Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)
2. இயேசுவைப் பின்பற்றும் முறைகள் (மாற்கு 8:34-38)மாற்கு 8:34-38 இந்த வசனங்கள் மிகவும் ஆழமானவை. இவைகளை வியாக்கியானம்பண்ண பல புத்தகத் தொகுப்புகள் வேண்டும். எனவே இதயத்தில் இதைப் பதிய வையுங்கள். எல்லா நேரங்களிலும் மற்றவர்களுக்கு அவரைக் குறித்து எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் வாழ்வில் இவைகளை உணரும்படி கிறிஸ்துவிடம் கேளுங்கள். பரிசுத்த ஆவியில் மகிழ்ந்திருங்கள். பேதுரு கிறிஸ்துவை விசுவாசித்தான். அவரைப் பின்பற்ற தீர்மானித்தான். ஒருவனின் சொந்த மாம்சீக மனம் மற்றும் உணர்வுகள் இறைவனுடைய அரசுடன் இணைந்து செல்வதில்லை. பரிசுத்தமானவர்முன்பு ஒருவரும் நீதிமான் அல்ல. தன்னைத்தானே நியாயம் தீர்க்காதவன், தனது பாவங்களை அறிக்கையிடாதவன், தனது பெருமையை சாகடிக்காதவன் கிறிஸ்துவைப் பின்பற்ற தகுதியுள்ளவன் அல்ல. நமது சீஷத்துவத்தில் முதல் அடி என்பது சுய மறுப்பு ஆகும். எனவே நாம் நமக்கு செவி கொடுக்க வேண்டாம். நமது சுயநல ஆசைகளுக்கு “இல்லை” என்று சொல்லுவோம். நம்மை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். நம்மை நாமே கனப்படுத்தவோ அல்லது மகிமைப்படுத்தவோ வேண்டாம். ஏன் நமது “நான்” என்ற பெருமையான நிலைக்கு எதிர் நிலையை எடுக்கும்படி கிறிஸ்து நம்மிடம் கேட்கிறார். ஏனென்றால் நம்மை மையமாக கொண்டு செயல்படுவது நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் நச்சு போல பாதிக்கும். எனவே நமது சிந்தனைகள் கறைபடிகின்றன. நமது நற்செயல்கள் குறைவுள்ளதாக மாறுகின்றன. நீங்கள் உங்களை மறுதலிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? அல்லது நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? உங்கள் இச்சைகளை விட்டுவிடுகிறீர்களா? அல்லது உங்கள் பெருமையுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? இயேசு தன்னைத்தான் வெறுத்தார். தனது குடும்பத்தை துறந்தார். ஒவ்வொருவருக்கும் பணியாளனாக மாறினார். நீங்கள் உங்களையே உயர்வாக எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் தாழ்மையுள்ள இயேசுவை நீங்கள் சந்திக்கவில்லை. உங்களை வெறுத்து வாழுங்கள். நமது இறைவன் தாழ்மையுள்ள ஆண்டவர். இயேசு தமது சீஷர்களை இரண்டாவதுபடி நிலைக்கு அழைத்துச் சென்று கூறினார். “உன் சிலுவையை எடுத்துக் கொள்” அவர் தனது சொந்த சிலுவையைக் குறிப்பிடவில்லை. அவர் நிமித்தம் நமக்கு வரும் பிரச்சினைகள், பாடுகள், துன்பங்கள் பற்றி கூறுகிறார். அதே சமயத்தில் சிலுவையைக் குறித்த பொதுவான அர்த்தத்தோடும் அவர் பேசினார். சிலுவை என்பது குற்றவாளிகள், தப்பி ஓடிய அடிமைகளைத் தண்டிக்க ரோமர்கள் உருவாக்கியது ஆகும். சிலுவை என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தும் போது, நீங்கள் இறைவனுக்கு முன்பு குற்றவாளிகள், பாவத்தின் அடிமைகள், கீழ்ப்படியாதவர்கள், மரணம் தான் உங்கள் முடிவு என்பதைக் குறிப்பிடுகிறார். சுய வெறுப்பின் இரகசியத்தைக் குறித்து இயேசுவைப் பின்பற்றுபவர்களில் ஒருசிலர் மட்டுமே அறிந்துள்ளனர். நம்மைக் குறித்து நாம் அறிய வேண்டுமென்றால், முதலில் இறைவனைக் குறித்து நாம் அறிய வேண்டும். என்னைக் குறித்த அளவீடு என்பது எனது சிந்தனை அல்லது எனது உணர்வு அல்ல. மாறாக அது இறைவன், அவருடைய கட்டளைகள், அவருடைய சிறப்பான தன்மையைக் குறித்ததாகும். அவருக்கு முன்பு நாம் ஒன்றுமில்லை. நாம் அழிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் அன்புள்ள பரிசுத்த இறைவனை அறிந்திருந்தால் பாக்கியவான்கள். அப்போது நீங்கள் யார் என்பதையும், நீங்கள் முழுமையாக உடைக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அறிவீர்கள். நீங்கள் உங்களையே வெறுத்து, உங்களை நியாயம்தீர்க்கிறீர்களா? கீழ்ப்படிதலுள்ள சீஷனாக இயேசுவைப் பின்பற்றுங்கள். அவரிடமிருந்து வழிநடத்துதல், வல்லமை, ஆறுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். பவுல் இந்த நிலையை அனுபவித்தார். நன்கு அறியப்பட்ட தனது கூற்றின் மூலம் இதை விவரிக்கிறார். “நான் கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்”. மறுபடியும் நாங்கள் கூறுகிறோம்: நீங்கள் புகழ், வல்லமை, உலக வெற்றியைத் தேடினால், உங்கள் ஆவிக்குரிய வாழ்வு பலவீனமடையும். நீங்கள் பாவங்களில் மரித்தவர்களைப் போல மாறுவீர்கள். நீங்கள் இறைவனுடன் ஒப்புரவாக்கப்பட்டுள்ளதால், நன்றியுடன் உங்கள் வாழ்வை அவருக்குப் பலியிடுங்கள். வார்த்தை மற்றும் செயலினால் கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் என்றென்றும் சமாதானம், மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். நீங்கள் நற்கனிகளைக் கொடுப்பதினால் அல்ல, உங்களில் தங்கியுள்ள பரிசுத்த ஆவியானவர் தரும் நம்பிக்கை மற்றும் அன்பினால் அப்படியாகும். பரிசுத்த ஆவியானவர் புதுப்பிக்கிறார். உங்களில் தூய மனதை உருவாக்குகிறார். கிறிஸ்துவில் உள்ள புதிய வாழ்வு தான் மெய்யான வாழ்வு. அதை மட்டும் தான் வாழ்வு என்று அழைக்க முடியும். மற்ற அனைத்தும் துயரமும், குழப்பமும் நிறைந்ததாகும். மிகப்பெரிய செல்வம், ஆடம்பரக்காரர்களாக இருந்தும் பெரும் பணக்காரர்கள் தங்கள் தலையணையின் கீழ் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். காயப்பட்ட மனங்களுடன் அழகு ராணிகள் வாழ்கிறார்கள். இவர்கள் மகிழ்ச்சியற்ற மக்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தூய்மையாக்கப்படும் வரை அவர்கள் கவலையிலும், துயரத்திலும் இருப்பார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் புதுப்பிக்கப்பட வேண்டும். இயேசு இல்லாத ஒவ்வொரு மனிதனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான். அவன் இருதயத் தூய்மையை இழந்தவன். அவன் தொலைந்துபோனவன். தனது சொந்த முயற்சிகளால் மனிதன் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள முடியாதவன். இயேசு இல்லாமல் நீங்கள் தரித்திராகவும், இழந்துபோனவர்களாகவும், அழிவுக்கு ஏதுவானவர்களாகவும் இருக்கிறீர்கள். சுபாவத்தின்படி நீங்கள் அசுத்தர்களாகவும், துன்மார்க்கர்களாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்து மட்டுமே உலக இரட்சகர். அவருடைய இரட்சிப்பின் வார்த்தையைப் புறக்கணிப்பவர் அல்லது தள்ளிவிடுபவர் என்றென்றுமான அழிவை அடைவார்கள். அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்வோர் இந்த கீழ்ப்படியாத நமது உலகத்தில் அவருடைய வல்லமையை அறிக்கையிடுகிறார்கள். உலகின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் காண்கிறார்கள். தமது பிதாவின் மகிமையோடு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார். இப்போது அவரைப் பின்பற்றி வாழ்வோர் அவருடைய மகிமையின் பிரதிநிதிகள் ஆவார்கள். அவர் தமது அன்பின் ராஜ்யத்தை பூமியல் ஸ்தாபிப்பார். சுயத்திற்கு மரித்தவர்கள் அவருடைய ஆவியின் வல்லமையினால் அவருடன் வாழ்வார்கள். நீங்கள் உங்கள் இச்சைகளுக்கு இன்னும் அடிமைகளாக இருக்கிறீர்களா? அல்லது கிறிஸ்துவில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா? விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் உமது பரலோக மகிமையை விட்டு வந்தீர். உமக்கென்று எந்த மகிமையையும் தேடவில்லை. மனிதனாக வந்தீர். உமது பிதாவின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்தீர். எங்களை மெய்யான ஆவிக்குரிய வாழ்வுக்கு நேராக கொண்டு வருகிறீர். நீர் உம்மையே தாழ்த்தினீர், உம்மையே வெறுத்தீர். உமது பிதாவிடம் மறுபடியும் திரும்பிச் சென்றீர். பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தோடு நீர் என்றென்றும் பிதாவின் மகிமையோடு அராசாளுகிறீர். உமது சிந்தையை எங்களுக்கு கற்றுத்தாரும். நாங்கள் எங்களை வெறுத்து வாழ, சிலுவையில் எங்கள் இச்சைகளை அறைந்துவிட உதவும். நீர் விரும்புகிறபடி உமக்குப் பணி செய்யவும், மனிதர்களை நேசிக்கவும் கிருபை செய்யும். ஆமென். கேள்வி:
|