Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)
11. இயேசுவும், ஐசுவரியவானும் (மாற்கு 10:17-27)மாற்கு 10:17-27 ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை உறுதிப்படுத்தவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்புகிறான். பணம், சொத்துகள் மற்றும் தங்கத்தை சேகரிக்க முயற்சிக்கிறான். மாணவர்கள் நல்ல சம்பளம் கிடைக்கக் கூடிய வேலையைப் பெற முயல்கிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வை பொருளாதாரச் செழிப்பின் மீது கட்டுகிறார்கள். சில நாடுகள் தனிநபர்களின் சொத்துகளை பொதுவுடைமையாக மாற்றி அனைத்து மக்களுக்கும் சொந்தமாக்குகின்றன. ஆனால் படைத்தவரை நினைத்து, அவருக்கு சேவை செய்து, தங்கள் வாழ்வு மற்றும் உடைமைகளை அவருக்கு ஒப்புக்கொடுக்கிறவர்கள் யார்? அநேகர் இறைவனுக்கும், விக்கிரகத்துக்கும் சேவை செய்ய முயற்சிக்கிறார்கள். பூமியில் பாதுகாப்பான வாழ்வை மக்கள் தேடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தோற்றுப்போகிறார்கள். கனம்பொருந்திய ஒரு வாலிபன் இயேசுவிடம் வந்து நித்தியஜீவனைப் பெறும்படியான வழியைக் கேட்டான். அழிந்துபோகும் காரியங்களை விட்டுவிட்டு ஆவிக்குரிய காரியங்களில் ஆர்வமாயிருக்கும் இளம் வாலிபன் தியாகம் செய்யவும், நற்செயல்கள் செய்யவும் ஆயத்தமாக இருந்தான். அவன் மரியாதையுடன் இயேசுவை “நல்ல போதகரே” என்று அழைத்தான். எப்படியிருப்பினும் கிறிஸ்து இந்தப் புகழாரத்தை விரும்பவில்லை. அந்த வாலிபனின் மனதில் இருந்ததை அவர் அறிந்திருந்தார். “இறைவனைத் தவிர ஒருவனும் நல்லவன் இல்லையே” என்று அவனிடம் கூறினார். இந்த வார்த்தைகள் நம்மையும் சேர்த்து எல்லா மனிதர்களையும் நியாயம் தீர்க்கிறது என்பதை உன்னால் உணரமுடிகிறதா? அவர்களுடைய அக்கிரமங்களைச் சுட்டிக் காண்பிக்கின்றன. அவன் முன்பாக நிற்பவர் நல்ல போதகர் மட்டுமல்ல, நல்ல இறைவனுமாக இருக்கிறார் என்பதை அவன் உணர்ந்து விசுவாசிக்கும்படியான ஒரு மறைமுகக்கட்டளை இந்த வார்த்தைகளில் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பர், இறைவனின் நேச குமாரன். அவருடைய பூரண வல்லமை மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தனது சொந்த முயற்சியினால் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க எண்ணிய இந்த வாலிபனை இயேசு நேசித்தார். அவன் நற்குணங்களுடன், தூய்மையாக நடக்க விரும்பினான். இதைத்தான் இயேசுவும் நம்மிடம் விரும்புகிறார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவும், விக்கிரகத்தை விட்டு விலகியிருக்கவும், இறைவனை மட்டுமே விசுவாசிக்கவும் விரும்புகிறார். நாம் கிறிஸ்துவின் ஒளியில் நம்முடைய எண்ணற்ற பாவங்களைக் காண்கிறோம். நமக்குள் உள்ள பாவமனிதனை உணர்கிறோம். இரட்சிப்பிற்கான ஒரே வழி சிலுவை மட்டுமே. இன்று நாம் நித்தியவாழ்வை சிலுவையின் மூலம் பெறுகிறோம். அந்த வாலிபன் பணக்காரனாக இருந்தான். அவன் இயேசுவைப் பின்பற்றுவதைவிட பணத்தை அதிகமாக விரும்பினான். அவன் இறைபக்தியுடன் வாழ விரும்பியும் இவ்விதமாக ஆவிக்குரிய காரியங்களைப் புறக்கணித்து, உலக காரியங்களை தெரிந்துகொண்டான். பிரியமான வாசகரே, உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். நீங்கள் பணத்தை நேசிக்கிறீர்களா? ஐசுவரியம், ஆரோக்கியம், செழிப்பு இவைகள் மீது நம்பிக்கை கொள்கிறீர்களா? அழிந்துபோகிற காரியங்கள் மீது உங்கள் வாழ்வைக் கட்டுகிறீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணத்திற்கு உங்கள் வலது கண்ணின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? உங்களுடைய திறமைகள் மற்றும் நேரங்களின் விலை தெரியுமா? இறைவன் உங்களுக்குத் கொடுத்திருக்கிற எல்லா நன்மையான காரியங்களுக்காகவும் நன்றி செலுத்துகிறீர்களா? உங்கள் சிருஷ்டிகளுக்கு நீங்கள் உண்மையாக இருக்க விரும்பினால், உடனடியாக உங்கள் திறமைகள் அனைத்தையும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் ஏழையாய் இருப்பதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். கிறிஸ்துவுக்குள் ஐசுவரியவனாக இருக்க பிரயாசப்படுங்கள். அவர் தமது மகிமையின் ஐசுவரியத்தை துறந்து தம்மையே வெறுமையாக்கி, நம் மத்தியில் வாழ்ந்தார். தனது பரலோகப் பிதாவை எல்லா நேரங்களிலும் சார்ந்து வாழ்ந்து, அதில் திருப்தியைக் கண்டார். பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் தங்களை இறைவனுக்கும், அவர் பணிக்கும் அர்ப்பணிக்கிறவர்களுக்கு இறைவன் தன்னையே அர்ப்பணிக்கிறார். அவர் பாவியை பரிசுத்தவானாக மாற்றுகிறார். விக்கிரக ஆராதனை செய்கிறவனை இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறார். விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களை உமது பிள்ளைகள் என்று அழைக்கிறீர். பிதாவாகிய இறைவனின் பிள்ளைகளாக எங்களை மாற்றுகிறீர். எங்கள் இருதயங்களில் இருந்து பண ஆசையை எடுத்துப்போடும். உலகக் காரியங்கள் மீதான எங்கள் நம்பிக்கையை நீக்கிவிடும். உம்மைப் பின்பற்றுபவர்கள் உலகக் காரியங்கள் மீது நாட்டம் கொள்ளாதபடி அவர்களை புதுப்பியும். உமது வல்லமை, பராமரிப்பு, மற்றும் பிரசன்னத்தில் திருப்தியடையச் செய்யும். கடைசி கால சோதனைகள் மத்தியில் எங்களுக்கு ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தைத் தாரும். நாங்கள் வழிவிலாகதபடி விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலைத் தாரும். உம்மை மட்டுமே பின்பற்ற உதவும். ஆமென். கேள்வி:
|