Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
5. கடற்கரையில் அமர்ந்திருந்த திரளான மக்களுக்கு இயேசு படவில் இருந்து பிரசங்கித்தார் (மாற்கு 4:1-34)
ஆ) ஆவிக்குரிய வளர்ச்சியின் விதிமுறையும், வீழ்ச்சியும் (மாற்கு 4:10-12)'''மாற்கு 4:10-12 கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டார்கள். அவர்கள் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. நாமும் அப்படித்தான் இருக்கிறோம். நமது மனித மனங்களைக் கொண்டு நாம் இறைவார்த்தையை அறிந்துகொள்ளவோ அல்லது ஆராயவோ முடியாது. நமது மனித மனம் குறுகியது. பரிசுத்த ஆவியின் சத்தத்தையோ அல்லது செய்தியையோ கேட்பது கடினமானதாகும். சீஷர்கள் ஞானமாக தங்கள் அறியாமையையும், குறைவுள்ள அறிவையும் ஒத்துக்கொண்டு, இயேசுவிடம் வந்தார்கள். அவரே ஞானத்தின் ஆதாரம். அவரிடம் இறைவார்த்தையின் அர்த்தம், வல்லமை, திட்டம் ஆகியவற்றை கேட்டார்கள். உங்கள் அந்தரங்க விண்ணப்ப நேரங்களில் கிறிஸ்துவிடம் வாருங்கள். அவருடைய வார்த்தையின் அர்த்தத்தை கேளுங்கள். நற்செய்தியை வாசிக்கும் போது உங்கள் சொந்த அர்த்தங்களை கொடுக்காதீர்கள். தாழ்மையுடன் மன்றாடுங்கள். அவர் உங்களில் பிரகாசிப்பார். அவருடைய சித்தத்தை தெளிவுப்படுத்துவார். அவருடைய வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதிக கனி கொடுக்கும்படி செய்கிறார். இயேசு தன்னிடத்தில் விசாரித்த சீஷர்களிடம் கூறினார்: “இறை ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படிக்கு உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் இறைவனுடைய குமாரனுடன் நெருங்கி வாழ்கிறீர்கள். அவருடைய அன்பு, பரிசுத்தம், வல்லமை மற்றும் அதிகாரம் உங்களுக்கு, இறைவார்த்தையை ஆழமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. கிறிஸ்துவுக்கு அருகில் இருப்பவர்கள், அவருடன் வாழ்பவர்கள் ஒளியூட்டப்பட்டு, இறைவனுடைய மகிமையைக் காண்கிறார்கள். இறைவனை அறிந்திருப்பதை அவர்கள் காண்பிக்கிறார்கள். இறைஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்களில் அவர் இருக்கிறார். ஆனால் இயேசுவை நம்பாதவன் அல்லது நேசிக்காதவன் இறைவனை மறுதலிக்கிறான். அவனது இருதயம் கடினப்படுகிறது. இவன் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு வெளியே இருக்கிறான். அதன் அருகில் வந்தாலும், அவரை நம்பாதவனாக இருக்கிறான். அவன் படிப்படியாக விலகிப் போகிறான். மனந்திரும்புதலின் வாய்ப்பை இழந்துபோகிறான். முடிவில் அவன் ஆண்டவருடைய ராஜ்யத்திற்குள் நுழைய முடியாதவனாகப் போகிறான். இப்படிப்பட்ட மக்கள் தங்கள் சொந்த மொழியில் நற்செய்தியின் வார்த்தையைக் கேட்கிறார்கள். அவர்களின் காதுகளில் ஒரு அந்நிய சத்தம் போல அது தொனிக்கிறது. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. நற்செய்தியின் ஆவியானவர் அவர்களின் மனங்களில் பிரவேசிப்பதில்லை. இயேசு அவர்களிடம் உவமைகள் மூலமாகப் பேசினார். அவர்கள் கண்களுக்கு முன்பு சத்தியத்தைக் காண்பித்தார். அவர்கள் மனந்திரும்ப விரும்பவில்லை. அவர்கள் தங்களையே நேசித்து, இறைவனை வெறுத்தார்கள். மன்னிப்பை அவர்கள் நாடவில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஓர் துக்கமான உண்மை உள்ளது. இறைவாழ்வை ஏற்றுக்கொள்வோர், கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டோர், சுயத்தை வெறுத்தோர் வளர்ச்சியடைந்து, அதிக ஆசீர்வாதங்களை, வளங்களை, இறைராஜ்யத்தின் மேன்மையை அடைகிறார்கள். ஆனால் தனது இருதயத்தை இறைவார்த்தையின் வல்லமைக்கு அடைத்துக்கொள்பவன், அதைப் புறக்கணிப்பவன், எல்லாவற்றையும் இழந்துபோகிறான். அவன் மனச்சாட்சியில் இருளடைந்து, ஆவிக்குரிய மரணம் அடைந்தவனாக இருக்கிறான். எனவே உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியடைகிறீர்களா அல்லது வீழ்ச்சியடைகிறீர்களா? விண்ணப்பம்: இரக்கமுள்ள ஆண்டவரே, எல்லா ஞானத்தின் இறைவனே, உமக்கு முன்பாக எங்கள் முட்டாள்தனத்தையும் எங்கள் அறிவுக் குறைவையும், முழுமையற்ற மனந்திரும்புதலையும் அறிக்கையிடுகிறோம். எங்கள் இருதயங்கள், எங்கள் மனங்களைத் திறந்தருளும். உமது வார்த்தைக்கு எங்கள் செவிகளைத் திறந்தருளும். உமது அன்பின் வழிகளை உணர்ந்துகொள்ள எங்களுக்கு உதவும். எல்லா நேரங்களிலும் விசுவாசத்துடன் கீழ்ப்படிய எங்களுக்கு உதவும். தகப்பனைப் போனற உமது மன்னிப்பிற்காகவும், உமது எச்சரிப்பின் வார்த்தைகளுக்காகவும், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை விட்டு விலகாதிருந்து, எங்களை இரட்சியும். ஆமென். கேள்வி:
|