் சார்ந்திராமல் இறைவனை விண்ணப்பத்தில் சார்ந்திருக்க வேண்டும். இயேசுவே திருச்சபைத் தலைவர்களை அவர்களுடைய செல்வம், திறமைகள் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல் தம்முடைய சொந்த விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாம் எப்போதும் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது மட்டுமே கர்த்தருடைய பணி நிறைவேறும், அவருடைய பணியாளர்கள் பரிசுத்த ஆவியானவரினால் நிரப்பப்படுவார்கள். ஒரு ஆசாரியனுடைய, மூப்பருடைய அல்லது பிஷப்பினுடைய வெற்றியானது அவருடைய இறையியல் பட்டத்திலோ, அவருக்கும் மற்ற உயர்வகுப்பினருக்கும் இடையிலுள்ள தொடர்பிலோ சார்ந்திராமல், அவருக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலான தொடர்பிலும், அவருடைய நேரடியான அழைப்பிலுமே சார்ந்திருக்கிறது. இந்த அழைப்பைப் பெற்றுக்கொள்ளாமல், இறைவனுடைய ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் சடுதியில் நரகத்திற்குச் செல்லும் ஆபத்திற்கு உட்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் சேவையை தங்களுடைய விருப்பத்தின் பகிர்ந்துகொடுக்கவில்லை. யாருமே மனிதர்களுடைய இருதயத்தையும், மனநிலைகளையும், தாலந்துகளையும், மனிதர்களுடைய உண்மைத் தன்மையையும் அறியமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். நூற்றியிருபது சகோதர்கள் ஒருமித்துக்கூடி, தங்களில் ஒருவரை இந்தக் கிருபையின் சேவைக்காக கர்த்தர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதற்கான வல்லமையை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள். நற்செய்திப் பணியாளர்களை நியமிப்பதில் இறைமைந்தன் இடைப்படாவிட்டால் அனைத்துப் பணிகளும் பயனற்றதாகவே போய்விடும்.

அந்தப் பணிக்காக அவர்கள் இரண்டுபேரைத் தெரிவுசெய்தார்கள். சம அளவு தகுதி வாய்ந்த இந்த இரண்டுபேரைப் பற்றிய மற்ற விவரங்கள் நமக்குத் தெரியாது. அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு எவ்விதமாக சீட்டுப் போட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளப்பட்டவர் முதலாவது நபர் அல்ல. அறியப்படாத மத்தியா என்பவரே தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் புதிய அப்போஸ்தலனாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குள்ளாகவே கிறிஸ்து அவரையும் பரிசுத்த ஆவியானவரினால் நிறைத்து, அவருடைய அழைப்பை உறுதிப்படுத்தினார். தெரிந்துகொள்ளப்பட்ட மத்தியாவைப் பற்றிய வேறு தகவல் எதுவும் நமக்குத் தெரியாது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் தகுதியற்றவர்களையும் உம்முடைய பணிக்காக அழைப்பதற்காக உமக்கு நன்றி. நீர் அவர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு அதிகாரம் வழங்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து, அவர்களைப் பணிக்கு அனுப்பி, அவர்களோடிருந்து, அவர்களுடைய பணியில் அவர்களை வெற்றிகொள்ளச் செய்கிறீர். உம்முடைய கண்களில் எமக்குத் தயை கிடைக்குமானால், எங்களைப் புறக்கணிக்காமல், எங்கள் பெருமையை நொறுக்கி, எங்களைப் புதுப்பித்து, உம்முடைய வல்லமையினால் எங்களை பெலப்படுத்தி, உம்முடைய நாமத்தின் மகிமைக்காக நாங்கள் உம்மை சேவிக்கும்படி எங்களுக்குத் துணை செய்தருளும்.

கேள்வி:

  1. கிறிஸ்துவின் சேவையில் சேர்வதற்கான தகுதிகள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:53 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)