Previous Lesson -- Next Lesson
7. கிறிஸ்து மறுபடியும் வருகிறார் என்ற அறிவினால் ஏற்படும் நடைமுறை விளைவு (ரோமர் 13:11-14)
ரோமர் 13:11-14
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. 12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். 14 துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் உடனடி வருகைக்காக ரோம சபை மக்கள் காத்திருந்ததாக அப்போஸ்தலன் தனது நிரூபத்தில் குறிப்பிடுகிறான். இறுதி நாட்களின் அடையாளங்களை விசுவாசிகள் உணர்ந்தார்கள். ரோம் பேரரசர்களில் அந்திக் கிறிஸ்துவின் வல்லமை வெளிப்படுவதை கண்டார்கள். இறை மைந்தன் மகிமையில் வருவதையும், அவர்களுடைய பரலோக நாட்டிற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவதையும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆவிக்குரிய கவனக்குறைவில் கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் தொடர்ந்திருக்காதபடி அப்போஸ்தலன் கேட்டுக்கொண்டான். ஆவிக்குரிய போராட்டத்தை உணர வேண்டும். முழுமையான இரட்சிப்பை அறிய வேண்டும். அதை நம்மில் தொடங்கிய பரிசுத்த ஆவியானவர் நமது விடுதலையின் அச்சாரமாக இருக்கிறார். அவர் கிறிஸ்து தமது மகிமையில் வருவதை நினைவுபடுத்துகிறார். நம்மை அவரது வல்லமை, மகிமை மற்றும் இரக்கத்தினால் உடுத்துவிக்கிறார். இரவு சென்று போயிற்று. பகல் சமீபமாயிற்று. அது புதிய நாளில் நிச்சயம் ஒளி பிரகாசிப்பதை கூறுகின்றது. நமது வாழ்வு என்பது நித்தியத்தில் நாம் பிரவேசிப்பதற்கான ஆயத்தம் என்பதை பவுல் உணர்ந்து கொண்டான். பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் இதைப் பெறுகிறோம்.
இந்த அறிவை பெற்றுக் கொண்ட அப்போஸ்தலன் கூறுகிறான். “அந்தகாரக் கிரியைகளை தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை தரித்துக் கொள்ளுங்கள்”. உனது வாழ்வில் இருந்து பாவத்தை அகற்றிவிடு. அவரது ஆவியின் பலத்தினால் கிறிஸ்துவின் குணாதிசயங்களால் உன்னை அலங்கரித்துக்கொள். நமது வாழ்வில், நமது சபைகளில் இருளிற்கு நாம் எதிர்த்து நிற்கும் போது எழுப்புதல் ஏற்படுகின்றது. நமது வாழ்வு மற்றும் நமது பாடுகளில் பரிசுத்த ஆவியின் கனிகளும், நற்செய்தியும் நிச்சயமாக வெளிப்படுகின்றன.
இறைவனை அறியாத மக்கள் தங்கள் சொந்த விருப்பங்கள் இச்சைகளால் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்கள் உண்கிறார்கள், குடிக்கிறார்கள், பெற்றெடுக்கிறார்கள். அவர்கள் மத்தியில் பகை, பொறாமை, கஞ்சத்தனம் காணப்படுகின்றன. இறைவனற்ற அன்பு தீமை, அசுத்தம், கறை நிறைந்ததாக உள்ளது. மற்றவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி வெட்கமின்றி தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றுகிறார்கள்.
இருளின் மக்களுடைய செயல்களை அப்போஸ்தலன் தனது வாழ்விலும் அனுபவித்திருந்தான். மேலும் அவன் கிறிஸ்து தரும் புது வாழ்வையும் அனுபவித்திருந்தான். அவர்கள் விசுவாசத்தில் திருப்தியைக் காணும்படி ரோம் சபை விசுவாசிகளை கேட்டுக்கொண்டான். இயேசுவின் குணாதிசயங்களை முக்கியப்படுத்தினான். அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தான். தலைமைத்துவம் மற்றும் வழிநடத்துதலில் பரிசுத்த ஆவியின் ஆளுகை காணப்பட்டது. அவர்களிலும் ஆவியின் கனிகள் வெளிப்பட வேண்டும்.
பிரியமான சகோதரனே, உன்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீ கிறிஸ்துவில் இருக்கிறாயா? அல்லது சுயநலத்துடன், ஆண்டவருக்காக வாழாமல் உனக்காக வாழ்கிறாயா? பணஆசை, இச்சை, பெருமை, சுய சார்பில் இருந்து இயேசு உன்னை விடுவித்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மற்றும் நமது சரீரம், பாவ சிந்தனைகளுக்கு இடையில் உள்ள போராட்டம் கிறிஸ்துவின் வருகைக்கான நமது ஆயத்தத்தின் சாராம்சம் ஆகும்.
எனவே ஆவிக்குரிய ஆயுதங்களை தரித்துக் கொள்ளும்படி அப்போஸ்தலன் அழைக்கிறான் பகைவர்களிடம் சண்டை போடுவதற்கல்ல, சோதனைகள் மற்றும் மாம்ச இச்சைகளை மேற்கொள்ளவும், கிறிஸ்துவின் அன்பு மற்றும் பரிசுத்தத்தினால் நிறைந்திருக்கவும் அழைக்கிறான்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். உமது குமாரனாகிய இயேசு எங்களுக்கு ஒரு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்துள்ளார். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிறிஸ்துவை நாங்கள் தரித்துக் கொள்ள உதவும். எங்களுடைய அன்பினால் இரட்சகர், கர்த்தாதி கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தப்படுகின்ற உண்மையுள்ள விசுவாசிகளாக இருக்க உதவி செய்யும்.
கேள்வி:
- கிறிஸ்துவின் உடனடி வருகையைக் குறித்த அறிவு எந்த குணங்களை நம்மில் கொண்டு வருகிறது?